புதன், 17 செப்டம்பர், 2025

கூர்ந்து கவனிப்போம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நாம் பார்ப்பதை, கேட்பதை, பிறர் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் அவ்வப்போது மறந்துவிடுகிறோம். இரண்டிரண்டு இலக்கமாகச் சொல்லப்பட்ட செல்பேசி எண்ணை, ‘நான்  ஒரு தடவை சொல்றேன்; சரியான்னு பாருங்க’ என்கிறோம். அவ்வப்போது ‘மறந்துவிட்டேன்’ என்ற வார்த்தையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அல்லது செய்யக்கூடாததைச் செய்துவிட்டு, ‘சாரி’ என்கிறோம். இவையெல்லாம் நம் கவனச் சிதறல்களால் ஏற்படுபவை.

 

இந்தக் கவனச் சிதறல் நாம் செய்யும் பல்வேறு செயல்களில் ஏற்படுகிறது. அதனால்தான் நாம் எந்தச் செயலையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க இயலுவதில்லை. இந்தக் கவனச் சிதறல்தான் நாம் தொழுகின்ற தொழுகையிலும் ஏற்படுகிறது. நாம் தொழுகின்றபோது, ஏற்கெனவே மனனம் செய்துவைத்துள்ள அல்ஹம்து அத்தியாயத்தையும் பிற அத்தியாயங்களையும் நம்மையறியாமலேயே ஓதிவிடுகிறோம். நாம் அவற்றை ஓதுகிறபோது அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் என்ன என்று யோசித்திருக்கிறோமா? பொருள் உணர்ந்து ஓதியுள்ளோமா? அல்லாஹ்வைப் புகழ்வதும் நமக்கான பிரார்த்தனையும் அல்ஹம்து அத்தியாயத்தில் உள்ளன. அவற்றை உணர்ந்து நாம் ஓதியுள்ளோமா? இல்லை என்பதே நம்முள் பெரும்பாலோரின் பதிலாகும்.

 

அதுபோலவே அதில் ஒவ்வொரு தடவையும் நாம் சொல்கிற ‘அல்லாஹு அக்பர்’ என்பதன் பொருள் உணர்ந்து சொல்லியுள்ளோமா? ருகூஉ, சஜ்தாவில் ஓதுகிற துதிச் சொற்களைப் பொருள் உணர்ந்து சொல்லியுள்ளோமா? தொழுகையின் இறுதியில் ஓதுகிற அத்தஹிய்யாத், தரூதே இப்ராஹீம், துஆ ஆகியவற்றைப் பொருள் உணர்ந்து ஓதியுள்ளோமா? எல்லாமே நாம் மனனம் செய்துவைத்துள்ளதால்  அவை அப்படியே, தானியங்கி இயந்திரம்போல் இயல்பாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. இறுதியில் ஸலாம் சொல்லித் தொழுகையை முடித்துவிடுகிறோம். ஆனால் நாம் தொழுத அந்தத் தொழுகை நமக்கு மனஅமைதியைத் தந்ததா? அதன்மூலம் நமக்கு முழுமையான நன்மை கிடைக்குமா என்றெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை. 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அம்மார் பின் யாசிர் அறிவித்துள்ளதாவது: ஒருவர் தமது தொழுகையை முடித்துக்கொண்டு (வீடு) திரும்புகிறார். அப்போது (தொழுததற்காகக் கிடைக்கும் நன்மையில்) பத்தில் ஒன்று, ஒன்பதில் ஒன்று, எட்டில் ஒன்று, ஏழில் ஒன்று, ஆறில் ஒன்று, ஐந்தில் ஒன்று, நான்கில் ஒன்று, மூன்றில் ஒன்று, பாதி இவற்(றில் ஒன்)றைத் தவிர வேறெதுவும் அவருக்கு எழுதப்படுவதில்லை. (அபூதாவூத்:, 796/ 675)

 

இந்த நபிமொழி நம் தொழுகையைக் குறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. நாம் தொழுத தொழுகைக்கு நமக்கு முழுமையான நன்மை கிடைப்பதில்லை. காரணம், நாம் தொழுகின்றபோது நம் கவனம் முற்றிலுமாக அல்லாஹ்வை நோக்கியதாகவோ அவனைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவோ இருப்பதில்லை. நாம் என்ன ஓதுகிறோமோ அவற்றில் நம் கவனத்தைச் செலுத்துவதில்லை.  ஒவ்வொரு  தடவை நாம் கூறும் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப்பெரியவன் என்பதன் பொருள் என்ன, அவன் எவ்வளவு பெரியவன் என்பதையெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை.

 

அதாவது ஒருவர் தாம் தொழும் தொழுகைக்கு அவரது கூரிய கவனம், இறையச்சம், மனஓர்மை ஆகியவற்றைப் பொருத்துதான் நன்மையைப் பெற முடியும். இவை இல்லாமல் தொழுதோர்  அவர்களின் நிற்றல், குனிதல், சிரம் பணிதல், அமர்தல் ஆகியவற்றிற்கான நன்மையை மட்டுமே பெறுகிறார்கள். அதன்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுதோரின் நன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள். பத்தில் ஒன்று என்பது நூற்றுக்குப் பத்து மதிப்பெண்கள்ஒன்பதில் ஒன்று என்பது நூற்றுக்குப் பதினொன்று சொச்சம் மதிப்பெண்கள்; எட்டில் ஒன்று என்பது நூற்றுக்கு 12.5 மதிப்பெண்கள்; ஏழில் ஒன்று என்பது நூற்றுக்குப் பதினான்கு சொச்சம் மதிப்பெண்கள் என்று பொருள். இப்படியே படிப்படியாகக் கூடி, மிகுந்த கவனக் குவிப்போடு தொழுதவர் பாதி நன்மையைப் பெறுகிறார். அதாவது நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள். இதுதான் நம் கூரிய கவனத்திற்கும் கவனச் சிதறல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

 

பள்ளிவாசலில் சிலர் தொழுகின்றார்கள். அவர்களுடைய உடல் மட்டுமே அங்கே உள்ளது.  அவர்களின் உள்ளமோ உலகெல்லாம் உலா வந்துகொண்டிருக்கிறது. கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டுள்ள அவர்கள், இமாம் என்ன ஓதுகிறார்; எத்தனை ரக்அத் தொழுவிக்கிறார்; இது எத்தனையாவது ரக்அத் என்பதையெல்லாம் அறிவதில்லை. அல்லாஹு அக்பர் என்றவுடன் குனிவது, நிமிர்வது, சிரம் பணிவது, அமர்வது என்று ஒன்றன்பின் ஒன்றாகச் செய்வது அல்லது பக்கத்திலுள்ளவர் செய்வதைப் போன்று செய்வது. இதுதான் பெரும்பாலோரின் நிலை. இத்தகையோரின் தொழுகையைக் குறித்துதான், “தொழுகையில் அறவே கவனம் இல்லாமலிருந்தால் அந்தத் தொழுகை அவன் முகத்திலேயே வீசியெறியப்படும்” என்று வேறொரு நபிமொழி கூறுகிறது. (அத்துர்ருல் மன்ளூத்)

 

தொழுகையில் நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய பல்வேறு சாதனங்கள் இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில் உள்ளன. பற்பல திரைப்படக் காட்சிகள், இசைகள், பாடல்கள், வியாபாரச் சிந்தனைகள், அலுவலகச் சிந்தனைகள், இஎம்ஐ கடன் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு குறுக்கீடுகள் உள்ளன. அதையெல்லாம் தாண்டித்தான் நாம் தொழ வேண்டியுள்ளது. பல்வேறு காட்சிகள் நிறைந்த இந்தக் காலத்திலும் கூரிய கவனத்துடனும் மனஓர்மையுடனும் இறையச்சத்துடனும் தொழுவோரே  பாதி நன்மையைப் பெறுகின்றனர்.                                            

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் உருவப்படங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனைக்கொண்டு வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இந்தத் திரைச் சீலையை நம்மிடமிருந்து அகற்றிவிடு! ஏனெனில் இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் (என்னிடம்) குறுக்கிட்டுக்கொண்டேயிருக்கின்றன” என்று சொன்னார்கள். (புகாரீ: 374)

 

திரைப்படப் பாடல்களோ காட்சிகளோ இல்லாத நபியவர்களின் காலத்தில் ஒரே ஒரு திரைச்சீலையில் பொறிக்கப்பட்டிருந்த உருவப்படங்கள் அவர்களின் கவனத்தைத் திருப்புவதாக உணர்ந்தார்கள் என்றால் எந்த அளவுக்குத் தொழுகையில் மனஓர்மையை விரும்பியுள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நாம் திரும்பும் திசையெங்கும் காட்சிகள், படங்கள், இசை ஆகியவற்றையே பார்க்கிறோம்; செவியுறுகின்றோம். அதையும் தாண்டி நம் கைகளிலேயே தவழ்ந்துகொண்டிருக்கிற அறிதிறன்பேசியில் நாம் காணும் காட்சிகள் ஏராளம். இதன்பிறகு நாம் தொழுகையில் நின்றால் நம்முடைய மனக்கண் என்ன தோன்றும்? இறைவனைப் பற்றிய சிந்தனையா, நாம் பார்த்த காட்சிகளின் பிம்பங்களா?

 

தொழுகையில் மட்டுமின்றிச் செய்யும் செயலில் மனத்தை ஒருமுகப்படுத்தி, கூர்ந்து கவனம் செலுத்துவோர் மற்றோரை வென்றுவிடுகின்றனர். திருக்குர்ஆன் மனனம் செய்யும் வகுப்பிலுள்ள இருபது மாணவர்களுள் சிலர் மட்டும் ஈராண்டுகளில் அதை மனனம் செய்துவிடுகின்றனர். அவர்களுள் சிலர் நான்காண்டுகளாகியும் மனனம் செய்து முடிப்பதில்லை. இது அவ்விரு சாராரின் நினைவாற்றலையும் கவனக் குவிப்பையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

 

சாலையில் வாகனம் ஓட்டுவோருள் சிலர் பல ஆண்டுகளாக எந்த விபத்துமின்றி ஓட்டிவருகின்றனர். வேறு சிலர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். தம்முடைய நூறு சதவிகிதக் கவனத்தையும் சாலையில் செலுத்தி வாகனத்தை இயக்குவோர் விபத்தின்றிக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். சாலையில் கவனத்தைச் சிதற விடுவோர் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோர் பலர் ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். வேறு சிலர் விடுபட்ட பாடங்களை மீண்டும் மீண்டும் எழுதியும் தேக்கமடைகின்றனர். தம்முடைய முழுக் கவனத்தையும் பாடத்தில் செலுத்துவோர் வெற்றிபெறுகின்றனர்; கவனச் சிதறலுக்குள்ளானோர் தோல்வியடைகின்றனர்.

 

தள்ளுவண்டியில் வியாபாரத்தைத் தொடங்கி, பின்னர் சிறிதாக ஒரு கடையை வாடகைக்குப் பிடித்துகொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று நகரத்தில் மிகப்பெரிய வணிக வளாகத்தையே நடத்துகின்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அவர்தம் வியாபாரத்தில் செலுத்திய நூறு சதவிகிதக் கவனம், உழைப்பு, தன்முனைப்பு ஆகியவையே ஆகும். ஆக ஒவ்வொரு துறையிலும் செயலாற்றுகின்ற அனைவரின் நிலையும் இதுதான். அவர்களுள் மிகுந்த கவனத்தோடும் தன்முனைப்போடும் செயல்படுவோர் வெற்றியடைகின்றனர்; எடுத்துக்கொண்ட செயலில் முழுமையான கவனம் செலுத்தாதோர் தோல்வியடைகின்றனர்; அல்லது பின்தங்கியே இருக்கின்றனர்.

 

எனவே நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியடைய வேண்டுமெனில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதோடு தன்முனைப்போடும் செயல்பட வேண்டும். அது தொழுகையானாலும் தொழிலானாலும் சரியே! தொழுகின்ற நேரத்தில் அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; தொழில்  செய்கின்றபோது அதில் மட்டும் முனைப்போடு ஈடுபட வேண்டும். அதுதான் நமக்கு வெற்றியைத் தரும். அவ்வாறு ஈடுபட்டால்தான் முழுமையான நன்மையையும் இலாபத்தையும் பெற முடியும்.

=====================







செவ்வாய், 16 செப்டம்பர், 2025

தீர விசாரிப்பதே மெய்...

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

செயற்கை நுண்ணறிவால் (ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ்-ஏஐ) இயங்கக்கூடிய மாய உலகில் நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்கு நாம் பார்க்கும் காணொலிகள், படங்கள், குரல்கள் ஆகியவற்றுள் பெரும்பாலானவை பொய்யானவை ஆகும். இவ்வுலகில் பொய் குறித்து எச்சரிக்காதோர் இல்லை. அறிஞர்கள், முன்னோர்கள், தீர்க்கதரிசிகள் அனைவரும் பொய் குறித்து எச்சரிக்கை செய்துள்ளனர். அந்த வகையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பொய் குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

 

மனிதர்களை ஏமாற்றிப் பிழைப்போர் மிகுந்த காலமிது. எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் எப்படியாவது நம்மை ஏமாற்றிவிடுகின்றார்கள். படித்தவர்களே பல தடவை ஏமாறியிருக்கின்றார்கள்; தாம் பாடுபட்டுச் சேமித்த பணத்தை இழந்திருக்கின்றார்கள். நாம் ஏதேனும் பொருள் வாங்குவதாக நம் நண்பர்களிடம் பேசியிருப்போம்; ஆலோசனை செய்திருப்போம். அல்லது நாம் குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் படிக்கப்போவதாக நம் நண்பர்களிடம், உறவினர்களிடம், பெற்றோரிடம் சொல்லியிருப்போம். அல்லது குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்போம். அதை எப்படியோ தெரிந்துகொண்டு அதற்குத் தோதுவாகச் சில இணைப்புகளை நம்முடைய செல்பேசிக்கு அனுப்பி, நீங்கள் விரும்பிய பொருளைக் குறைந்த விலையில் வாங்க, நீங்கள் விரும்பிய பாடத்தைக் குறைந்த கட்டணத்தில் படிக்க, நீங்கள் இந்த வேலையைப் பெற இங்கு க்ளிக் செய்யுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். அதை நாம் தொட்டுவிட்டால் அவ்வளவுதான். உள்ளே சென்றவுடன் நாம் அவர்களுடைய அடிமையைப் போல் அவர்கள் சொன்னதையெல்லாம் செய்வோம். கடைசியில் நாம் நம் பணத்தை இழப்போம். இதுதான் இன்றைய ஏமாற்றுக்காரர்களின் மிக எளிமையான தந்திரம்.

 

காணொலிகளை உருவாக்குதல்: இன்றைய இளம் தலைமுறையினர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பல்வேறு முன்னேற்றங்களை அடைகின்றார்கள்; மிக எளிதாகத் தம் செயல்திட்டங்களைச் செய்துமுடிக்கின்றார்கள் என்பது வரவேற்புக்குரியது.  ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காகவே எங்கோ ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றார்கள் சிலர். அவர்களிடம்தான் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று நாம் காணுகின்ற காணொலிகள் பல உண்மைக்கு முரணானவை. யானை, குதிரை, சிங்கம் போன்ற விலங்குகள்  மிதிவண்டி ஓட்டுவதைப் போல காணொலிகள் புலனத்தில் (வாட்ஸ்அப்) வலம் வந்தன. பார்த்தோர் சிரித்துவிட்டு, நகர்ந்துவிட்டனர். காரணம் இதெல்லாம் சாத்தியமற்றது; ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டு கடந்துசென்று விடுகின்றார்கள். ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தை வேறு பல கோணங்களில் பயன்படுத்தி காணொலிகளை உருவாக்கி வருகின்றனர். அத்தகைய காணொலிகளை நாம் இனம் காண முடியாது.

 

ஏமாற்றுக்காரர்கள் உருவாக்கக்கூடிய காணொலிகள் நம்மை மிக எளிதாக ஏமாறச் செய்துவிடும். சான்றாக அதில் பேசுபவர் மிகப்பெரும் தொழிலதிபராக இருப்பார். அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது நமக்கும் தெரியும். எனவே அவர்தாம் பேசுகிறார் என்று நம்பிவிடுவோம். “என்னுடைய நிறுவனத்தின் பங்குகளை விற்பதாக உள்ளேன். அதன் பங்குகளை வாங்குவதன்மூலம் அதில் நீங்களும் பங்குதாரர் ஆகலாம். ஒரு பங்கின் விலை இவ்வளவு, நீங்கள் எத்தனைப் பங்குகளை வாங்க விரும்புகிறீர்களோ அத்தனைப் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண் இதோ கீழே தரப்பட்டுள்ளது” என்று அவர் அந்தக் காணொலியில் பேசுவார். ஆனால் அந்தக் காணொலி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது குரலில் உருவாக்கப்பட்டது என்பதைப் பலர் அறிய மாட்டார்கள். அதனால் அதில் பணத்தைச் செலுத்தி ஏமாறுவார்கள்.

 

அதாவது அந்தக் காணொலி எவ்வாறு உருவாக்கப்படுகிறதென்றால், அவர் எங்கோ பேசிய காணொலிக் காட்சியின் ஒளிப்படக் காட்சியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, அதன் பின்னணியில் அவர்கள்  விரும்புவதைச் சேர்த்துவிடுவார்கள். அவரது குரலில் பேசுவதற்கு, அதற்கென உள்ள செயலியில் (ஆப்) அவரது குரலைப் பதிவு செய்துவிட்டால், நாம் கொடுக்கின்ற வாக்கியங்களை அவரது குரலில் பதிவு செய்து தந்துவிடும். பின்னர் அவ்விரண்டையும் இணைத்து ஒரு காணொலியை மிக எளிதாக உருவாக்கிவிடுவார்கள். பின்னர் அதைச் சமூக ஊடகங்களில் உலாவ விடுவார்கள். அதைக் காணுகின்ற பலர் அதை உண்மையென நம்பித் தம் பணத்தைச் செலுத்தத் தொடங்குவார்கள். இறுதியில்தான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அவர்கள் அறிவார்கள்.

          

படங்களைப் பேச வைத்தல்: கடந்த கால அல்லது நிகழ்காலப் படம் ஒன்றைப் பதிவேற்றம் செய்து, அதிலுள்ளவரைப் பேசுமாறு செய்யலாம். அந்த அடிப்படையில் இறந்துபோன நம்முடைய பெற்றோர், முன்னோர்மூத்த தலைவர்கள் ஆகியோரைப் பேச வைக்கலாம். இவ்வாறு செய்யும்போது யாராவது மூத்த அறிஞர் ஒருவரை ஏதாவது முக்கிய விஷயங்களைப் பேசவைத்து, யூடியூபில் பதிவேற்றம் செய்துவிட்டால் பிற்காலத்தில் அந்தக் காணொலியைக் காணுகின்றவர்கள், ஏதேனும் தகவலைத் தேடுகிறபோது அந்தக் காணொலி தென்பட்டு, அதில் சொல்லப்படுகிற தவறான தகவலைக்கூட உண்மையென நம்பி வழிகெடும் நிலை உண்டாகலாம். எனவே காணொலி குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும். மேலும் பேச இயலாதவரின் நிழற்படத்தைப் பதிவேற்றம் செய்து, அதைப் பேசுமாறு உருவாக்கி, அவர் இயல்பாகப் பேசக்கூடியவர்தாம் என்று பிறரை நம்ப வைக்கலாம்.

 

உருவங்களை மாற்றுதல்: இது தொன்றுதொட்டு இருந்து வருகிற ஒரு பழக்கம்தான். இறைவன் படைத்த உருவங்களை மனிதன் தன் மனத்தில் தோன்றும் கற்பனைத்திறனுக்கேற்ப மாற்றியமைக்கிறான். முற்கால மனிதன், கடவுள் என்றால் மனிதனைப் போன்று இருக்கக்கூடாது. அவர் மனிதனைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். எனவே கடவுளுக்குப் பத்துத் தலைகள் இருபது கைகள் எனக் கற்பனை செய்து, அத்தகைய ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதற்கு ‘இராவணன்’ எனப் பெயரிட்டான். அது போலவே ஆறு தலைகளை உடைய கடவுளுக்கு ‘ஆறுமுகம்’ எனப் பெயரிட்டான். மேலும் வெட்டி ஒட்டும் கலையின் அடிப்படையில் மனிதனுக்கு யானைத் தலையை வெட்டி, ஒட்டி அதற்கு ‘விநாயகர்’ என்று பெயரிட்டான்.

 

வெட்டி, ஒட்டும் தொழில்நுட்பம்தான் இன்று பரவலாகக் காணப்படுகிறது. மனிதத் தலையை வெட்டி எடுத்துவிட்டு, அவ்விடத்தில் வேறொரு மனிதனின் தலையை ஒட்டிவிடுகிறான். அரசியல் தலைவர்களை, நடிகர்களை, பிரபலமானவர்களைக் கேலி கிண்டல் செய்வதற்காக இவ்வாறு உருவங்களை மாற்றியமைக்கிறார்கள்.   மனித உருவங்களைச் சிதைத்து புதிய புதிய உருவங்களை உருவாக்குகிறார்கள். இதை ‘மார்ஃபிங்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி, சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகிற அழகிய முகங்களை உடைய பெண்களின் நிழற்படங்களைச் சேர்த்து, அவற்றிலுள்ள தலைகளை மட்டும் வெட்டியெடுத்து நிர்வாணப் பெண்களின் உடலில் வைத்து, புதிய புதிய படங்களை உருவாக்கி, அவற்றை அதற்கென உள்ள  இணையதளங்களில் விற்பனை செய்துவிடுகின்றார்கள். எனவே சமூக ஊடகங்களில் தம்முடைய நிழற்படத்தைப்  பதிவேற்றம் செய்கின்ற பெண்கள் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

மேலும் ஆணின் படத்தைப் பெண்ணைப் போலவும் பெண்ணின் படத்தை ஆணைப் போலவும் உருமாற்றம் செய்கின்றார்கள். இவ்வாறு உருமாற்றம் செய்வது ஷைத்தானின் செயலாகும். அவன் அல்லாஹ்விடம் அறைகூவல் விட்டு வந்துள்ளான். “நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்து விடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் தோற்றங்)களை மாற்றும் படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, அல்லாஹ்வையன்றி (இத்தகைய) ஷைத்தானை (தனக்கு)ப் பாதுகாவலனாக எடுத்துக்கொண்டவன் பகிரங்கமான நஷ்டத்தை அடைந்துவிட்டான். (4: 119)

 

பழையதைப் புதிதாக மாற்றுதல்: புதிய படங்களைப் பழையதாக மாற்றுதல், பழைய படங்களைப் புதிதாக மாற்றுதல் ஆகிய இரண்டு வகையான தொழில்நுட்பங்களும் தற்காலத்தில் உள்ளன. நம்முடைய மூதாதையரின்  பழைய நிழற்படத்தைப் புதிதுபோல் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். புதிய நிழற்படங்களைப் பழையதைப் போல் மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும். இதைச் சாதாரணமாகச் செய்துகொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் குறுமதிகொண்ட மனிதன், குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கிறான். எனவே சொத்துப் பத்திரம் ஒன்றைப் பழையதைப்போல் உருவாக்கி, இந்த இடம் என்னுடையதுதான் என்று சொல்லி, யாரோ ஒருவரிடம் விற்றுவிடுகிறான். அந்நிலத்தை வாங்கியவன் பிற்காலத்தில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்கிறான்.  ஆகவே சொத்து வாங்குவோர் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

 

பிறரைப் போலப் பேசுதல்: குரலை மாற்றிப் பிறர் பேசுவதைப்போல் பேசுவதை இன்று ஒரு கலைத்திறனாகக் காண்கின்றார்கள். அக்கலையில் ஈடுபடுவோருக்கு ‘மிமிக்ரி ஆர்டிஸ்ட்’ (பல குரலில் பேசுபவர்) என்று பெயர்சூட்டியுள்ளார்கள். அக்கலையில் தேர்ச்சி பெற்றோருக்குப் ‘பல குரல் மன்னன்’ என்று பட்டமும் கொடுக்கின்றார்கள். அத்தகையோர் மேடைகளில் மக்கள் முன்னிலையில் பல குரல்களில் பேசுகிறபோது அதைக் கேட்டு அவர்கள் இரசித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அதில் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் குயுக்திகொண்ட மனிதர்கள் சிலர் மக்களை ஏமாற்ற இக்கலையைப் பயன்படுத்துகின்றார்கள். அதுதான் ஆபத்தானது.

 

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசினேன். அப்போது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “எனக்கு இன்னின்ன (செல்வங்கள்) கிடைக்கும் என்றிருந்தாலும் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசுவதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார்கள். (அபூதாவூத்: 4875/ 4232)

 

இன்று பெரும்பாலான தகவல் பரிமாற்றங்கள் புலனத்தில் (வாட்ஸ்அப்) நடைபெறுகின்றன. நமக்கு நெருங்கிய நண்பர் அல்லது உறவினரின் குரலில், “எனக்கு அவசரமாக இவ்வளவு தொகை வேண்டும்; உடனடியாக ஜீ-பே மூலம் இந்த எண்ணுக்கு அனுப்பு; என்னுடைய செல்லுக்குத் தொடர்புகொள்ள வேண்டாம். என்னுடைய செல் சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது” என்று நமக்கு ஒரு குரல் பதிவு வரும். அதைக் கேட்கின்ற நாம், நண்பர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார்போலும் என நினைத்துக்கொண்டு அதில் குறிப்பிடப்பெற்ற தொகையை அந்த எண்ணுக்கு அனுப்பிவைப்போம். பிறகு நேரடியாக நண்பரைச் சந்திக்கின்றபோது நடந்ததைச் சொல்வோம். அவர் அதை மறுப்பார். பிறகு நாம் அந்தக் குரல் பதிவை அவருக்குக் காட்டுவோம். இறுதியில் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்வோம்.

 

அந்தக் குரல் பதிவில் ‘என்னுடைய செல்லுக்குத் தொடர்புகொள்ள வேண்டாம்’ என்று இருந்தாலும் நாம்  ஒரு தடவை நம்முடைய நண்பரைத் தொடர்புகொண்டு விசாரிக்க முயல வேண்டும். அவ்வாறு தொடர்புகொண்டிருந்தால் நமக்கு உண்மை புலப்பட்டிருக்கும். ஆனால் செய்தியைக் கேட்டவுடன் பதற்றமடைகிற நாம், உடனடியாகப் பணத்தை அனுப்பிவிடுவதால்தான் இத்தகைய ஏமாற்றத்தை அனுபவிக்கிறோம். இவ்வாறு பற்பல வகைகளில் ஏமாற்றுவோர் நம்மைச் சுற்றி உள்ளனர்.  எனவே நாம் மிகுந்த எச்சரிக்கையோடு நடைபோட வேண்டும்.

 

இந்த ஏஐ தொழில்நுட்பம் மனிதர்கள் தம் செயல்திட்டங்களை மிக எளிதில் செய்துகொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் குறுக்குப் புத்தியுடையோர் இதை வைத்து மனிதர்களை எவ்வாறு ஏமாற்றலாம் என்று யோசித்து, அதற்கான வேலைகளைச் செய்துவருகின்றார்கள். எனவே நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதோடு நம்மைச் சார்ந்தவர்களையும் எச்சரிக்கை செய்ய வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக நம்பிவிடாமல், சற்று ஆழ்ந்து சிந்தித்து, தெரிந்தவர்களிடம் ஆலோசனை செய்து, தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டும். எதையும் வாங்குவதானாலும் கொடுப்பதானாலும் பணத்தைச்  செலுத்துவதானாலும் நிதானம் தேவை; ஆலோசனை அவசியம் தேவை. அதுவே நம்மை ஏமாற்றத்திலிருந்து தடுக்கும்.

====================================











சனி, 6 செப்டம்பர், 2025

கூட்டு வியாபாரம்-இஸ்லாமிய வங்கி

  

     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28  

 


 இஸ்லாத்தின் பார்வையில் கூட்டு வியாபாரம் (Partnership Business) என்பது "முஷாரகா’ என்ற ஆக்கப்பூர்வமான வடிவத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில், கூட்டு வியாபாரம் சில நிபந்தனைகளுக்கும் நெறிமுறைகளுக்கும் உட்பட்டது.

 

 முஷாரகா என்றால் என்ன?: முஷாரகா என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் அல்லது நிறுவனங்கள் ஒன்றாக முதலீடு செய்து, இலாபத்தையும் இழப்பையும் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் வியாபார வடிவம் ஆகும்.

 

முஷாரகா எனும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுவோர் நியாயமாகவும் நேர்மையாகவும் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் முதலீடும் தெளிவாக இருக்க வேண்டும். ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். அனைத்துப் பங்காளிகளும் எவ்வளவு இலாபத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஒப்பந்தத்தில் வரையறுக்க வேண்டும்.

 

இலாபப் பங்கீடு (Profit Sharing): முதலீட்டின் அடிப்படையில் அல்லது இருவரும் ஏற்றுக்கொள்ளும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்துகொள்ளப்படும். ஆனால், உத்தரவாத இலாபம் (Guaranteed Profit) என்பது ஹராம் ஆகும். அதாவது வருகின்ற இலாபத்தில் இவ்வளவு ரூபாய் எனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று யாரும் நிபந்தனை விதிக்க முடியாது.

 

இழப்புப் பங்கீடு (Loss Sharing): ஒருவேளை கூட்டு வியாபாரத்தில் எதிர்பாரா விதமாக இழப்பு ஏற்பட்டுவிட்டால், முதலீட்டின் விகிதத்துக்கு ஏற்ப இழப்பு பங்காளிகள் மத்தியில் பகிரப்படும். ஒருவரே எல்லா இழப்புகளையும் ஏற்க முடியாது; அது நீதியுமன்று.

 

ஹலால் வியாபாரம்: கூட்டுவியாபாரத்தில் ஈடுபடுவோர் இஸ்லாத்தின் சட்டங்களுக்கு எதிரான வியாபாரங்களில் ஈடுபடக் கூடாது. சான்றாக மதுவிற்பனை, சூதாட்டம், வட்டி சம்பந்தப்பட்ட தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. அது முற்றிலும் ஹராம் ஆகும். மாறாக ஹலாலான வியாபாரங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். 

 

நம்பகத்தன்மை (அமானத்) முக்கியம்: ஒவ்வொரு பங்காளியும் நேர்மையோடும் நம்பகத்தன்மையோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும்.  குறிப்பாக இறையச்சத்தோடு இதில் ஈடுபட வேண்டும்.

 

முஷாரகாவின் அடிப்படையில் வியாபாரம்: நால்வர் ஒன்றாகச் சேர்ந்து ஒவ்வொருவரும் இரண்டு இலட்சம் எனச் சமமான தொகையை முதலீடாகப் போட்டு, கேஎஃப்சி மாதிரி ஒரு சிக்கன் கடை தொடங்கினார்கள். நால்வரும் மிகுந்த ஆர்வத்தோடு அத்தொழிலைச் செய்துவந்தார்கள். ஆண்டின் இறுதியில் இலாபத்தைக் கணக்கிட்டார்கள். அதை நான்கு பங்காகப் பிரித்து தலா ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொண்டார்கள். இதுதான் கூட்டு வியாபாரத்தின் பயன்.

 

அதன்பின் அந்நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து ஈட்டிய இலாபத்தில் நடுத்தரமான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் கூட்டாக முதலீடு செய்தார்கள். ஈராண்டுகள் கழித்து அதில் கிடைத்த இலாபத்தைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். பின்னர் இஸ்லாமிய வங்கிகளில் கூட்டாக முதலீடு செய்தார்கள். அதில் ஓராண்டின் இறுதியில்  கிடைத்த தொகையைச் சமமாகப் பங்கிட்டுக்கொண்டார்கள். இவ்வாறு நால்வர் சேர்ந்து, இணைந்து தொடங்கிய ஒரு தொழில் வளர்ந்து பல்வேறு தளங்களில் முதலீடு செய்யுமளவிற்கு வளரலாம். இது கூட்டு முயற்சிக்குக் கிடைக்கும் வெற்றி எனலாம்.

 

இஸ்லாமிய வங்கி முறை: இது, பாரம்பரிய வங்கியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூகப் பொருளாதார அமைப்பாகும். இது வட்டி (interest) அடிப்படையிலான பணப் பரிமாற்றத்தை முற்றிலும் தவிர்த்து, இலாபப்பகிர்வு (profit-sharing) மற்றும் நேரடி முதலீட்டு முறைமைகளைப் பயன்படுத்துகிறது. இம்முறை இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது நியாயமானதொரு பொருளாதார மாற்றாகவும், சமூக நலனைப் பாதுகாக்கும் நடைமுறையாகவும் திகழ்கிறது.

 

இஸ்லாமிய வங்கியின் செயல்பாடு: இஸ்லாமிய வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் முதலீட்டு நிதியை, ‘முளாரபா’ எனப்படும் கூட்டாண்மை வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகின்றன. இதில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வங்கிக்கே ஒப்படைக்கின்றனர். வங்கி, அந்த நிதியைத் தொழில், வர்த்தகம் அல்லது சொத்துப் பரிமாற்றம் போன்ற முறைகளில் முதலீடு செய்து இலாபத்தை ஈட்டுகிறது.

 

இது தவிர, வங்கியின் வெற்றியும், நட்டமும் முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். எனவே வட்டி விகிதம் என்ற உறுதியான தொகை இல்லாமல், உண்மையான வருமான அடிப்படையில் இலாபம் பகிர்ந்துகொடுக்கப்படும். இந்த முறையில் இலாபம் அதிகமாக இருந்தால், முதலீட்டாளருக்கு அதிக வருவாய் கிடைக்கும். குறைவாக இருந்தால், அவர் பெற்ற தொகையும் குறைவாகவே இருக்கும். ஒருவேளை நட்டம் ஏற்பட்டால், முதலீட்டாளருக்கும் அது உரிய பங்காகப் பகிரப்படும். இது ஒரு நெகிழ்வான முறைமையாக இருக்கின்றது. வங்கியில் வட்டியைப் பெறுவதைவிட இது மிகவும் நியாயமானது, ஏனெனில் இது ஒருவரின் நிலையான வருமானத்திற்காக மட்டும் பாடுபடுகிறதே தவிர மற்றொருவருக்கு நட்டத்தை ஏற்படுத்த முனைவதில்லை.

 

இஸ்லாமிய வங்கி எங்கு உள்ளது?: இஸ்லாமிய வங்கிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் பரவலாக இயங்கி வருகின்றன. சவூதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இவை வழக்கமான வங்கி முறையாகவே செயல்படுகின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால், இஸ்லாமிய வங்கிக்கு முழுமையான அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இஸ்லாமிய வங்கி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமியக் கூட்டுறவு வங்கிகள் (ஜன்சேவா கோ-ஆப்ரேட்டிவ் க்ரெடிட் சொசைட்டி) தற்போது இந்தியாவின் பல இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

 

இந்தியா முழுவதும் தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன, தமிழ்நாட்டின் முக்கிய இஸ்லாமிய நகரங்களான வாணியம்பாடி, திருநெல்வேலி, காயல்பட்டணம், மதுரை, லால்பேட்டை, நாகர்கோயில், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. மேலும் சென்னையின் திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. சென்னையிலுள்ளோர் அங்குச் சென்று வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். மேலும் தகவலுக்கு 9840550709 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதன் வலைப்பக்க முகவரி: www.janseva.in

 

ஃபிக்ஹ் சட்ட அடிப்படை - முளாரபா: இஸ்லாமிய வங்கி முறை முளாரபா எனும் ஃபிக்ஹ் (இஸ்லாமியச் சட்டம்) அடிப்படையில் இயங்குகிறது. இதில் இரண்டு முக்கியமான தரப்புகள் உள்ளன. முதலீட்டாளர் (Rabbul-Maal) என்பவர் பணம் கொடுப்பவர். முதலீட்டுப் பயனாளர் (Mudarib) என்பவர் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்பவர். முதலீட்டாளர், தமது பணத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மற்றொருவரிடம் கொடுக்கிறார். முதலீட்டுப் பயனாளர் அந்தப் பணத்தில் தொழில் செய்து வருமானம் ஈட்டுகிறார். இலாபத்தில், ஒப்பந்தத்தின்படி ஒரு பங்கை முதலீட்டாளருக்கு வழங்குகிறார். இதில் பணம் கொடுப்பவர் வியாபாரத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை, ஆனால் இலாபத்தில் பங்கு பெறுகிறார். நட்டமடைந்தால், அவருடைய முதலீட்டில் ஒரு பங்கு குறையும்.

 

வட்டி இல்லா வணிகம்: இஸ்லாமிய வங்கியின் ஒரு முக்கியமான நோக்கம் - வட்டியை முற்றிலும் தவிர்ப்பதே ஆகும். இது நேரடியாகத் திருக்குர்ஆனின் கட்டளையைப் பின்பற்றுவதாகும். “அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்துள்ளான்.”  (அல்குர்ஆன் 2: 275) இதன்படி, வட்டி அடிப்படையில் கிடைக்கும் வருவாயை இஸ்லாம் சட்ட விரோதமாகக் கருதுகிறது. எனவே, இஸ்லாமிய வங்கி முறையில் வட்டி இல்லை; அதன் மாற்றாக இலாபப் பகிர்வு மட்டுமே உள்ளது.

 

ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்?: இஸ்லாமிய வங்கி முறை நியாயமானது; சமுதாயத்தில் சமூக நலனையும் பொருளாதார நலனையும் கட்டியெழுப்புகிறது; வட்டி எனும் அநீதியான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கிறது; இலாபத்தில் பங்கு கொடுக்கின்றது. இத்தனை நன்மைகள் உள்ளபோதும், நாம் இதைப் பயன்பாட்டில் கொண்டுவராமல் இருப்பது ஏன்? முஸ்லிம்கள் மட்டுமின்றி, நியாயமான, மாறுபட்ட முதலீட்டு வாய்ப்புகளை நாடும் யாரும் இதைப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தியும் வருகின்றார்கள் என்பதே நிதர்சன உண்மை.

 

முடிவு: இஸ்லாமிய வங்கி முறை என்பது நவீனக் காலத்திலும் இஸ்லாமியச் சட்டத்தைப் பின்பற்றும் வகையில் பொருளாதார வளர்ச்சியையும் நலனையும் இலக்காகக் கொண்ட ஒரு முறையாகும். இது வட்டி இல்லாததுடன், நெகிழ்வான, நியாயமான வணிக முறைமையாக இருப்பதால், நம்மைப் பொருளாதாரச் சுமைகளிலிருந்து விடுவிக்கக் கூடியதாகும். இம்முறையை இன்னும் விரிவாக அறிந்து, பயன்படுத்திக் கொள்ளும்போது நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு வலிமையான அடித்தளம் ஆகும்.

================================







ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம், மதீனா மஸ்ஜித், பட்டினம்பாக்கம், சென்னை.-28

 

வெளியில் பார்ப்பதைத் திரையிலும் பார்க்கலாம்; வெளியில் பார்க்கத் தகாததைத் திரையிலும் பார்க்கக்கூடாது என்பதே சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் ஆகும். சினிமா என்பது ஓர் ஊடகம். அவ்வளவுதான். அதன்மூலம் மக்கள் மனதில் நன்மையை விதைப்பதும் தீமையை விதைப்பதும் அவரவரின் எண்ணத்திற்கேற்ற வெளிப்பாடு. நல்லெண்ணம் கொண்டு மக்கள் நலன் நாடுவோர் நன்மையைக் கொண்டு செல்கின்றனர்; தீய எண்ணம் கொண்டோர் அதன்மூலம் தீமையை விதைத்துக் கொண்டிருக்கின்றனர். கத்தி நன்மையா, தீமையா என்று கேட்டால் அதனைப் பயன்படுத்துவதை வைத்துதான் அதற்கான விடையைச் சொல்ல முடியும். மாறாக, பொத்தாம் பொதுவாக, ‘அது தீமை’ என்று சொல்லிவிட முடியாது. அதுபோலவே சினிமாவும் அமைந்துள்ளது. மக்களின் அளவற்ற விருப்பத்தால் இது ஊடகத் துறையில் முக்கிய இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

 

அதேநேரத்தில் ஓர் ஊடகத்தைப் பிறர் எவ்வாறு பயன்படுத்துகின்றார்களோ அதே விதத்தில்தான் முஸ்லிம்களாகிய நாமும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஊடகத்தை நல்வழியில் எவ்வாறு நாம் பயன்படுத்த இயலும் என்பதை யூகித்துணர்ந்து, அதை நோக்கித் திருப்ப வேண்டும். அதற்காகத்தான்  படைத்தோன் அல்லாஹ் நமக்குப் பகுத்தறிவை வழங்கியுள்ளான். வழிகாட்ட வான்மறையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளும் உள்ளன. அவற்றை மைல்கல்லாகக் கொண்டு நன்மையை நோக்கி மக்களை இழுக்கும் விதத்தில் இந்த சினிமா ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டும்.

 

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமூக விழிப்புணர்வு, பகுத்தறிவை ஊட்டுதல், மூடப்பழக்கங்களை முறியடித்தல், மதுவின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வரலாற்றைப் பதிவு செய்தல் உள்ளிட்ட எத்தனையெத்தனையோ நல்ல கருத்துகள்மூலம் மக்கள் மனதை மாற்றிச் செம்மைப்படுத்தும் வகையிலான திரைப்படங்கள் வெளிவந்தன. மக்கள் அவற்றைப் பார்த்துப் பொழுதுபோக்கியதோடு நல்ல கருத்துகளையும் தெரிந்துகொண்டனர்.

 

அதன் பின்னர் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சினிமா தயாரிக்கப்படலானது. அப்போது தொடங்கி இன்று வரை அது மிகப்பெரிய அளவிலான ஒரு வியாபாரமாகிவிட்டது. வியாபாரம் என்று வந்துவிட்டால் மோசடி என்பதும் அதனைத் தொற்றிக்கொண்டு வந்துவிடும். மோசடி என்பதற்கு முகம் தெரியாது. யாரை வேண்டுமானாலும் அது மோசடியால் வஞ்சிக்கும். அதனால்தான் இந்த இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்களையே தேசத் துரோகிகளாகக் காட்டத் தொடங்கிவிட்டனர் அந்த மோசடிக்காரர்கள்.

 

சினிமா என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த ஊடகம் ஆகும். அது மக்களின் மனதில் நேரடியாகச் சென்று ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது இன்றைக்கு மக்களோடு இரண்டறக் கலந்துவிட்டது. அது அவர்களின் பொழுதுபோக்கு மட்டுமில்லை; வாழ்க்கையாகவே மாறிப்போய்விட்டது. இதை நன்றாக அறிந்துகொண்ட யூதர்கள்  ஆங்காங்கே உள்ள திரைப்பட இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்து, முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான தவறான மாயப் பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கும் விதத்தில் கதையை அமைக்க வலைவீசினார்கள். அந்த மாய வலைக்குள் விழுந்தவர்கள்தாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் அவர்கள்மீது வெறுப்புணர்வைத் தூண்டுமுகமாகவும் திரைப்படங்களை உருவாக்கினார்கள்.

 

தமிழ்நாட்டைப் பொருத்த வரை முதன் முதலாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு ரோஜா எனும் திரைப்படம் வெளியானது. அதில் காஷ்மீர் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டினார். அதுதான் தொடக்கம். அதன்பிறகு ஒருவருக்குப்பின் ஒருவராகப் பல்வேறு இயக்குநர்கள் முஸ்லிம்களுக்கெதிரான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்கள். அந்த வரிசையில் 2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த விஸ்வரூபம் எனும் திரைப்படம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலாகத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தன. அதன் பயனாக அதிலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டன. இருந்தாலும் அந்தத் திரைப்படம் மக்கள் மனங்களில் முஸ்லிம்கள் குறித்த ஒரு தவறான பிம்பத்தைப் பதியத்தான் செய்தது. 

 

Innocence of Muslims எனும் தலைப்பில் முன்னோட்டம் வெளியாகி, அதன்பின்  The innocent Prophet எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்து, உலக முஸ்லிம்கள் அனைவரும் தம் உயிரைவிட மேலாக மதித்துப் பின்பற்றி வருகின்ற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொச்சைப்படுத்தியது; உலக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பியது. ஆக, அவர்களின் நோக்கம் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும் சொச்சைப்படுத்த வேண்டும். அனைவரும் அவர்களை வெறுக்க வேண்டும் என்பதேயாகும்.

 

இதன் பின்னணி நோக்கம் என்னவென்றால், உலக அளவில் மக்களை அழிவுக்குள்ளாக்குவதும் அதன்மூலம்  வியாபாரம் செய்வதும்தான். அழிவு என்பது மக்களை நேரடியாக அழித்தல், சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்தி அதன்மூலம் அழித்தல் என இரண்டும் அடங்கும். இவ்வுலகை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என யூதர்கள் எண்ணுகிறார்களோ அதற்கேற்பக் கட்டமைக்க முனைகிறார்கள்.

 

திரைப்படத்தின் மூலம், வன்முறையைத் தூண்டுதல், சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுதல், குடும்பத்தைச் சிதைத்தல், ஆடம்பரப் பொருள்களை விரும்பச் செய்தல், நாணத்தை நீக்குதல், உறவுகளைச் சிதைத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்காகக் கொலை செய்யத் தூண்டுதல், பாலியல் வன்புணர்வு செய்தல் உள்ளிட்ட பல வகையான கேடுகளைக் காட்சியாகக் காட்டி மக்கள் மனதைக் கெடுத்து, தாம் விரும்பிய கருத்தைத் திணிக்க முயல்கின்றார்கள். தாம் காட்டுவதுதான் நாகரிகம், பண்பாடு என்ற சிந்தையை ஊட்டுகின்றார்கள். 

 

எல்லாமே அவர்களுக்கு வியாபாரம்தான். வன்முறையைத் தூண்டுவதன்மூலம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருள்கள் வியாபாரம், சிறுவர்களின் மனதைக் கவர்வதன்மூலம் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்தல் (கேம்ஸ்)குறிப்பிட்ட அலைவரிசைகளைப் பார்க்கத் தூண்டி வியாபாரம், பெண்களைக் கவர்ச்சியாகவும் அழகாகவும் அரைகுறை ஆடைகளுடன் காட்டுவதன்மூலம் ஆடைகள், அழகு சாதனப் பொருள்களின் வியாபாரம், மது குடித்தல், சிகரெட் பிடித்தல் போன்ற காட்சிகளைத் தவறாது ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்டுவதன்மூலம் மது, சிகரெட் வியாபாரம் என ஒவ்வொன்றிலும் வியாபாரத் தந்திரம் மறைந்துள்ளது. ஏனென்றால் இவை அனைத்தையும் தயாரிப்பது அவர்கள்தாம். 

 

திரைப்படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவதன்மூலம் புதிதாக யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையை உண்டுபண்ணுவது மற்றொரு தந்திரம். ஏன்? முஸ்லிம்கள் மது குடிப்பதில்லை; போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதில்லை; வட்டிக்குக் கடன் வாங்குவதில்லை; பெண்கள் புர்கா அணிவதால் அவர்கள் அழகுசாதனப் பொருள்களையோ அரைகுறை ஆடைகளையோ  வாங்கி அலங்கரித்துக்கொண்டு வீதியில் உலா வருவதில்லை; இதனால் அவர்களின் வியாபாரம் கொழிப்பதில்லை. ஆகவேதான் முஸ்லிம்கள்மீது அவர்களுக்கு எந்தவித விருப்பமுமில்லை. அவர்களைப் பொருத்த வரை முஸ்லிம்களை அவர்களின் வியாபாரத்திற்கு ஒரு தடைக்கல்லாகத்தான் எண்ணுகின்றார்கள்.

 

தற்போது இந்தியாவில் இருபத்தைந்து கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தைப் புரிந்துகொண்டு, அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இன்னும் ஐம்பது கோடிப் பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் நிலைமை என்னாகும்? அங்கெல்லாம் மதுக்கடைகள் மூடப்படும்; அழகு சாதனப் பொருள்கள், கவர்ச்சியான ஆடைகளின் வியாபாரம் படுத்துக்கொள்ளும்; விபச்சாரத் தொழில் நசிந்துபோகும்; வட்டிக் கடைகள் வழக்கொழிந்துபோகும்; பீடி, சிகரெட், புகையிலை, பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் மறைந்துபோகும். சமூகம் தூய்மையடைந்து விடுவதால் சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுகின்ற எந்த வியாபாரமும் முஸ்லிம்கள் மத்தியில் நடைபெறாது. இவற்றையெல்லாம் அவர்கள் விரும்புவார்களா?

 

சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது” என்ற இறைக்கட்டளையையும் மீறி, தம் சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் மீன்பிடித்தவர்கள்தாமே இந்த யூதர்கள்? அவர்கள் தம் வியாபாரம்  நொடித்துப் போகுமாறு விட்டுவிடுவார்களா? தம் வியாபாரத்திற்கு எதிராக உள்ள எவரையும் வளரத்தான் விடுவார்களா?

 

இந்தத் திரைப்படங்களின் தாக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சரியாக அறியாதோரின் மனங்களில்  அவர்களைப் பற்றிய தவறான பிம்பத்தைப் பதிவு செய்துவிட்டது. இதனால் முஸ்லிம்கள் உண்மையிலேயே தீவிரவாதிகள்தாம் என்ற மனஓட்டத்திற்கு அவர்களைத் தள்ளிவிட்டது. ஆதலால் அம்மக்கள் முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை; அவர்களோடு இயல்பாகப் பழகுவதில்லை; நட்புகொள்வதில்லை; அண்டைவீட்டினராக இருக்க விரும்புவதில்லை. இன்னும் ஒருபடி மேலேபோய், அண்ணன்-தம்பிகளாக, மாமன்-மச்சான்களாகப் பழகிவந்தோரும் அவர்களைத் தவறான எண்ணத்தோடும் நம்பிக்கையின்மையோடும் பார்க்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது. அது மட்டுமன்று, அவர்களை யாராவது அடித்தாலும் ஓடிவந்து தடுப்பதில்லை. அவர்கள் எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும் கைகொடுப்பதில்லை. இதனால் பிற சமயச் சகோதரர்களைவிட்டு விலகியே வாழ வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் இன்றைய முஸ்லிம்கள்.

 

இவ்வாறு தீய எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் தாக்கம் அப்போது தோன்றி, குறிப்பிட்ட சில நாள்களோடு முடிந்துபோய்விடுவதில்லை. அந்தத் தவறான கருத்தை அடுத்தடுத்த தலைமுறை வரை கொண்டு போய்ச் சேர்ப்பதில் முனைப்போடு செயல்படுகின்றார்கள். ஆம்! தொலைக்காட்சி அலைவரிசைகளில் அந்த நச்சுக் கருத்தைக் கொண்டுள்ள திரைப்படங்களை அவ்வப்போது ஒளிபரப்புகின்றார்கள். அதைக் காணும் பிஞ்சு உள்ளங்களில் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான பிம்பம் பதிந்துபோய்விடுகிறது. அது மட்டுமின்றி, யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதால் அவை காலந்தோறும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்துகொண்டே இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

 

1995ஆம் ஆண்டு வெளியான பம்பாய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கிவிஷயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா உள்ளிட்ட பல திரைப்படங்கள், அர்ஷுன் நடித்துள்ள பல திரைப்படங்கள் முதலியவை முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி, அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சமூக விரோதிகளாகவும் நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவும் கடத்தல்காரர்களாகவும் தவறாகச் சித்திரிப்பதைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றன. இந்தப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் இவ்வுலகில் அமைதி திரும்பாது; வன்முறை தொடர்ந்துகொண்டே இருக்கும். அதைச் செய்வோர் முஸ்லிம்கள் அல்லர். ஏனென்றால், “பாதையில் இடர்தரும் பொருள்களை அகற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்த பொய்யாமொழியை முஸ்லிம்கள் தம் அன்றாட வாழ்வில் பின்பற்றி வருவதால் அவர்கள் யாருக்கும் எந்த இடையூறும் செய்ய மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களின் எதிரிகள் வன்முறைச் செயல்களைத் தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். அவற்றைச் செய்துமுடித்ததும் முஸ்லிம்கள்மீது பழி போடுவார்கள்; அவர்கள் கைது செய்யப்படுவார்கள்; சிறைக்குள் வைத்துச் சித்திரவதை செய்யப்படுவார்கள். திரைப்படங்களால் தவறான கருத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் அதை உண்மையென நம்புவார்கள். இது ஒரு தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

 

உலக அளவில் அந்தந்த நாட்டு மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உலக மக்கள் அனைவரின் மனதிலும் ஒரே நேரத்தில் இஸ்லாத்திற்கெதிரான கருத்தை விதைக்கும் வேலையை யூதர்கள் தொடர்ந்து மறைமுகமாகவே செய்துகொண்டிருக்கின்றார்கள். காட்சி ஊடகம் மட்டுமின்றி, அச்சு ஊடகத்தின் மூலமாகவும் இஸ்லாத்திற்கு முரணான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு நயமான நயவஞ்சகப் பேச்சாளர்கள்மூலமும் தவறான கருத்தை விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கான தீர்வு என்னவென்றால் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் கொள்கைக் கோட்பாடுகளையும் திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நயமாக நவின்ற பொய்யாமொழிகளையும் சகோதரச் சமுதாய மக்களுக்கு எவ்வகையிலேனும் தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு நாம் நடத்துகின்ற இஸ்லாம் சார்ந்த சொற்பொழிவுகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும். மேலும் நாம் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு, காட்சி ஊடகத்தையும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களில் உள்ள தவறான மனப்பான்மையை மாற்ற முடியும்.  

===============================