செவ்வாய், 8 மே, 2012

இனிய திசைகள் மே -2012

படியுங்கள் இனிய திசைகள் 
மே மாதம்இனிய திசைகள் 2012

தாயகம் திரும்புங்க!


-பாகவியார்

அன்வர் வெளிநாடு சென்று ஏறக்குறைய பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. ஈராண்டுகளுக்கு ஒரு தடவை நாற்பது நாள் விடுமுறையில் தாயகம் வருவது வழக்கம். இதன்படி அவன் தன் மனைவியோடு வாழ்ந்த காலம் 200 நாள்கள் மட்டுமே. திருமணம் முடித்த பத்தே நாள்களில் வெளிநாடு சென்றவன் இன்றைக்கு அவன்தன் இளமையில் பாதியை சவூதியிலேயே கழித்துவிட்டான் என்பதைவிடத் தொலைத்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்த அவன் படித்துக்கொண்டிருந்தபோதே சவூதி செல்ல வேண்டும் என்ற ஆசை எப்படியோ தொற்றிக்கொண்டதால் அதற்குமேல் படிப்பில் அவனுக்கு ஆர்வம் இல்லை.

அதன்பிறகு பாஸ்போர்ட் எடுப்பதிலும் உறவினர்களிடம் விசாவை அனுப்பச் சொல்வதிலுமே சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு வழியாக தன் அக்காவின் கணவர் மூலம் ஒரு விசா வந்தடைந்ததும் அவனுக்கோ அளவிலா மகிழ்ச்சி. முதல் தடவை சென்று ஈராண்டுகள் கழித்துத் தாயகம் வந்ததும் அவனுடைய மதிப்பே உயர்ந்துவிட்டது.

அவன் சவூதி செல்வதற்குமுன் ஊர்சுத்தி அன்வர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டவன் இன்று சவூதி மாப்பிள்ளை என்று மற்றவர்களெல்லாம் அழைத்ததும் அவனுக்கு இதயமே குளிர்ந்துவிட்டது. உறவுக்காரப் பெண்ணையே அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். திருமணம் முடிந்து தன் மனைவியோடு மகிழ்ச்சியாகக் கழித்துக்கொண்டிருந்தபோதே விடுமுறை நாள்கள் முடிவுக்கு வந்தன. புதுமனைவியோடு முழுமையாக வாழ முடியாமல் ஏக்கத்தோடே மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான்.

அன்று தொடங்கிய பயணம் இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொரு தடவையும் ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவதும் மீண்டும் சவூதி செல்வதும் அவன் வாழ்க்கையில் தொடர்ந்துகொண்டிருந்தன. வெண்பாலைவன வெயிலில் நாள்தோறும் படும் சிரமமும் தொல்லைகளும் அவனை நிம்மதியிழக்கச் செய்தன.

அன்றொரு நாள், வேலை பார்த்துக் களைத்துப் போயிருந்த அன்வருக்குக் கண்கள் சொக்கின. படுக்கத் தயாரானபோது அவனுடைய அன்பு மனைவி மொபைலில் அழைத்தாள். அன்போடு எடுத்துப் பேசியதும் அவனுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. அவளுக்கும்தான்.

அவள் பேச்சைத் தொடர்ந்தாள். என்னங்க, நான் இன்னைக்கி வெள்ளிக்கிழமை பயான் கேட்க பள்ளிவாசலுக்குப் போயிருந்தேன். ஹஜ்ரத் உடைய பயானைக் கேட்டதும் எனக்கே இனம்புரியாத ஒரு மாற்றம் வந்துருச்சுங்க. ஏழையாகவோ, நடுத்தரமாகவோ, பணக்காரியாகவோ எப்டி வாழ்ந்தாலும் ஒரே வாழ்க்கைதானேங்க. ஒரு சாண் வயித்துக்கு எதைச் சாப்பிட்டா என்னங்க. நம்மைவிட ஏழையாக இருந்தும் எத்தனையோ பேர் சந்தோஷமாத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அப்படி இருக்கும்போது நீங்க ஏன் வெளிநாட்டுல சிரமப்படணும்?

சாப்புடுவது இருபது ரூபா அரிசியா இருந்தாலும் நாம் இருவரும் ஒன்னா இருந்து சாப்பிட்டாத்தான் சந்தோஷமா இருக்கும். நமக்கு மூணு பொம்பளப் புள்ளைங்க இருந்தாலும் இப்ப அதப் பத்தி கவலையே இல்லீங்க. ஏன்னா, நம்ம ஊர்ல யாரும் வரதட்சணை வாங்கக் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்க. போன வாரம்கூட எங்க அக்கா மகளுக்குக் கல்யாணம் நடந்துச்சு. மாப்பிள்ளை நல்லா படிச்சவரு. வரதட்சணை எதுவுமே வாங்கலை. எங்க அக்காவா பாத்து தன்னால முடிஞ்சதப் போட்டாங்க. அவ்வளவுதான். இனி பொம்பளைப் புள்ளையப் பெத்தாக்க நம்ம ஊர்ல எந்தக் கவலையும் இல்லீங்க.  அதனால நீங்க இவ்வளவு காலம் சிரமப்பட்டது போதுமுங்க. கூடிய சீக்கிரம் நம்ம ஊருக்கு வந்துருங்க. இங்கேயே ஏதாவது நீங்க வேலையப் பாத்துக்குட்டு, நாம ரெண்டுபேரும் சேர்ந்து சந்தோஷமா வாழலாம் என்று சொல்லி முடித்தாள். இதையெல்லாம் கேட்கக் கேட்க அன்வரின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. தாயகம் திரும்பப்போற மகிழ்ச்சியில் அன்றிரவு நிம்மதியாக உறங்கினான். ---