சனி, 22 நவம்பர், 2025

ஈயும் கையே மேலானது


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28    


நம்முள் சிலர் செல்வ நிலையில் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். வேறு சிலர் ஏழைகளாக வாழ்கின்றார்கள். அல்லாஹ் நினைத்திருந்தால் மனிதர்கள் அனைவரையும் சமநிலையில் ஆக்கியிருக்கலாம். ஆனால் இரு சாராரையும் சோதிக்கும் விதமாகவே இரு வேறு நிலைகளில் படைத்துள்ளான். செல்வ நிலையில் உள்ளவன், தனக்கு வழங்கப்பட்ட செல்வத்தை ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கின்றானா என்று சோதிக்கின்றான்.  ஏழை தனது ஏழ்மை நிலையிலும் நேர்மை தவறாது வாழ்ந்து, பிறரிடம் கையேந்தாமல் தன்னிடம் மட்டுமே கையேந்துகிறானா என்று சோதிக்கின்றான்.

 

செல்வம் வழங்கப்பட்டவன், தன் செல்வத்தைத் தானும் அனுபவித்து, பிறருக்கும் தர்மம் செய்வதில்தான் மகிழ்ச்சியிருக்கிறது; நன்மை கிடைக்கிறது. ஏழைகள் சிலர் வாய்விட்டுக் கேட்கலாம்; கையேந்தலாம். வேறு சிலர் தன்மானத்தைக் காப்பதற்காக யாரிடமும் கையேந்தாமல் இருப்பார்கள்; தம் ஏழ்மைநிலை பிறருக்குத் தெரியக் கூடாது என்று மறைப்பார்கள். ஆக இரு வகையான மனிதர்களுக்கும் தர்மம் செய்தல் செல்வர்கள்மீது கடமையாகும். இவ்வாறு இரு வகையான மனிதர்கள் இருப்பதால்தான், தானம், தர்மம் எனத் தமிழில் இரண்டு வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளன.

 

நம்மிடம் கையேந்திக் கேட்போருக்கு நாம் ஈவது தானம் ஆகும். பிறரிடம் கையேந்திக் கேட்காமல், தம் வறுமையைப் பிறரிடம் சொல்லிப் புலம்பாமல், தன்மானத்தோடு வாழ்வோரை நாமாகத் தேடிக் கண்டறிந்து ஈவது தர்மம் ஆகும். ஆக இரு சாராருக்கும் நாம் ஈய வேண்டும். அதற்காகவே நாம் செல்வம் வழங்கப்பட்டுள்ளோம்.  அதேநேரத்தில் ஏழையாக உள்ளவன் தன் ஏழ்மை நிலையிலும் மக்களிடம் கேட்காமல் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப்பெறுவேன் என்ற வைராக்கிய உள்ளம் கொண்டவனாக இருந்தால் அல்லாஹ் அவனை அப்படியே ஆக்கிவிடுவான். “யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடத்தில் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்”. (புகாரீ: 1427-1428)

 

தர்மம் செல்வத்தைக் குறைக்காது: செல்வ நிலையில் உள்ளவன் தன் செல்வத்தைப் பிறருக்குச் செலவழிக்க அஞ்சுவான்; அந்த அச்சத்தை மனித விரோதி ஜைத்தான்தான் அவனது உள்ளத்தில் தோன்றச் செய்வான். அந்த அச்சத்தைப் போக்கும் விதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “தர்மம் செய்வது செல்வத்தைக் குறைக்காதுஎன்று கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்) நபியவர்களை நேசிக்கக்கூடிய நாம், அவர்களது கூற்றின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். அவர்களின் கூற்றை நாம் நம்பியுள்ளது உண்மையெனில், தர்மம் செய்வதால் நம் செல்வம் குறைந்துவிடும் என்னும் எண்ணத்தை நம் மனத்திலிருந்து தூக்கியெறிந்துவிட்டு,  மிகத் தாராளமாக ஏழைகளுக்கு ஈவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

 

செல்வராக வழியென்ன?: ஒருவர் செல்வராக வேண்டுமெனில், முதலில் பிறருக்குத் தர்மம் கொடுக்கத் தொடங்க வேண்டும். நாம் பிறருக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டாலே, நாம் செல்வராக உயரத் தொடங்கிவிட்டோம் என்று பொருள். ஏனெனில் கொடுப்பதால் குறையாதுஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிவிட்டதால் நாம் கொடுக்கத் தொடங்கிவிட்டோம். அதனால் நாம் செல்வராக மாறிவிட்டோம். ஏனெனில் உயர்ந்த (ஈயும்) கை, தாழ்ந்த (வாங்கும்) கையைவிடச் சிறந்தது” (புகாரீ: 1427-1428) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். அதன் அடிப்படையில், நாம் ஈவதால் உயர்வடைகிறோம்.

 

விரைந்து தர்மம் செய்: அறம் செய விரும்பு, ஈவதுவிலக்கேல், ஐயமிட்டு உண் ஆகிய முதுமொழிகள் தர்மம் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. அதையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாழ்நாளில் செய்தும் காட்டியுள்ளார்கள்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்துவிட்டு உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் -அல்லது கேட்கப்பட்டது -அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; அப்பொருளுடன் இரவைக் கழிக்க விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்துவிட்டேன்''  எனக் கூறியதாக உக்பா பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள். (புகாரீ: 1430)

 

நாலடியார் எனும் நூலில் தர்மத்தின் உயர்வு குறித்தும் அதை உடனடியாகச் செய்துவிட வேண்டும் என்பது குறித்தும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை' என்றெண்ணி,

இன்னினியே செய்க அறவினை- ‘இன்னினியே 

நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் 

சென்றான்' எனப்படுத லான்! (பாடல்: 29, அதிகாரம்: யாக்கை நிலையாமை)

இப்பொழுதுதான் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அப்புறம் உட்கார்ந்தான்; அப்புறம் படுத்தான்; அப்புறம் தன் உறவினர்கள் அலறித் துடிதுடிக்க இறந்து போய்விட்டான்!' இப்படி உடலின் நிலையாமை பற்றிச் சொல்லப்படுவதால், 'புல்லின் நுனியின் மேலாக இருக்கும் நீர்த்துளியைப் போன்று யாக்கையும் நிலையாமை உடையது' என்று எண்ணி, இப்பொழுதே அறச்செயல்களைச் செய்வதில் ஈடுபடுங்கள்.

 

அதாவது புல்லின் நுனியில் உள்ள பனித்துளி சூரியன் வந்ததும் காய்ந்து மறைந்துவிடும். அதுபோல் இந்த உடலும் மிக விரைவில் மரணத்தின்மூலம் அழியத்தான் போகிறது. அதற்குள் விரைவாகத் தர்மம் செய்துகொள் என்று அப்பாடல் கூறுகிறது. எனவே தர்மம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் விரைந்து அதைச் செய்துவிட வேண்டும். இல்லையேல் மனம் மாறிவிடும். பிறகு செய்துகொள்ளலாம் என்றெண்ணினால் ஷைத்தான் நம் மனதை  மாற்றிவிடுவான்.  

 

வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்: நாம் உழைத்துச் சம்பாதித்த பணத்திலிருந்து தர்மம் செய்யும்போது நாம்தாம் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில் அத்தகைய நல்வாய்ப்பை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். அந்த வாய்ப்பை நாம் ஒவ்வொரு நாளும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே நம்மிடம் கையேந்தும் ஏழைகளைக் கண்டு நாம் கோபப்படக்கூடாது. மாறாக அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து, பேருவகையோடு அவர்களுக்கு ஈந்து, அவர்களிடம் நன்றியுணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நாம் தர்மம் செய்து நன்மையை ஈட்டிக்கொள்ள அந்த ஏழைதான் காரணமாக அமைந்தான்; அவன்தான் நாம் வழங்கும் தர்மத்தை ஏற்றுக்கொண்டான். நாம் வழங்கும் தர்மத்தை அவன் ஏற்றுக்கொள்ளவில்லையானால் நாம் நன்மையை எவ்வாறு ஈட்ட முடியும்?

 

இதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:  “தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவார்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், "நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே!'' என்று கூறுவான். (புகாரீ: 1411) எனவே நாம் தர்மம் வழங்குவதற்கான நல்வாய்ப்பை நல்கும் ஏழைகள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிற இக்காலம் நமக்கான பொற்காலம் ஆகும். ஏனெனில் அவர்கள் மூலமே நாம் நன்மைகளை ஈட்டிக்கொள்கிறோம்.

 

இழந்த நிலையிலும் ஈகை: ஒருவர் செல்வ நிலையில் இருக்கும்போது தர்மம் கொடுப்பது அவ்வளவு பெரிதன்று. ஒருவர் தம் பொருளை இழந்த நிலையிலும், தம் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்ட நிலையிலும், துக்கமான நிலையிலும் துவண்டு விடாமல் தர்மம் செய்வதுதான் மிகவும் பாராட்டுக்குரியதாகும். மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மத்ரஸாவிற்கோ பள்ளிவாசலுக்கோ ஓர் ஏழைக்கோ நன்கொடையாகக் கொடுத்து வருகிற ஒருவர், குறிப்பிட்ட அந்த மாதத்தில் தம் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்ட நிலையிலும், வழமையாக வழங்கி வருகிற நன்கொடையை நிறுத்திவிடாமல் கொடுத்துவிடுகிறார் என்றால், அவர் மிகவும் பாராட்டுக்குரியவர் ஆவார். அவர் செய்த அந்த நன்கொடையின் அபிவிருத்தியால், அவர் ஏற்கெனவே இழந்ததையெல்லாம் அல்லாஹ் மீண்டும் அவருக்குத் திருப்பிக்கொடுப்பான். அவரது வியாபாரத்தில் முன்பைவிட அதிகமாக அபிவிருத்தி செய்வான்.  மேலும் இத்தகையோரை அல்லாஹ் பாராட்டிப் பேசுகிறான்: செழுமையிலும் சிரமத்திலும் அவர்கள் (தர்மமாகச்) செலவு செய்வார்கள். (3: 134)

 

ஈகையா, உபரித்தொழுகையா: கடமையான தொழுகைகளைத் தவறாமல் நிறைவேற்றுவதோடு உபரியான தொழுகைகளையும் நிறைவேற்றுவதன்மூலமே ஒருவன் தன் இறைவனை நெருங்க இயலும். அவ்வாறு இருக்கும்போது கடமையான தொழுகைகளை மட்டும் நிறைவேற்றுபவன் அல்லாஹ்வால் விரும்பப்படுபவனாகவும் இறைநெருக்கத்தைப் பெற்றவனாகவும் முடியுமா? ஆம். ஏழைகளுக்குத் தர்மம் கொடுக்கக்கூடிய கொடையுள்ளம் கொண்டவன் உபரியான தொழுகைகளைத் தொழாவிட்டாலும் அவனது ஈகைக் குணத்தால் அல்லாஹ்வால் விரும்பப்படுகிறான். அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்: “கொடையுள்ளம் கொண்ட அறிவிலி,  கருமித்தனம் கொண்ட வணக்கசாலியைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவன் ஆவான். (திர்மிதீ: 1884)

 

சேர்த்து வைத்துக்கொள்ளாதே: தர்மம் செய்யாமல் சேர்த்துச் சேர்த்து வைத்துக்கொள்வர் சிலர். அத்தகையோர் தம் செல்வம் வளர்வதாக எண்ணிக்கொள்வர். அவர்களின் செல்வம் வளர்ச்சியடைவதில்லை. மாறாக அழிந்துகொண்டுதான் இருக்கிறது.  ஏனெனில் நாம் தர்மம் செய்யும்போதுதான் அது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைகிறது. தர்மம் செய்வோருக்கே அல்லாஹ் வளர்ச்சியை ஏற்படுத்துகிறான்; அதில் அபிவிருத்தி செய்கின்றான். தர்மம் செய்யாதோருக்கு அபிவிருத்தி செய்வதில்லை.  

 

நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக்கொள்ளாதே! அல்லாஹ் உன்மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (எனவே) உன் சக்திக்கேற்பச் சிறிதளவாவது தர்மம் செய்!” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள். (புகாரீ: 1434)

 

அல்லாஹ் கூறுகிறான்: யார் அல்லாஹ்வுடைய உவப்பை நாடி மனப்பூர்வமாக தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களு(டைய தர்மத்து)க்கு உவமை, மேடான பூமியிலுள்ள ஒரு தோட்டம் போன்றதாகும். அதில் பெருமழை பெய்யும் பொழுது தனது கனிகளை அது இரட்டிப்பாகத் தருகின்றது. பெருமழை அதில் பெய்யவில்லை என்றாலும் இலேசான தூறல்கூட அதற்குப் போதுமானதாகும். (2: 265)

 

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர். (குறள்: 228) ஏழை எளியோர்க்கு எதுவும் ஈந்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? என்று கலைஞர் கருணாநிதி இக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

 

ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலில் இடம்பெற்றுள்ள ஈயார் தேட்டை தீயார் கொள்வர்" என்ற பழமொழியின் பொருள், வறியவர்களுக்குக் கொடுக்காதவர்களின் சம்பாத்தியத்தைத் திருடர்கள் போன்ற தீயவர்கள் அபகரித்துக்கொள்வார்கள் என்பதாகும். ஒருவர் தாம் ஈட்டிய பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தம்மிடமே வைத்துக்கொண்டால், அது தீயவர்களின் கையில் போய்விடும் என்பதைக் குறிக்கிறது.

 

தர்மத்தின் முக்கியத்துவம்:  எல்லோரும் தர்மம் செய்ய வேண்டும் என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.  பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோர்,  எங்களால் தர்மம் செய்ய இயலாது என்று சொல்ல முடியாத அளவிற்கு நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். “பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்து) நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 1417) இதன்மூலம் ஒவ்வொருவரும் தத்தம் பொருளாதார நிலைக்கேற்பத் தர்மம் செய்ய வேண்டும் என்பதை அறிகிறோம். மேலும் தர்மம் செய்வதால் நரகத்திலிருந்து நமக்கு விடுதலையும் கிடைக்கிறது.

 

எனவே ஈயும் கையே மேலானதுஎன்ற அடிப்படையில் நம்மால் இயன்ற அளவிற்குப் பிறருக்கு ஈந்து, அதன்மூலம் ஈருலகிலும் வளத்தோடு வாழப் பேரிறைவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக.  

==========================================

வியாழன், 20 நவம்பர், 2025

கஞ்சத்தனம் தவிர்ப்போம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

“கஞ்சத்தனத்தைவிட்டுப் பாதுகாக்கப்பட்டோரே வெற்றியாளர்கள்” (64: 16) என்ற இறைவசனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இறைவன் வாரி வழங்கிய செல்வத்தை அவனது திருப்தியை நாடி ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் தானமாகச் செலவழிக்காமல் செல்வத்தைச் சேர்த்துச் சேர்த்துத் தேக்கி வைத்துக்கொள்வதால் எந்த நன்மையும் இல்லை. செல்வத்தைச் சேர்த்து வைத்துக்கொள்வதால் அதனுடைய சுழற்சி தடைபட்டுவிடுகிறது. பணம் என்பது நாலாப்புறமும் தடையின்றிச் சுற்றிவந்தால்தான் அது எல்லோரின் தேவையையும் நிறைவு செய்வதாக அமையும்.

 

நண்பர்கள் மூவர் சந்தித்துக்கொண்டார்கள். அவர்கள் தமக்குள் பெற்ற கடனை நிறைவேற்ற எண்ணினார்கள். முதலாமவனிடம் இரண்டாமவன் பெற்ற இருநூறு ரூபாயில் நூறு ரூபாயைத் தற்போது திருப்பித் தருவதாகக் கூறி, அவனிடம் கொடுத்தான். அதைப் பார்த்த மூன்றாமவன் முதலாமவனிடம்,  “என்னிடம் வாங்கிய இருநூறைத் திருப்பிக்கொடு” என்றான். “இப்போது நூறை வைத்துக்கொள்; பிறகு நூறைத் தருகிறேன்” என்று சொல்லி, அதை அவனிடம் கொடுத்தான். அதைப் பார்த்த இரண்டாமவன்  மூன்றாமவனிடம், “என்னிடம் வாங்கிய இருநூறைத் திருப்பிக் கொடு” என்றான். “இப்போது நூறை வைத்துக்கொள்; பிறகு நூறைத் தருகிறேன் என்று சொல்லி, அதை அவனிடம் கொடுத்தான். அதைப் பார்த்த முதலாமவன், “எஞ்சிய நூறை எனக்குத் திருப்பிக்கொடு” என்றான். அதை முதலாமவனிடம் கொடுத்தான்... இவ்வாறு அவர்கள் மூவர் வாங்கிய கடன் ஒரே நூறு ரூபாயில் தீர்ந்தது.  இவ்வாறுதான் பணத்தின் இடப்பெயர்ச்சி பல்வேறு மனிதர்களின் தேவையை நிறைவேற்றுகிறது.

 

ஒருவன் தன்னிடமுள்ள பணத்தைச் செலவு செய்வதால் அது இடம்விட்டு இடம் மாறுகிறது. ஒரு கையிலிருந்து வேறொரு கைக்கு மாறுவதால் அது மற்றொருவனுக்குப் பயன்படுகிறது. ஒருவன் காய்கறிக் கடையில் காய்கறி வாங்கினால், அந்தப் பணம் சந்தைக்குப் போகும். அங்குச் செலவு செய்யும்  பணம் மொத்த வியாபாரிக்குச் செல்லும். அவர் விவசாயியிடம் கொடுப்பார். அதைப் பெறுகிற விவசாயி மீண்டும் பயிரிடத் தொடங்குவார். பின்னர் அவரிடமிருந்து மொத்த வியாபாரி காய்கறிகளை வாங்குவார். இப்படியே இது ஒரு சங்கிலித் தொடராகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும்.

 

இன்றைய பெரும்பாலான மக்களின் வறுமைக்குக் காரணம் பணம் குறிப்பிட்ட சில இடங்களில் தேங்கிக் கிடப்பதுதான். அரசியல்வாதிகள், செல்வர்கள், பெருமுதலாளிகள் உள்ளிட்டோர் பெருமளவில் பணத்தைச் சேமித்து வைத்துள்ளதால் அதன் சுழற்சி தடைபட்டுள்ளது. அதனால் ஏழ்மை பரவலாக உள்ளது. எல்லோருமே தாராளமாகச் செலவு செய்யவும், ஏழைகளுக்குத் தர்மம் வழங்கவும் தொடங்கிவிட்டால் ஏழ்மை எவ்வாறு எஞ்சியிருக்கும்?

   

ஒருவனைச் செலவு செய்யவிடாமல் தடுப்பது அவனது கஞ்சத்தனம்தான். அந்த உணர்வை மனித மனங்களில் போடுபவன் மனிதகுல விரோதியான ஷைத்தானே ஆவான். மனிதன் நன்மைகளை அடைந்துவிடக்கூடாது எனத் தடுப்பதில் அவன் சூழ்ச்சிக்காரன். குற்றச் செயல்களைச் செய்யத் தூண்டுவது மட்டுமின்றி, நன்மைகளைச்  செய்யவிடாமல் தடுக்கும் வேலையையும் அவன் செய்கிறான். அந்த வகையில் மனிதன் அல்லாஹ்வின் அன்பைப் பெறும் நோக்கில், அவனது பாதையில் தர்மம் செய்து நன்மைகளை ஈட்டிவிடக்கூடாது என்ற தீய எண்ணத்தில் அவனைச் செலவு செய்யவிடாமல் தடுக்கின்றான். அத்தோடு கஞ்சத்தனத்தை அவனது மனத்தில் விதைக்கின்றான். எனவே நாம் அவனுடைய சூழ்ச்சி வலைக்குள் சிக்கிவிடாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.

 

அந்த அடிப்படையில்தான், “கஞ்சத்தனத்தைவிட்டுப் பாதுகாக்கப்பட்டோரே வெற்றியாளர்கள்” (64: 16) என்னும் இறைவசனத்தை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே நாம் கஞ்சத்தனம் செய்யாமல், நம் செல்வத்தை அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவு செய்தால்தான் ஷைத்தானின் சூழ்ச்சி வலையை முறியடிக்க முடியும்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரை நிகழ்த்தியபோது கூறினார்கள்: “கஞ்சத்தனம் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் உங்களுக்கு முன்சென்ற சமுதாயத்தினர் கஞ்சத்தனம் செய்ததால்தான் அழிந்து போனார்கள். அவர்களின் கஞ்சத்தனம் அவர்கள் தர்மம் செய்ய வேண்டாமெனக் கட்டளையிட்டது. எனவே அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். அவர்களின் கஞ்சத்தனம் உறவினர்களைத் துண்டித்து வாழக் கட்டளையிட்டது. எனவே அவர்கள் உறவினர்களைத் துண்டித்து வாழ்ந்தார்கள். கஞ்சத்தனம் அவர்களைப் பாவங்கள் செய்யக் கட்டளையிட்டது. எனவே அவர்கள் பாவங்கள் செய்தார்கள்.” (அபூதாவூத்: 1698/ 1447)

 

‘கஞ்சத்தனம் ஒரு சமுதாயத்தையே அழித்துவிடும்’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். அது எப்படி அழிக்கும்? ஓர் ஊரிலுள்ள செல்வர்கள் யாரும் ஏழைக்குக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால், அவர்கள் அனைவரும் பசியால் இறந்துவிடுவார்கள். பின்னர் விவசாயிகள் அழிவார்கள். பின்னர் உண்ண உணவின்றி அந்தச் செல்வர்களும் அழிவார்கள். இதுதான் இயற்கை நியதி. இதை உணர்ந்துகொண்டால் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதைச் செலவு செய்யத் தொடங்கிவிடுவர்.

 

கடமையான ஸகாத்தை உரிய முறையில் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்த செல்வர்கள் குறித்துத் திருக்குர்ஆன் கூறுகிறது: அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். (3: 180)

 

ஷைத்தான் மனிதர்களை நரகத்தில் விழச் செய்வதற்காகவே கஞ்சத்தனத்தை அவர்களின் மனங்களில் விதைக்கிறான். அதனால் செல்வர்கள் தம் செல்வத்திலிருந்து ஏழைகளின் பங்கான ஸகாத்தை உரிய முறையில் நிறைவேற்றாமல் தடுத்துவைத்துக்கொள்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றார்கள். அதன் காரணமாக அவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும். எனவே மறுமையின் தண்டனையிலிருந்து தப்பிக்க, இம்மையிலேயே ஏழைகளுக்கு உரிய பங்கை வழங்கிவிட்டால் அவர்கள் தப்பித்துக்கொள்ளலாம்.

 

செலவு செய்தால் பணம் குறைந்துவிடும் என்ற எண்ணத்தை மனித மனங்களில் போட்டு, அவர்களை நன்மைகள் செய்ய விடாமல் ஷைத்தான் தடுக்கின்றான். கஞ்சத்தனம் ஒரு மனிதனின் உள்ளத்தில் குடிகொண்டுவிட்டால் அவன் யாருக்கும் செலவு செய்ய முன்வர மாட்டான். உறவினர்கள் தன் வீட்டிற்கு வருவதை விரும்பமாட்டான். சுருக்கமாக, தன் பணம் செலவழிந்துவிடக் கூடாது என்று எண்ணுவான்.

 

ஒருவன் தன் கஞ்சத்தனத்தால் தனக்கே நல்ல முறையில் செலவு செய்துகொள்ளாமல் இருந்துவிடலாம். அல்லது தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும்கூடச் செலவு செய்யாமல் இருந்துவிடலாம். எனவேதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஒருவன் தன் மனைவிக்கு ஊட்டுகிற ஒரு கவள உணவும் அவனுக்கு ஸதகா (தர்மம்)” என்று கூறினார்கள். ஆக அவன் தன் மனைவிக்குச் செய்கின்ற செலவுகளுக்குப் பதிலாக அல்லாஹ் அவனுக்கு நன்மையைத் தந்துவிடுகின்றான். எனவே அதை ஒரு செலவாகக் கருத வேண்டியதில்லை.

 

ஆக கஞ்சத்தனம் என்பது ஒரு மனிதனின் இயல்பான வாழ்க்கையையே கெடுத்துவிடுகிறது. கஞ்சன் தானும் நிம்மதியாக வாழாமல் பிறரின் சுகமான வாழ்விற்குத் தடையாகவும் இருக்கிறான். எனவே கஞ்சத்தனம் செய்வதிலிருந்து முற்றிலும் தவிர்ந்துகொள்வோம். நாமும் சுகமாக வாழ்ந்து, பிறரும் சுகமாக வாழக் காரணமாக இருப்போம். இறைவன் நம்மைக் கஞ்சத்தனத்திலிருந்து விடுவிப்பானாக.  

=============








செவ்வாய், 11 நவம்பர், 2025

சென்னை மாவட்டத்திற்கான புதிய காஜி நியமனம்

 

 

சென்னை மாவட்டத்திற்கான காஜியை நியமனம் செய்ய, நியமனத் தேர்வுக் குழு உறுப்பினர் ஆவதற்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து  26 08 2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்காகப் பலர் விண்ணப்பித்தனர். பின்னர் நியமனத் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பட்டியல் 08 09 2025 அன்று வெளியிடப்பட்டது. அதில், மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மௌலவி என். அப்துல் காதிர் சிராஜி, மௌலவி ஏ. முஹம்மது உஸ்மான் பாஷா சிராஜி, முனைவர் மௌலவி ஏ. ஷாஹுல் ஹமீது பாகவி, மௌலவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, மௌலவி சையது மஸ்வூத் ஜமாலி, எம்.ஏ.ஜப்பார் (சமூக சேவகர்) ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

 

பின்னர் மாவட்ட காஜி பதவிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காஜி பதவிக்குத் தகுதியானோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மௌலவி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி ஃபாஸில் மளாஹிரி, மௌலவி ஷேக் தாவூத் மஹ்ளரி, ஃபாஸில் ஜமாலி, மௌலவி முஃப்தி ஸஃபியுல்லாஹ் கான் தாவூதி மழாஹிரி, முஹம்மது அக்பர் பிஎஸ்.சி., ஆகிய நால்வர் இடம்பெற்றிருந்தனர்.

 

பின்னர் நியமனத் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஏழு பேரும் அழைக்கப்பட்டு, சென்னை ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் 29 09 2025 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில் நியமனக் குழு உறுப்பினர்கள்  ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான மூவரைத் தேர்வுசெய்து கொடுக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார். அதன்படி ஒவ்வொருவரும் மூவரைத் தேர்வு செய்துகொடுத்தனர். இறுதியில் அந்த நால்வருள் மிகத் தகுதியும் அனுபவமும் மிக்க முஃப்தி என்.பி. உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி தமிழக முதல்வரால் 10 10 2025 அன்று தேர்வு செய்யப்பட்டு, ‘சென்னை மாவட்ட காஜி’யாக அறிவிப்புச் செய்யப்பட்டார். காஜி பொறுப்பு குறிப்பிட்ட ஒரே குடும்பத்தில் முடங்கியிருந்ததை மாற்றி, தகுதியும் திறமையும் ஷரீஅத் சட்டங்களில் அனுபவமும் கொண்ட ஒருவர் தேர்வுசெய்யப்பட்டிருப்பது கண்டு மக்கள் அனைவரும் ‘வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது’ என்று தம் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

 

நமது சென்னை மாவட்ட காஜி, வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் பேராசிரியராகவும் முதல்வராகவும் 58 ஆண்டுகள் பணியாற்றியதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மாணாக்கரின் பேராசிரியராகத் திகழ்கிறார். அங்குத் தலைமை முஃப்தியாகப் பணியாற்றியதில் ஆயிரக்கணக்கான மார்க்கத் தீர்ப்புகளை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்ட காஜிதான் தமிழ்நாட்டின் தலைமை காஜியாக அறியப்படுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.             

                       -நூ. அப்துல் ஹாதி பாகவி







 

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

தகுதியானவரை நியமித்த தமிழக முதல்வர்


-----------------------------

‘சென்னை மாவட்ட காஜி’ எனும் உயர்பொறுப்பு பிற மாவட்ட காஜி பொறுப்பைப் போன்றது கிடையாது. ‘சென்னை மாவட்ட காஜி’யே தமிழ்நாட்டின் ‘தலைமை காஜி’யாகப் பார்க்கப்படுகிறார். இதுவரை அவ்வாறுதான்  நடைமுறை இருந்து வருகிறது. ஆகவே தகுதியானவரைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும் உலமாக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


‘சென்னை மாவட்ட காஜி’ பதவிக்கு நால்வர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுள் மூவரே அரசின் நிபந்தனைகளுக்கேற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருந்தனர். அவர்களுள் ஒருவர் ‘ஆலிம்’ எனும் வட்டத்திற்குள் இல்லாதவர் ஆவார்.


நியமனக் குழுவினர் தேர்வு செய்து கொடுத்த அடிப்படையிலும், பொதுமக்கள், உலமாக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும், மூவருள் மிகத் தகுதியானவர் என்ற அடிப்படையிலுமே தற்போதைய ‘சென்னை மாவட்ட காஜி’ தமிழக முதல்வரால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை மக்கள் மன்றத்திற்குச் சமர்ப்பித்துக்கொள்கிறேன்.


‘சென்னை மாவட்ட காஜி’ பதவிக்குப் போட்டியிட்டுத், தேர்வு செய்யப்படாத ஆலிம்கள் இருவர் அமைதியாக இருக்கும்போது, ஆலிம் அல்லாத அந்த ஒருவரும், அவர் சார்பாகச் சிலரும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவது ஏற்புடையதன்று.


‘காஜி’ பதவியானது வாரிசு அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ வழங்கப்படுதில்லை. மாறாக முழுக்க முழுக்கத் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுவதாகும். ஆகவே மிகத் தகுதியானவரான மௌலானா மௌலவி முஃப்தி என்.பீ. உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அவர்களைத் தமிழக முதல்வர் நியமனம் செய்து அறிவித்தது மிகச் சரியானதும் நியாயமானதும் ஆகும் என்பதைப் பொதுமக்களின் சார்பாகவும் உலமாக்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.


மிகத் தகுதியானவரை ‘சென்னை மாவட்ட காஜி’யாகத் தமிழக முதல்வர் நியமனம் செய்ததைப் பாராட்டி, உலமாக்கள் சார்பாக அவருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


அன்புடன்

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

பட்டினம்பாக்கம், சென்னை-28

19 10 2025

================