திங்கள், 6 ஏப்ரல், 2026

புதிய வெளியீடு

 

---------------------------

 

நூலின் பெயர்: திருக்குர்ஆன் வார்த்தைகளின் தொகுப்பு

 

ஆசிரியர்: டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துர் ரஹீம்

 

தமிழ் மொழிபெயர்ப்பு: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D

 

ஆண்டு: 2025

 

பக்கங்கள்: 92

 

விலை: ₹130

 

வெளியீடு: நாணல் 82, மூர் தெரு, சென்னை – 600001

தொடர்புக்கு: 87546 24916

----------------------------------------------------------------------------------------------------------

 

தமிழாக்கம் தந்தோனுரை

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.

 

 

அருங்கருத்துகளை ஆழமாகப் பொதிந்துள்ள அருள்மறையை அவனியோர்க்கு அருளிய அன்பாளன் அல்லாஹ் ஒருவனையே அனைத்துப் புகழும் அடையட்டும். வையத்தோர்க்கு வழிகாட்டியாய் வந்து சீரான வழிகாட்டிய அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார், உற்ற தோழர்கள்மீதும் அல்லாஹ்வின் அன்பும் கருணையும் நிறைவாகப் பொழியட்டும்.

 

 

“அல்லாஹ்வின் வேதத்தில் குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதியவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மைக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நன்மை என்ற அடிப்படையில் அவருக்கு உண்டு” (திர்மிதீ 2009) என்று கூறித் திருக்குர்ஆன் ஓதலை ஊக்கப்படுத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அதனைச் சிரமேற்தாங்கி முஸ்லிம்கள் பலர் திருக்குர்ஆனைத் தொடர்படியாக ஓதிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

 

மனிதர்களின் அறிவுரைக்காகவே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிமையாக்கி இருக்கின்றோம். எனவே, அறிவுரை பெறுவோர் எவரேனும் உண்டா (54:17) என்று உயர்ந்தோன் அல்லாஹ் வினாத் தொடுக்கின்றான். பொருள்புரியாமல் வெறுமனே ஓதினாலும் ஓரெழுத்துக்குப் பத்து நன்மை கிடைத்துவிடும் என்றாலும் அத்தோடு மட்டும் நாம் நிறுத்திக்கொள்ளக் கூடாது. மக்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்ற அடிப்படையில் உருவானதுதான் இக்குறு நூல். இதனை டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துர் ரஹீம் ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளார்.

 

 

இந்த நூலை முதன்முதலாகப் படித்த சகோதரர் துரை அப்பாஸ் என்பவர் இதனைத் தமிழ்கூறு நல்லுலகிற்குக் கொடையாகத் தர வேண்டும் என்று தீரா வேட்கை கொண்டார். அதற்காகத் தொடர்ந்து முயன்றார். அதனைக் குவைத்தில் இயங்கி வருகின்ற ஃபெடரேஷன் ஆஃப் இஸ்லாமிக் தாவா அஸோசியேஷன் எனும் தமிழர் அழைப்புப் பணிச் சங்கத்தில் கூறினார். அச்சங்கம் இதனை வெளியிட முன்வந்தது. இதை உரிய முறையில் தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை அணுகினார்கள்.

 

 

 

அப்போது நான் ஏற்கெனவே சில நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஈடுபட்டிருந்ததால், "என்னால் இப்போது இயலாது" என்று கூற “இது சின்னஞ்சிறு நூல்தான்; தாங்களே செய்து கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள். சரி, திருக்குர்ஆனுக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டுமே என்றெண்ணி தமிழாக்கம் செய்ய இசைந்தேன். இதோ அல்லாஹ்வின் பெருங்கருணையால் தற்போது ஓர் அழகிய நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது.

 

 

இந்நூலைப் படிக்கின்ற நீங்கள் திருக்குர்ஆனின் பெரும்பாலான பகுதியை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். மூலமொழி அரபியில் இதன் பொருள் என்னவென்பதைப் படித்து அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இது ஒரு பயனுள்ள நூலாகும். தற்கால இளைஞர்களும் இளைஞிகளும் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

 

 

 

இச்சிறிய நூலை நீங்கள் படிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உயர்ந்தோன் அல்லாஹ் நம் முயற்சிகளுக்குரிய நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் நிறைவாக வழங்குவானாக. இந்நூலை எழுதிய மூலநூலாசிரியருக்கும் இதனை மனமுவந்து வெளியிட்டோருக்கும் அல்லாஹ் நன்மைகளை வழங்குவானாக. ஃபெடரேஷன் ஆஃப் இஸ்லாமிக் அஸோசியேஷன் இன்னும் பற்பல பயனுள்ள நூல்களை வெளியிட அல்லாஹ் அருள்புரிவானாக.

 

அன்புடன்

 

மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி

 

குறிப்பு: இந்நூல் மகளிர் அரபுக்கல்லூரி (முஅல்லிமா, முபல்லிஃகா, ஸாலிஹா) மாணவியர்க்குப் பாடத்திட்டத்தில் வைக்கத் தகுதியானது.