ஞாயிறு, 19 அக்டோபர், 2025

தகுதியானவரை நியமித்த தமிழக முதல்வர்


-----------------------------

‘சென்னை மாவட்ட காஜி’ எனும் உயர்பொறுப்பு பிற மாவட்ட காஜி பொறுப்பைப் போன்றது கிடையாது. ‘சென்னை மாவட்ட காஜி’யே தமிழ்நாட்டின் ‘தலைமை காஜி’யாகப் பார்க்கப்படுகிறார். இதுவரை அவ்வாறுதான்  நடைமுறை இருந்து வருகிறது. ஆகவே தகுதியானவரைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும் உலமாக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


‘சென்னை மாவட்ட காஜி’ பதவிக்கு நால்வர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுள் மூவரே அரசின் நிபந்தனைகளுக்கேற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருந்தனர். அவர்களுள் ஒருவர் ‘ஆலிம்’ எனும் வட்டத்திற்குள் இல்லாதவர் ஆவார்.


நியமனக் குழுவினர் தேர்வு செய்து கொடுத்த அடிப்படையிலும், பொதுமக்கள், உலமாக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும், மூவருள் மிகத் தகுதியானவர் என்ற அடிப்படையிலுமே தற்போதைய ‘சென்னை மாவட்ட காஜி’ தமிழக முதல்வரால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை மக்கள் மன்றத்திற்குச் சமர்ப்பித்துக்கொள்கிறேன்.


‘சென்னை மாவட்ட காஜி’ பதவிக்குப் போட்டியிட்டுத், தேர்வு செய்யப்படாத ஆலிம்கள் இருவர் அமைதியாக இருக்கும்போது, ஆலிம் அல்லாத அந்த ஒருவரும், அவர் சார்பாகச் சிலரும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவது ஏற்புடையதன்று.


‘காஜி’ பதவியானது வாரிசு அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ வழங்கப்படுதில்லை. மாறாக முழுக்க முழுக்கத் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுவதாகும். ஆகவே மிகத் தகுதியானவரான மௌலானா மௌலவி முஃப்தி என்.பீ. உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அவர்களைத் தமிழக முதல்வர் நியமனம் செய்து அறிவித்தது மிகச் சரியானதும் நியாயமானதும் ஆகும் என்பதைப் பொதுமக்களின் சார்பாகவும் உலமாக்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.


மிகத் தகுதியானவரை ‘சென்னை மாவட்ட காஜி’யாகத் தமிழக முதல்வர் நியமனம் செய்ததைப் பாராட்டி, உலமாக்கள் சார்பாக அவருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


அன்புடன்

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

பட்டினம்பாக்கம், சென்னை-28

19 10 2025

================





வெள்ளி, 17 அக்டோபர், 2025

திருமணத்திற்குத் தகுதியானவர் யார்?


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

திருமணம் எனது வழிமுறை. யார் என் வழிமுறையைச் செயல்படுத்தவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை...” (இப்னுமாஜா: 1846/ 1836) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். இதன் அடிப்படையில்தான் நாம் அனைவரும் திருமணம் செய்துகொள்கிறோம்; திருமணம் செய்துவைக்கிறோம். ஆனால் எல்லோருமே திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்று கேட்டால், அதில் விதிவிலக்கு உள்ளோரும் இருக்கின்றனர் என்பதே பதிலாகும். இளைஞர்கள் மூவிதம் உள்ளனர். 1. ஆண்மை உணர்வு அளவுக்கு மிஞ்சிய நிலையிலுள்ள இளைஞர்கள். 2. ஆண்மை உணர்வு அறவே இல்லாத இளைஞர்கள். 3. ஆண்மை உணர்வு இயல்பாக உள்ள இளைஞர்கள்.

 

இம்மூவகையினருள் முதலாம் வகையினர் திருமணம் செய்துகொள்வது (ஃபர்ள்) கட்டாயமானதாகும். இரண்டாம் வகையினர் திருமணம் செய்துகொள்வது (ஹராம்) தடைசெய்யப்பட்டதாகும். மூன்றாம் வகையினர் திருமணம் செய்துகொள்வது (சுன்னத்) நபிவழியாகும். முதலாம் வகையினர் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர்கள் விபச்சாரம் போன்ற தவறான வழியில் சென்றுவிட வாய்ப்புண்டு. எனவேதான் அவர்கள் திருமணம் செய்துகொள்வது கடமை என்கிறோம். இரண்டாம் வகையினர் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் தம் மனைவியைத் தாம்பத்திய உறவில் திருப்திப்படுத்த இயலாது. அதனால் அப்பெண்ணின் வாழ்க்கை இழப்புக்குரியதாக மாறிவிடும். எனவேதான் அத்தகையோர் திருமணம் செய்வதுகொள்வது தடைசெய்யப்பட்டது என்கிறோம்.

 

ஆக இளைஞர்களாக உள்ள அனைவரும் திருமணம் செய்துகொள்வது சுன்னத் இல்லை. மாறாக ஆண்மை உணர்வுள்ள ஆண்களுக்குத்தான் திருமணம் செய்துகொள்வது சுன்னத் ஆகும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இளைஞர்களை நோக்கி, “இளைஞர்களே! (உங்களுள்) தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று சொன்னார்கள் (புகாரீ: 5066)

 

இந்த நபிமொழி நமக்கு உணர்த்துவது, தாம்பத்திய உறவு மேற்கொள்வதற்கான ஆற்றல் உள்ளோர்தாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும். தாம்பத்திய உறவில் மனைவியைத் திருப்திப்படுத்த இயலாது எனும் நிலையிலுள்ள இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வது தடையாகும். ஏனெனில் ஒவ்வோர் ஆணுக்கும் உணர்வுகள் இருப்பதைப்போல் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணர்வுகள் உள்ளன. அந்த உணர்வுகளின் தேவையை நிறைவேற்றுவதே மணமுடித்த ஆண்-பெண் இருபாலரின் கடமையாகும். அந்தத் தேவையை நிறைவேற்றுவதில் ஒருவருக்கொருவர் புரிதல் உணர்வோடு செயல்பட வேண்டும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்வதன்மூலம் தம் கற்பைக் காத்துக்கொள்ளலாம்.

 

திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஓர் இளைஞர் தம் மனைவியாக வரவுள்ள பெண்ணுக்குக் குறிப்பிட்ட அளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுக்க வேண்டும். அது பணமாகவோ, பொருளாகவோ, நகையாகவோ இருக்கலாம். ஓர் இளைஞர் ஏழையாக இருக்கிறார். அதேநேரத்தில் திருமணம் செய்துகொள்ள ஆர்வத்தோடு இருக்கிறார். ஆனால் மஹ்ர் கொடுக்க அவரிடம் எதுவும் இல்லை. இப்போது இவர் திருமணம் செய்துகொள்ளலாமா? ஆம். அவர் திருமணம் செய்துகொள்ளலாம். ஏனெனில் திருமணத்திற்கு மிக முக்கியத் தகுதி, அவர் தம் மனைவியைத் தாம்பத்திய உறவில் திருப்திப்படுத்தும் வகையில் ஆண்மை உணர்வுள்ளவராக இருக்க வேண்டும் என்பதே. மாறாக பொருளாதாரம் இல்லை. அது இரண்டாம் பட்சம்தான். பின்வரும் நிகழ்வு அதற்குச் சான்றாக உள்ளது.

 

சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்” என்று சொன் னார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தப் பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு அதைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டார்கள்.

 

தம் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப்பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களுள் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்!” என்று சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (அவரிடம்), “(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும்  இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று பதில் சொன்னார்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள். அவர் போய்ப் பார்த்துவிட்டு, பிறகு திரும்பி வந்து, “இல்லை. அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இரும்பாலான ஒரு மோதிரமாவது (கிடைக்குமா எனத்) தேடிப்பார்!” என்றார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை. அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம்கூடக் கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த எனது வேட்டி உள்ளது” என்றார். -அறிவிப்பாளர் சஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல்துண்டுகூட இல்லை; அதனால்தான் தமது வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.-

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உமது (இந்த ஒரு) வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அந்த வேட்டியை நீர் உடுத்திக்கொண்டால், அவள்மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக்கொண்டால் உம்மீது அதில் ஏதும் இருக்காது. (உமது வேட்டியைக் கொடுத்து விட்டு என்ன செய்யப்போகிறாய்?)” என்று கேட்டார்கள். அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டுப் பிறகு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள்.

 

அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “(குர்ஆனில்) இன்ன அத்தியாயம்இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன” என்று அவற்றை அவர் எண்ணி எண்ணிச் சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். “ஆம் (ஓதுவேன்)” என்று அவர் பதிலளித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள். (புகாரீ: 5126)

 

மஹ்ராகக் கொடுக்க ஓர் இரும்பு மோதிரம்கூட இல்லாத, மாற்றுத் துணிகூட இல்லாத ஒருவருக்குத் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்கள் மனனமாகத் தெரிந்துள்ளதை அப்பெண்ணுக்குக் கற்றுக்கொடுப்பதையே மஹ்ராக ஆக்கித் திருமணம் செய்துவைத்தார்கள். ஆக அவர் பரம ஏழை என்பது தெளிவாகிறது. இருப்பினும் அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மணமுடித்துவைத்த காரணம், அவர் அப்பெண்ணைத் தாம்பத்திய உறவில் திருப்திப்படுத்தும் ஆண்மையுள்ளவராக இருந்தார் என்பதால்தான்.

 

இவ்வாறு ஆண்மையுள்ளோராக இருந்தும் மஹ்ர் கொடுக்க வசதியில்லாத ஏழைகளாக இருந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்துவையுங்கள் என்பதுதான் அல்லாஹ்வின் கட்டளை. அதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அல்லாஹ் தன் அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனாகவும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (24: 32)

 

ஆகவே இந்த இறைவசனத்தின்படி, ஒவ்வொரு மஹல்லாவிலும் தாம்பத்திய உறவுக்குத் தகுதியான ஏழ்மை நிலையிலுள்ள இளைஞர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது செல்வர்கள்மீதும் அந்தந்தப் பள்ளித்  தலைவர்கள், நிர்வாகிகள்மீதும் கடமையாகும்.

 

ஒரு பெண்ணுக்கு ஆண்மையற்ற கணவன் வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கப்பெற்றால், அவள் உடனடியாக அவனிடமிருந்து குலா பெறக் கூடாது. ஏனெனில் சிலருக்கு எல்லாப் பருவங்களிலும் ஆண்குறியில் விரைப்புத்தன்மை ஏற்படாது. ஆண்டின் நான்கு பருவங்களில் ஏதேனும் பருவத்தில் அவனுக்கு விரைப்புத்தன்மை ஏற்படலாம். அச்சமயத்தில் அவன் தன் மனைவியைத் திருப்திப்படுத்துவான். அதன்பின் அவர்களுக்குக் குழந்தையும் பிறக்கும். எனவே அவசரப்பட்டு, பெண்கள் குலா வாங்க முயலக் கூடாது.

 

இதுபோன்ற ஒரு நிகழ்வு நபியவர்களின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: ரிஃபாஆ அல்குரழீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மண உறவில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்குச் செய்து மணவிலக்கை முடிவானதாக்கி விட்டார்.  ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைப் போன்றதுதான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதைய உன் கணவரான) அவரது இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உனது இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்ள முடியாது” என்று கூறினார்கள். (புகாரீ: 2639)

 

அந்தப் பெண்மணி அவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பின்னர்தான் அந்த ஆணுடைய நிலையை எடுத்துரைக்கிறார். இருந்தாலும் நபியவர்கள் உடனடியாக அப்பெண்ணுக்கு குலா கொடுத்துவிடுமாறு கட்டளையிடவில்லை. மாறாக நீயும் அவரும் ஒருவருக்கொருவர் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னரே அவரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து யோசிக்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்கள். ஆகவே ஒரு பெண், ஆண்மைக் குறைபாடு என்ற காரணத்தை முன்வைத்து குலா கேட்டால், உடனடியாகக் கொடுத்துவிடாமல் ஓராண்டு வரை காத்திருக்குமாறு காழீ சொல்ல வேண்டும். அந்த ஓராண்டுக் காலத்தில் கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தாம்பத்திய உறவில் ஈடுபட்டு ஒருவரையொருவர் திருப்திப்படுத்த முயல வேண்டும்.

 

மேலும் ஆண்மைக் குறைபாடு என்பது பெரும்பாலும் தீர்க்க முடியாத குறைபாடு இல்லை. அதற்கு உரிய முறையில் சிகிச்சை பெற்று, இயற்கை மருந்துகளைச் சாப்பிட்டால் எளிதில் சரிசெய்து விடலாம். ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு உள்ளதைப் போலவே பெண்களுக்குப் பெண்மைக் குறைபாடு உண்டு. அதாவது ஆண்களைப் பார்த்தால் எந்த உணர்வும் ஆசையும் ஏற்படாது. எவ்வளவு தூண்டினாலும் தொடுஉணர்வு செயல்படாது. இத்தகைய பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது. அதுபோலவே தீராப் பிணிக்கு ஆளான பெண்களுக்கும் திருமணம் செய்துவைக்கக்கூடாது.

 

ஆக எதிர் பாலினத்தைப் பார்க்கும்போது ஈர்ப்பு ஏற்படுகிற ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டுமேயன்றி, ஈர்ப்பில்லாத ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்துவைப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு பெற்றோரும் பொறுப்பாளர்களும் உணர வேண்டும். குறிப்பாக ஆண்-பெண் விருப்பமின்றித் திருமணம் செய்துவைப்பதைத் தவிர்த்தல் வேண்டும். அதுவே தம்பதியர் தலாக், குலா எனும் முடிவுக்குச் செல்வதைத் தடுக்கும் வழியாகும்.

============================

















திங்கள், 13 அக்டோபர், 2025

மருத்துவர்களே! ஒரு நாளையேனும் அறத்திற்காக ஒதுக்குங்கள்!


---------------------------------------------------------

மருத்துவர்களே! 

உங்களிடமோ வழக்கறிஞரிடமோ ஒருவர் அரை மணி நேரம் இலவசமாக ஆலோசனை செய்துவிட்டு வரமுடியுமா? முடியாது. ஏனெனில் உங்களின் நேரம் அவ்வளவு மதிப்புமிக்கது; இச்சமுதாய மக்களுக்கானது. எனவே உங்களைச் சந்திக்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 


இருப்பினும் ஆண்டு முழுவதும் இவ்வாறு சம்பாதித்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? “இச்சமுதாயத்திற்கு நாம் செய்யும் அறம் என்ன? இச்சமுதாயத்திற்கு நம் கல்வியால் பயன் என்ன?” என்று நீங்கள் ஒரு நாளேனும் சற்று யோசித்துப் பார்த்தீர்களா?


ஆம். இச்சமுதாயத்தைச் சேர்ந்த கடைநிலை மக்கள் பலர் மருத்துவச் சேவை கிடைக்காமல் முடங்கிப்போய்க் கிடக்கின்றார்கள்; மருத்துவத்திற்காகச் செலவுசெய்ய முடியாமல் தவிக்கின்றார்கள்; பள்ளிவாசல்தோறும் யாசகம் கேட்டு நிற்கின்றார்கள். அவர்களுக்காக மாதந்தோறும் ஒரு நாள் ஒதுக்குங்கள். நீங்களும்  உங்கள் நண்பர்களும் ஒன்றிணைந்து உங்கள் பகுதியில் (மஹல்லா) ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடத்தி, அதில் இலவச ஆலோசனையும் சிகிச்சையும் வழங்குங்கள். இதுவே உங்கள் கல்வியால் இச்சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் அறச் செயலாகும் என்பதை உணருங்கள். 


வழக்கறிஞர்களே!

நீங்களும் உங்கள் நண்பர்களும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நாள் இலவசச் சட்ட முகாம் நடத்தி, அவர்களுக்கு இலவசமாகச் சட்ட உதவிகளை வழங்குங்கள்; வழக்குகள் குறித்த தெளிவை வழங்குங்கள்.  எவ்வாறு வழக்குத் தொடுப்பது, எவ்வாறு சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது, எவ்வாறு சட்டக் கல்வி பயில்வது உள்ளிட்ட பல்வேறு வியங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். 


இதுவே நீங்கள் உங்கள் கல்வியின் மூலம் இச்சமுதாயத்திற்குச் செய்யும் அறமாகும் என்பதை உணருங்கள். 

அன்புடன் 

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 

13 10 2025 

===================================






புதன், 8 அக்டோபர், 2025

தீரமிக்கோர் யார்?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

இன்று நாம் காணும் இடமெல்லாம் குற்றங்கள் மலிந்து காணப்படுகின்றன. திருட்டு, மோசடி, ஏமாற்றுதல், வன்புணர்வு, பெண்சீண்டல், விபச்சாரம், கொலை முதலிய பாவச் செயல்களும் குற்றங்களும் நிறைந்துவிட்டன.  நாள்தோறும் இச்செய்திகளின்றி நாளிதழ்கள் இல்லை எனும் நிலை உருவாகிவிட்டது. அத்தோடு புகைபிடித்தல்மது அருந்துதல், போதை ஊசி ஏற்றிக்கொள்ளுதல், போதை மருந்துகளை உட்கொள்ளுதல் முதலான குற்றச் செயல்களையும் ஒரு சாரார் செய்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு தீயச் செயல்களும் குற்றச் செயல்களும் பெருகியதன் காரணம் என்ன? குற்றம் நடைபெறுகிறபோது அதைத் தட்டிக்கேட்போர் இல்லை; அல்லது குறைந்து விட்டனர் என்பதே.

 

குற்றச் செயல்களில் ஈடுபடுவது பாவம் என ஊட்டி வளர்க்கப்படாத சிறுவர்கள் பெரியவர்களாக வளர்ந்ததும் அவற்றைச் செய்யத் தொடங்கிவிடுகின்றார்கள். அவர்களுக்கு அவை குற்றச் செயலாகத் தோன்றாமல் சாதாரண செயல்களாகவே தெரிகின்றன. மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் குற்றச் செயல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அக்காட்சிகளைப் பார்க்கின்ற அந்த இளைஞர்களின் மனங்களில் அவை மிக எளிதாகப் பதிவாகிவிடுகின்றன. எனவே அவர்களும் அவற்றைச் செய்யும்போது அவர்களுக்கு எந்தவித வருத்தமும் ஏற்படுவதில்லை.

 

இதனால் குற்றங்கள் குறித்தும் அவற்றைச் செய்தல் பாவம் என்பது குறித்தும் இளம் பருவத்திலேயே பதிவு செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையாகும். நாம் செய்யும் குற்றங்களை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நாளை மறுமையில் அது குறித்து நம்மை விசாரிப்பான் என்றும் இளவயதிலேயே பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தந்தை லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தம் பிள்ளைக்குச் சொன்ன அறிவுரையை நாம் திருக்குர்ஆனில் பார்க்கலாம்: (லுக்மான் தம் மகனை நோக்கி) "என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவுக்கு இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ, வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும் இருக்கிறான். (31: 16)

 

பாவம் குறித்த அச்சத்தையும் இறைவனின் ஆற்றலையும் இது உணர்த்துகிறது. மிகச் சிறிய பாவமாயினும் அதை எங்கிருந்துகொண்டு செய்தாலும், அதை உயர்ந்தோன் அல்லாஹ் அறிவான்; நாளை அதை விசாரணைக்குக் கொண்டுவருவான் என்ற அச்சம் ஒருவனின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டால் எந்தத் தீங்கையும் அவன் ஒருபோதும் செய்யமாட்டான்.

 

தீரமிக்கோர்: பெற்றோர் தம் பிள்ளைகளின் மனங்களில் இளம் வயதிலேயே பதியவைக்க வேண்டிய மற்றொரு செய்தி, ‘நன்மையை ஏவு; தீமையைத் தடு’ என்பதுதான். இன்று பெரும்பாலோர் இந்த நற்செயலைக் கைவிட்டுவிட்டனர். தீமையைக் கண்டவுடன் அதைத் தடுக்க முற்பட வேண்டும். அதைத் தடுக்க முற்படாததாலேயே, ‘நம்மைக் கேட்க யார் இருக்கிறார்?’ என்ற துணிவு அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஒருவன் தவறு செய்யும்போது, நான்கு பேர் அவனை எதிர்த்துக் குரல் கொடுத்தால், அவன் அடுத்த தடவை அந்தத் தவறைச் செய்ய அஞ்சுவான். இல்லையேல் முதல் தடவை அச்சத்தோடு செய்தவன், அடுத்தடுத்த தடவைகளில் துணிவோடு செய்யத் தொடங்கிவிடுவான்.

 

எனவேதான் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே பதிய வைக்க வேண்டிய ஓர் அறிவுரையை நபி லுக்மான் அலைஹிஸ்ஸலாம் மூலம் நமக்கு அல்லாஹ் உணர்த்துகிறான்: “என்னருமை மகனே! தொழுகையைக் கடைப்பிடி, நன்மையான செயல்களை ஏவி, தீமையான செயல்களிலிருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது தீரமிக்கச் செயல்களுள் ஒன்றாகும்.” (31: 17) 

 

நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் நற்பணியை எல்லோரும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது.  ஏனெனில் அதைச் செய்யும்போது அவர்கள் எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டிவரும். அவ்வாறு அவர்கள்  எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரிடும்போது அவர்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பொறுமை இல்லையேல் இந்த நற்பணியைச் செய்ய இயலாது. பொறுமையோடு மீண்டும் மீண்டும் செய்தால்தான் தவறுகளையும் குற்றங்களையும் தடுத்து நிறுத்த முடியும். இதனால்தான் அல்லாஹ் அந்த வசனத்தின்  இறுதியில், “இது தீரமிக்கச் செயல்களுள் ஒன்றாகும்” என்று கூறுகின்றான்.

 

தடுக்கும் உணர்வு வேண்டும்: தீமையைக் கண்டவுடன் அதைத் துணிவுடன் தடுக்கும் உணர்வு பிறக்க வேண்டும். அந்நேரத்தில் தனிப்பட்டதொரு துணிவு ஏற்பட வேண்டும். துணிவில்லாதோர் தீமையைத் தடுக்க முடியாது. கீழ்க்காணும் நபிமொழி அதை உறுதிப்படுத்துகிறது:

 

“உங்களுள் ஒருவர் ஒரு தீமையை (-மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும். இயலா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 78)

 

ஓர் இளைஞன் சிகரெட் புகைப்பதைப் பார்க்கும் நாம் அந்த சிகரெட்டை அவனுடைய கையிலிருந்து தட்டிவிட்டு, “சிகரெட் புகைத்தல் கூடாது, அது ஒரு முஸ்லிமின் பண்புக்கு எதிரானது” என்றெல்லாம் அறிவுரை சொல்ல வேண்டும். இதை நாம் ஒரு தடவை துணிவோடு செய்துவிட்டால், அடுத்த தடவை அவன் சிகரெட் புகைக்கப் பயப்படுவான். பின்னர் அப்பழக்கத்தை அவன் விட்டுவிடலாம். மாறாக அவன் சிகரெட் புகைப்பதை நாம் பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், பின்னொரு காலத்தில் அவன் மதுக் கடையில் நிற்பான். ஆக குற்றங்கள் பெருகுவதற்கு நாம்தாம் காரணம்; நம் இயலாமைதான் காரணம்.

 

நாம் செய்யும் உதவி: ‘நமக்கேன் வம்பு’ என்று பொறுப்புணர்வற்றுச் செல்வது நம்முடைய இயலாமையாகும். அதேநேரத்தில் குற்றம் செய்பவனை, அக்குற்றத்தைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவது நாம் அவனுக்குச் செய்யும் உதவியாகும். இத்தகைய மாற்றுச் சிந்தனையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

 

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவிசெய்'' என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அநீதி இழைக்கப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அநியாயக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!'' என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவனை அநியாயம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அநீதியாளனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள். (புகாரீ: 6952)

 

தீமையைத் தடுக்காவிட்டால்: அநியாயத்தை நாம் தடுக்க முன்வரவில்லையென்றால் ஒரு நாள் அதன் தாக்கம் நம்மீதும் ஏற்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சான்றாக, ஃபலஸ்தீன் நாட்டில் ஃகாஸா நகரில் இஸ்ரேல் இராணுவத்தால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டு அண்டையிலுள்ள முஸ்லிம் நாடுகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இது நாள் வரை அமைதி காத்து வந்தன. அதனால் தற்போது அது கத்தார் நாட்டின்மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. அதன் பின்னர்தான் அரபு நாடுகளெல்லாம் ஒன்று சேர்ந்து இனி வரும் காலங்களில் இது மாதிரியான தாக்குதல் எந்த நாட்டின்மீதும் நடத்தக்கூடாது என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளன.

 

ஆசிரியராகவே இருந்தாலும்...: தவறு செய்வோர் நம்மைவிட இளையோராக இருந்தால் நாம் எதையும் யோசிக்காமல் எளிதாகத் தடுத்த நிறுத்தத் துணிந்துவிடுவோம். ஆனால் தவறு செய்வோர் நம்மைவிட வயதில் மூத்தவராகவோ நமக்குக் கற்பிக்கும் ஆசிரியராகவோ இருந்தால் அவரை எதிர்த்துப் பேச, அவர் செய்வதைத் தடுக்க நமக்குத் துணிவு ஏற்படுமா? ஆழமான இறைநம்பிக்கையே ஆசிரியரானாலும் தட்டிக்கேட்கத் தூண்டும்.  அதேநேரத்தில் அவரின் வயதுக்கு மதிப்பளித்து மிகக் கண்ணியமாக அவரிடம் நடந்துகொள்ள வேண்டும்.

 

வரலாற்று நிகழ்வு ஒன்று திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. அது ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நடைபெற்றது. ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கல்வி கற்கச் சென்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் ஆசிரியரிடம், ‘உங்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து உங்களிடம் நான் கற்றுக்கொள்ள வந்துள்ளேன்’ என்று கூற, ‘நீர் என்னிடம் பொறுமையாக இருப்பீரா?’ என்று கேட்கிறார். ‘ஆம்! நான் இன் ஷாஅல்லாஹ் பொறுமையாகவே இருப்பேன்’ என்று கூறுகிறார். ‘நானாக எதையும் கூறாத வரை நீர் எதையும் என்னிடம் கேட்கக்கூடாது’ என்ற நிபந்தனையோடு இருவரும் செல்கின்றார்கள்.

 

முதலில் அவ்விருவரும் கப்பலில் பயணம் செல்கின்றார்கள். அப்போது அவர் அக்கப்பலைத் துளையிடுகிறார். அதைக் கண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் இருவருக்கிடையே உள்ள நிபந்தனையை மறந்துவிட்டு, தவறு என்று தெரிந்தவுடன், “கப்பலில் துளையிடுகின்றீரே, அதில் பயணம் செய்யும் நாம் மூழ்கி இறந்துவிடுவோமே?” என்று கூறினார். அதற்கு அந்த ஆசிரியர், “நீர் என்னுடன் பொறுமையாக இருக்க மாட்டீர் என்று நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா?” என்றார். “நான் அதை மறந்துவிட்டேன். அதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்” என்று கூறினார். பின்னர் இருவரும் ஒரு பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தனர். அங்குச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒரு சிறுவரின் தலையைத் திருகி, அவரைக் கொன்றுவிட்டார்.

 

அதைப் பார்த்துக் கொதித்தெழுந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் ஆசிரியரிடம், “எந்தப் பாவமும் செய்யாத பச்சிளம் பாலகரை இப்படி அநியாயமாகக் கொன்றுவிட்டீரே?” என்றார். அதற்கு அவர், “நீர் என்னுடன் பொறுமையாக இருக்க மாட்டீர் என்று நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா?” என்றார். அதற்கு அவர், “இனி ஒரு தடவை நான் உம்மிடம் எதையேனும் கேட்டால் அதுதான் நாம் பிரிந்துசெல்லும் நேரமாகும். எனவே இனி நான் உம்மிடம் எதையும் கேட்க மாட்டேன்” என்றார்.

 

பின்னர் அவ்விருவரும் ஒரு சிற்றூருக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு யாரும் உணவு கொடுத்து உபசரிக்கவில்லை. திரும்பி வந்துகொண்டிருந்தபோது அங்கு ஒரு சுவர் கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்தது.  அதைத் தாங்கிப் பிடித்துச் செப்பனிட்டு நிலைநிறுத்தினார் ஆசிரியர். அதைக் கண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் ஆசிரியரிடம், “உணவு கொடுத்து உபசரிக்காத ஊரார்க்கு ஒன்றுமே இன்றிச் செப்பனிட்டுக் கொடுத்துள்ளீரே. அவர்களிடம் சொல்லிவிட்டுச் செய்திருந்தால் அவர்கள் ஏதேனும் கூலி கொடுத்திருப்பார்கள். அதை வைத்து நான் உணவு சாப்பிட்டிருக்கலாம் அல்லவா?” என்றார். அதைக் கேட்ட அந்த ஆசிரியர், “இதுதான் நாம் இருவரும் பிரியும் நேரம் ஆகும். இருப்பினும் உம்மால் பொறுமையாக இருக்க முடியாத என்னுடைய அச்செயல்களுக்கான விளக்கத்தை உமக்குச் சொல்லிவிடுகிறேன்” என்று அதற்கான விளக்கத்தைக் கூறலானார்.

 

“முதலில் நான் கப்பலில் ஏன் துளையிட்டேன் என்றால், அக்கரையில் உள்ள ஓர் அரசன், அங்கு வருகின்ற நல்ல கப்பல்களையெல்லாம் அபகரித்துக்கொள்கிறான். அவ்வாறு இந்தக் கப்பலையும் அபகரித்துக்கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் அவ்வாறு செய்தேன். இரண்டாவது, அந்தச் சிறுவனை நான் ஏன் கொலை செய்தேன் என்றால், அவன் வளர்ந்து பெரியவனாகித் தம் பெற்றோரை இறைமறுப்புக்குத் திருப்பும் நிலை உண்டாகும். எனவேதான் அவனைக் கொலை செய்தேன். மூன்றாவது, அந்தச் சிற்றூரில் இருந்த சுவரைச் செப்பனிட்டு நிறுத்தினேன். ஏனென்றால் அச்சுவருக்குக் கீழ் ஒரு புதையல் உள்ளது. அது அநாதைச் சிறுவர்கள் இருவருக்குரியது. அவர்கள் பெரியவர்களாகின்ற வரை அச்சுவர் பாதுகாப்பாக நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தேன். ஆக இவற்றையெல்லாம் நான் என் விருப்பப்படி செய்யவில்லை. மாறாக என் இறைவனின் கட்டளைப்படியே செய்தேன்” என்றார்.

 

இந்நிகழ்வு சுட்டிக்காட்டுவது என்னவெனில், தீமையைச் செய்தவர் யாராக இருந்தாலும் அதைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதைத்தான். முன் நிபந்தனையிட்டுக் கல்வி கற்கச் சென்றாலும், அதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, கண்முன்னே ஒருவர் செய்யும் தீமையைக் கண்டுவிட்டு எப்படி ஒருவரால் அமைதியாக இருக்க முடியும் என்ற உணர்வைத்தான் அந்த நிகழ்வுகள் மூஸா நபிக்கு ஊட்டின. எனவே அவர் உடனுக்குடன் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

 

“(நம்பிக்கையாளர்களே!) உங்களுள் ஒரு கூட்டத்தார் (மனிதர்களைச்) சிறந்ததன் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான செயல்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டு இருக்கட்டும். இத்தகையோர்தாம் வெற்றி பெற்றவர்கள்” (3: 104) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.

 

ஆகவே நம் கண்முன் நடைபெறும் தீமை எத்தகையதாக இருந்தாலும் அதைச் செய்வோர் யாராக இருந்தாலும் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான் நம்முடைய வலுவான இறைநம்பிக்கையின் அடையாளமாகும். அத்தகைய துணிவையும் இறைநம்பிக்கையையும் ஏக இறைவன் அல்லாஹ் நமக்கு அருள்வானாக. நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் சிறந்த சமுதாயமாக நம்மை அவன் வாழ வைப்பானாக. 

=======================










புதன், 17 செப்டம்பர், 2025

கூர்ந்து கவனிப்போம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நாம் பார்ப்பதை, கேட்பதை, பிறர் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் அவ்வப்போது மறந்துவிடுகிறோம். இரண்டிரண்டு இலக்கமாகச் சொல்லப்பட்ட செல்பேசி எண்ணை, ‘நான்  ஒரு தடவை சொல்றேன்; சரியான்னு பாருங்க’ என்கிறோம். அவ்வப்போது ‘மறந்துவிட்டேன்’ என்ற வார்த்தையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அல்லது செய்யக்கூடாததைச் செய்துவிட்டு, ‘சாரி’ என்கிறோம். இவையெல்லாம் நம் கவனச் சிதறல்களால் ஏற்படுபவை.

 

இந்தக் கவனச் சிதறல் நாம் செய்யும் பல்வேறு செயல்களில் ஏற்படுகிறது. அதனால்தான் நாம் எந்தச் செயலையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க இயலுவதில்லை. இந்தக் கவனச் சிதறல்தான் நாம் தொழுகின்ற தொழுகையிலும் ஏற்படுகிறது. நாம் தொழுகின்றபோது, ஏற்கெனவே மனனம் செய்துவைத்துள்ள அல்ஹம்து அத்தியாயத்தையும் பிற அத்தியாயங்களையும் நம்மையறியாமலேயே ஓதிவிடுகிறோம். நாம் அவற்றை ஓதுகிறபோது அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் என்ன என்று யோசித்திருக்கிறோமா? பொருள் உணர்ந்து ஓதியுள்ளோமா? அல்லாஹ்வைப் புகழ்வதும் நமக்கான பிரார்த்தனையும் அல்ஹம்து அத்தியாயத்தில் உள்ளன. அவற்றை உணர்ந்து நாம் ஓதியுள்ளோமா? இல்லை என்பதே நம்முள் பெரும்பாலோரின் பதிலாகும்.

 

அதுபோலவே அதில் ஒவ்வொரு தடவையும் நாம் சொல்கிற ‘அல்லாஹு அக்பர்’ என்பதன் பொருள் உணர்ந்து சொல்லியுள்ளோமா? ருகூஉ, சஜ்தாவில் ஓதுகிற துதிச் சொற்களைப் பொருள் உணர்ந்து சொல்லியுள்ளோமா? தொழுகையின் இறுதியில் ஓதுகிற அத்தஹிய்யாத், தரூதே இப்ராஹீம், துஆ ஆகியவற்றைப் பொருள் உணர்ந்து ஓதியுள்ளோமா? எல்லாமே நாம் மனனம் செய்துவைத்துள்ளதால்  அவை அப்படியே, தானியங்கி இயந்திரம்போல் இயல்பாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. இறுதியில் ஸலாம் சொல்லித் தொழுகையை முடித்துவிடுகிறோம். ஆனால் நாம் தொழுத அந்தத் தொழுகை நமக்கு மனஅமைதியைத் தந்ததா? அதன்மூலம் நமக்கு முழுமையான நன்மை கிடைக்குமா என்றெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை. 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அம்மார் பின் யாசிர் அறிவித்துள்ளதாவது: ஒருவர் தமது தொழுகையை முடித்துக்கொண்டு (வீடு) திரும்புகிறார். அப்போது (தொழுததற்காகக் கிடைக்கும் நன்மையில்) பத்தில் ஒன்று, ஒன்பதில் ஒன்று, எட்டில் ஒன்று, ஏழில் ஒன்று, ஆறில் ஒன்று, ஐந்தில் ஒன்று, நான்கில் ஒன்று, மூன்றில் ஒன்று, பாதி இவற்(றில் ஒன்)றைத் தவிர வேறெதுவும் அவருக்கு எழுதப்படுவதில்லை. (அபூதாவூத்:, 796/ 675)

 

இந்த நபிமொழி நம் தொழுகையைக் குறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. நாம் தொழுத தொழுகைக்கு நமக்கு முழுமையான நன்மை கிடைப்பதில்லை. காரணம், நாம் தொழுகின்றபோது நம் கவனம் முற்றிலுமாக அல்லாஹ்வை நோக்கியதாகவோ அவனைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவோ இருப்பதில்லை. நாம் என்ன ஓதுகிறோமோ அவற்றில் நம் கவனத்தைச் செலுத்துவதில்லை.  ஒவ்வொரு  தடவை நாம் கூறும் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப்பெரியவன் என்பதன் பொருள் என்ன, அவன் எவ்வளவு பெரியவன் என்பதையெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை.

 

அதாவது ஒருவர் தாம் தொழும் தொழுகைக்கு அவரது கூரிய கவனம், இறையச்சம், மனஓர்மை ஆகியவற்றைப் பொருத்துதான் நன்மையைப் பெற முடியும். இவை இல்லாமல் தொழுதோர்  அவர்களின் நிற்றல், குனிதல், சிரம் பணிதல், அமர்தல் ஆகியவற்றிற்கான நன்மையை மட்டுமே பெறுகிறார்கள். அதன்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுதோரின் நன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள். பத்தில் ஒன்று என்பது நூற்றுக்குப் பத்து மதிப்பெண்கள்ஒன்பதில் ஒன்று என்பது நூற்றுக்குப் பதினொன்று சொச்சம் மதிப்பெண்கள்; எட்டில் ஒன்று என்பது நூற்றுக்கு 12.5 மதிப்பெண்கள்; ஏழில் ஒன்று என்பது நூற்றுக்குப் பதினான்கு சொச்சம் மதிப்பெண்கள் என்று பொருள். இப்படியே படிப்படியாகக் கூடி, மிகுந்த கவனக் குவிப்போடு தொழுதவர் பாதி நன்மையைப் பெறுகிறார். அதாவது நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள். இதுதான் நம் கூரிய கவனத்திற்கும் கவனச் சிதறல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

 

பள்ளிவாசலில் சிலர் தொழுகின்றார்கள். அவர்களுடைய உடல் மட்டுமே அங்கே உள்ளது.  அவர்களின் உள்ளமோ உலகெல்லாம் உலா வந்துகொண்டிருக்கிறது. கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டுள்ள அவர்கள், இமாம் என்ன ஓதுகிறார்; எத்தனை ரக்அத் தொழுவிக்கிறார்; இது எத்தனையாவது ரக்அத் என்பதையெல்லாம் அறிவதில்லை. அல்லாஹு அக்பர் என்றவுடன் குனிவது, நிமிர்வது, சிரம் பணிவது, அமர்வது என்று ஒன்றன்பின் ஒன்றாகச் செய்வது அல்லது பக்கத்திலுள்ளவர் செய்வதைப் போன்று செய்வது. இதுதான் பெரும்பாலோரின் நிலை. இத்தகையோரின் தொழுகையைக் குறித்துதான், “தொழுகையில் அறவே கவனம் இல்லாமலிருந்தால் அந்தத் தொழுகை அவன் முகத்திலேயே வீசியெறியப்படும்” என்று வேறொரு நபிமொழி கூறுகிறது. (அத்துர்ருல் மன்ளூத்)

 

தொழுகையில் நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய பல்வேறு சாதனங்கள் இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில் உள்ளன. பற்பல திரைப்படக் காட்சிகள், இசைகள், பாடல்கள், வியாபாரச் சிந்தனைகள், அலுவலகச் சிந்தனைகள், இஎம்ஐ கடன் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு குறுக்கீடுகள் உள்ளன. அதையெல்லாம் தாண்டித்தான் நாம் தொழ வேண்டியுள்ளது. பல்வேறு காட்சிகள் நிறைந்த இந்தக் காலத்திலும் கூரிய கவனத்துடனும் மனஓர்மையுடனும் இறையச்சத்துடனும் தொழுவோரே  பாதி நன்மையைப் பெறுகின்றனர்.                                            

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் உருவப்படங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனைக்கொண்டு வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இந்தத் திரைச் சீலையை நம்மிடமிருந்து அகற்றிவிடு! ஏனெனில் இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் (என்னிடம்) குறுக்கிட்டுக்கொண்டேயிருக்கின்றன” என்று சொன்னார்கள். (புகாரீ: 374)

 

திரைப்படப் பாடல்களோ காட்சிகளோ இல்லாத நபியவர்களின் காலத்தில் ஒரே ஒரு திரைச்சீலையில் பொறிக்கப்பட்டிருந்த உருவப்படங்கள் அவர்களின் கவனத்தைத் திருப்புவதாக உணர்ந்தார்கள் என்றால் எந்த அளவுக்குத் தொழுகையில் மனஓர்மையை விரும்பியுள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நாம் திரும்பும் திசையெங்கும் காட்சிகள், படங்கள், இசை ஆகியவற்றையே பார்க்கிறோம்; செவியுறுகின்றோம். அதையும் தாண்டி நம் கைகளிலேயே தவழ்ந்துகொண்டிருக்கிற அறிதிறன்பேசியில் நாம் காணும் காட்சிகள் ஏராளம். இதன்பிறகு நாம் தொழுகையில் நின்றால் நம்முடைய மனக்கண் என்ன தோன்றும்? இறைவனைப் பற்றிய சிந்தனையா, நாம் பார்த்த காட்சிகளின் பிம்பங்களா?

 

தொழுகையில் மட்டுமின்றிச் செய்யும் செயலில் மனத்தை ஒருமுகப்படுத்தி, கூர்ந்து கவனம் செலுத்துவோர் மற்றோரை வென்றுவிடுகின்றனர். திருக்குர்ஆன் மனனம் செய்யும் வகுப்பிலுள்ள இருபது மாணவர்களுள் சிலர் மட்டும் ஈராண்டுகளில் அதை மனனம் செய்துவிடுகின்றனர். அவர்களுள் சிலர் நான்காண்டுகளாகியும் மனனம் செய்து முடிப்பதில்லை. இது அவ்விரு சாராரின் நினைவாற்றலையும் கவனக் குவிப்பையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

 

சாலையில் வாகனம் ஓட்டுவோருள் சிலர் பல ஆண்டுகளாக எந்த விபத்துமின்றி ஓட்டிவருகின்றனர். வேறு சிலர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். தம்முடைய நூறு சதவிகிதக் கவனத்தையும் சாலையில் செலுத்தி வாகனத்தை இயக்குவோர் விபத்தின்றிக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். சாலையில் கவனத்தைச் சிதற விடுவோர் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோர் பலர் ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். வேறு சிலர் விடுபட்ட பாடங்களை மீண்டும் மீண்டும் எழுதியும் தேக்கமடைகின்றனர். தம்முடைய முழுக் கவனத்தையும் பாடத்தில் செலுத்துவோர் வெற்றிபெறுகின்றனர்; கவனச் சிதறலுக்குள்ளானோர் தோல்வியடைகின்றனர்.

 

தள்ளுவண்டியில் வியாபாரத்தைத் தொடங்கி, பின்னர் சிறிதாக ஒரு கடையை வாடகைக்குப் பிடித்துகொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று நகரத்தில் மிகப்பெரிய வணிக வளாகத்தையே நடத்துகின்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அவர்தம் வியாபாரத்தில் செலுத்திய நூறு சதவிகிதக் கவனம், உழைப்பு, தன்முனைப்பு ஆகியவையே ஆகும். ஆக ஒவ்வொரு துறையிலும் செயலாற்றுகின்ற அனைவரின் நிலையும் இதுதான். அவர்களுள் மிகுந்த கவனத்தோடும் தன்முனைப்போடும் செயல்படுவோர் வெற்றியடைகின்றனர்; எடுத்துக்கொண்ட செயலில் முழுமையான கவனம் செலுத்தாதோர் தோல்வியடைகின்றனர்; அல்லது பின்தங்கியே இருக்கின்றனர்.

 

எனவே நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியடைய வேண்டுமெனில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதோடு தன்முனைப்போடும் செயல்பட வேண்டும். அது தொழுகையானாலும் தொழிலானாலும் சரியே! தொழுகின்ற நேரத்தில் அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; தொழில்  செய்கின்றபோது அதில் மட்டும் முனைப்போடு ஈடுபட வேண்டும். அதுதான் நமக்கு வெற்றியைத் தரும். அவ்வாறு ஈடுபட்டால்தான் முழுமையான நன்மையையும் இலாபத்தையும் பெற முடியும்.

=====================