வியாழன், 16 நவம்பர், 2017

நீடூர் அரபுக்கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் ஆய்வரங்கம்!


நீடூர்-நெய்வாசலில் அமைந்துள்ள ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியில் அக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஸில் பாகவியின் தலைமையில் 01.11.2017 அன்று "அறிவியல் அரங்கில் அல்குர்ஆன்'  எனும் தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவர் நூருல் அமீன் கிராஅத் ஓதினார். ஜைனுல் ஆபிதீன் நபிபுகழ் கீதமிசைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரிப் பேராசிரியர் மௌலானா ஸஃபியுல்லாஹ் ஃபாஸில் பாகவி வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் இக்கல்லூரியின் மாணவர்கள் ஏழுபேர் ஆய்வுரையைச் சமர்ப்பித்தார்கள். எர்ணாகுளம் ஷபீர் "வானவியல் பேசும் வான்மறை' எனும் தலைப்பிலும், மலப்புரம் ஷாஃபி "மேகங்கள் பற்றி மாமறை' எனும் தலைப்பிலும், முஹம்மது அலீ "மரபணு பற்றி மறைகூறும் உண்மை' எனும் தலைப்பிலும், முஹம்மது அப்ரார் "நோய் பரவச் செய்யும் கிருமிகள்' எனும் தலைப்பிலும், பைஜுர் ரஹ்மான் "மனிதப் படைப்பைக் கூறும் திருமறை' எனும் தலைப்பிலும், ஷேக் நவ்தில் "புவியீர்ப்பு ஆற்றல் குறித்துப் புனிதக்குர்ஆன்' எனும் தலைப்பிலும், முஹம்மது அபூபக்கர் சித்தீக் "கடல்பற்றி எழில்மறை' எனும் தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினார்கள்.

இனிய திசைகள் துணையாசிரியர் முனைவர் மௌலானா மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி நடுவராகப் பங்கேற்று, மாணவர்கள் வழங்கிய ஆய்வுரையைக் கவனமாகக் கேட்டு, இறுதியில் தொகுப்புரை வழங்கினார். மரபணு பற்றி ஆய்வுரை வழங்கிய முஹம்மது அலீ முதலாம் பரிசையும் வானவியல் குறித்து ஆய்வுரை வழங்கிய எர்ணாகுளம் ஷபீர் இரண்டாம் பரிசையும் புவியீர்ப்பு ஆற்றல் குறித்து ஆய்வுரை வழங்கிய ஷேக் நவ்தில் மூன்றாம் பரிசையும் பெற்றனர். ஆய்வுரை வழங்கிய அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 

மௌலானா மௌலவி முஹ்யித்தீன் அப்துல் காதர் ஃபாஸில் மன்பஈ, மௌலானா மௌலவி புகாரி ஃபாஸில் அன்வாரி, மௌலானா மௌலவி முஹம்மது ஷுஹைப் மிஸ்பாஹி, மௌலானா மௌலவி எம். ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி ஃபாஸில் மழாஹிரி, அப்துர் ரஹ்மான் பாகவி (சத்தியமங்கலம்) உள்ளிட்ட இக்கல்லூரிப் பேராசிரியர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டார்கள். அவைத்தலைவரின் துஆவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.      -பாகவியார்
=======================================================









கருத்துகள் இல்லை: