-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம்
சென்னை-28
மனிதர்கள்மீது நாம் மதிப்பு
வைத்திருப்பதால்தான் நாம் அவர்களை மதிக்கிறோம்; உயர்வாக
எண்ணுகிறோம். அதுபோலவே நாம் பயன்படுத்துகிற பொருள்களின் மதிப்பை
உணர்ந்துள்ளதால்தான் அவற்றை நாம் கவனமாகப் பாதுகாக்கிறோம். நாம் ஏற்கெனவே மதித்து
மரியாதை செலுத்திவந்த யாரேனும் ஒரு மனிதர்மீதான மதிப்பும் உயர்வும் நம்
மனத்திலிருந்து அகன்றுவிட்டால், அல்லது பிறரால் அகற்றப்பட்டுவிட்டால் அவரை நாம்
மதிக்கமாட்டோம்; அவரை
உயர்வாகக் கருதமாட்டோம். அத்தகைய வேலையைத்தான் பலர் செய்துகொண்டிருக்கின்றார்கள்; ஊடகங்களும்
அந்த வேலையைத்தான் தொடர்ந்து செய்துவருகின்றன.
தாய்-தந்தை இருவரும்
மரியாதைக்குரியவர்கள்; மதிப்புக்குரியவர்கள்
என்ற புரிதல்தான் நம்மை அவர்களுக்கு மரியாதை செலுத்தத் தூண்டுகிறது. அந்த
மதிப்பும் உயர்வும் நம் மனங்களில் இருக்கின்ற வரை நாம் அவர்களுக்கு மரியாதை
செலுத்தத் தவறமாட்டோம். அவர்களின் பேச்சுக்கு மாறு செய்யமாட்டோம். எப்போது
அவர்கள்மீதான மதிப்பும் உயர்வும் நம் மனத்தை விட்டு அகன்றுவிடுமோ அப்போது அவர்களுக்கு
நாம் மரியாதை செலுத்த மாட்டோம் என்பது மட்டுமல்ல அவர்களை உரிய முறையில்
கவனித்துக்கொள்ளவும் மாட்டோம்.
அத்தகைய வேலையைத்தான்
இன்றைய காட்சி ஊடகங்கள் செய்துவருகின்றன. தாய்-தந்தையை அவமரியாதையாக நடத்துதல், கேலி
கிண்டல் செய்தல், அவர்களுடைய
பேச்சைக் கேட்டு நடக்காமல் எதிர்வாதம் செய்தல் முதலான காட்சிகள் அடிக்கடி
தொலைக்காட்சியில் திரையிடப்படுகின்றன. அவற்றைப் பார்க்கின்ற இன்றைய இளம் வயதினர்
அக்காட்சிகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு செயல்படுவதை நாம் கண்கூடாகக்
காண்கிறோம்.
அந்தக் காட்சிகளை
உள்வாங்கிக்கொண்டு அப்படியே செயல்படக்கூடியவர்கள், “தாயின்
காலடியில் சொர்க்கம் உள்ளது” என்ற நபிமொழியையோ, “தந்தை
சொர்க்கத்தின் நடுக்கதவு” என்ற நபிமொழியையோ நினைவில் வைத்துக்கொள்வதில்லை.
அந்த நினைவு உள்ளோர் மட்டுமே தாய்-தந்தையின் உயர்வையும் மதிப்பையும் உணர்ந்து
செயல்படுகின்றார்கள். மாறாக காட்சி ஊடகங்களின் கருத்து வலைக்குள் சிக்குண்டவர்கள்
பெற்றோரின் மேன்மையையும் சிறப்பையும் அறியாதிருக்கின்றார்கள்.
பெற்றோர்
மதிப்புமிக்கவர்கள் என்பதால்தான் அவர்களுக்காகப் பிள்ளைகள் பிரார்த்தனை செய்யுமாறு
அல்லாஹ் பணிக்கின்றான்: “இறைவா! நான் சிறுபிள்ளையாக இருந்தபோது அன்புகாட்டி என்னை
வளர்த்ததைப் போல நீ அவ்விருவர்மீது அன்புகாட்டுவாயாக.” (17: 23) ஆகவே
பிள்ளைகள் ஒவ்வொருவரும் தம் பெற்றோரை மதிப்பதும் அவர்களுக்காக அல்லாஹ்விடம்
பிரார்த்தனை செய்வதும் கட்டாயமாகும்.
ஒருவர்மீது நாம் வைத்துள்ள
மதிப்புதான் நாம் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான காரணமாகும். அந்த மதிப்பை நம்
உள்ளத்திலிருந்து உருவி எடுத்துவிட்டால் அவரைக் கேவலமாகக் கருதக்கூடிய மனநிலைக்கு
நாம் வந்துவிடுவோம். எனவே நாம் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டுமெனில் அவர் குறித்த
நன்மதிப்பு நம் உள்ளத்தில் எப்போதும் ஆழமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள
வேண்டும்.
அதே மதிப்புதான் நம்
உறவினர்கள் குறித்தும் நம் மனத்தில் நிலைத்திருக்க வேண்டும். நம்முடைய மாமா, மாமி, அத்தை, பெரியம்மா, சின்னம்மா, சித்தி, பெரியத்தா, சின்னத்தா, மச்சான், மச்சி, மைத்துனன், மைத்துனி
முதலான உறவினர்கள்மீது உயர்வும் மதிப்பும் இருப்பதால்தான் நாம் அவர்களுக்கு
மரியாதை செலுத்தி அவர்களை வரவேற்று உபசரிக்கவும் செய்கிறோம். அந்த மதிப்பை நம்
உள்ளத்திலிருந்து அகற்றிவிட்டால் உறவினர்கள் யாரையும் நாம் மதிக்க மாட்டோம்; யாருக்கும்
மரியாதை செலுத்தமாட்டோம். இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் எல்லாம்
செயற்கைத்தனமாகவே மாறிவிட்டது. மதிக்க வேண்டியோர் மதிக்க வேண்டியோரை
உளப்பூர்வமாக மதிப்பதில்லை; கொடுப்போர்
மனமுவந்து கொடுப்பதில்லை.
ஆசிரியர் மீதான அச்ச
உணர்வும் மதிப்பும்தான் நம்மை அவர்களுக்கு மரியாதை செலுத்தத் தூண்டுகின்றன.
மாணவ-மாணவியரின் உள்ளத்திலிருந்து அதை அகற்றிவிட்டால், ஆசிரியர்களும்
மற்ற மனிதர்களைப்போலத்தான். அதாவது
அவர்களை அம்மாணவர்கள் மதிக்க மாட்டார்கள்; மரியாதை
செலுத்தமாட்டார்கள். அதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தாம். ஆம்! ஒருவர்மீது
மரியாதை இருக்கின்ற வரைதான் அவர் சொல்வதைக் கேட்கத் தோன்றும். ஆசிரியர் மீதான மரியாதை அகன்றுவிட்டால் அவர்
சொல்வதைக் கேட்கத் தோன்றாது; அவர் நடத்தும் பாடங்களைக் கூர்ந்து கவனிக்கத் தோன்றாது.
அதனால் அவர்கள் கல்வியில் வீழ்ச்சியடையத் தொடங்கிவிடுவார்கள்.
ஆசிரியர் மீதான மதிப்பு நம்
உள்ளத்தில் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர் தம்
பிள்ளைகளுக்கு ஆசிரியர்களின் உயர்வையும் மதிப்பையும் குறித்துச் சொல்லிக்கொண்டே
இருக்க வேண்டும். ஆனால் இன்றைய காட்சி ஊடகங்கள் பள்ளிக்கூட ஆசிரியர்களையும்
கல்லூரிப் பேராசிரியர்களையும் மாணவர்கள் கேலி
செய்வதைப் போன்ற காட்சிகளை அடிக்கடி காட்டுகின்றன. அதனால் அந்தக்
காட்சிகள் மாணவ, மாணவியரின்
உள்ளத்தில் பதிந்துபோய்விடுகின்றன. எனவே அவர்கள் மீதான மரியாதை குறைந்துவிடுவதைக்
காண்கிறோம். இத்தகைய தருணத்தில் ஆசிரியர்களின் மீதான மதிப்பை ஏற்படுத்த வேண்டியது
பெற்றோரின் கடமையாகும். இல்லையேல் தம் பிள்ளைகள் கல்வியில் வீழ்ச்சியடைவார்கள்
என்பதை அவர்கள் தம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு முதலாளி மீதுள்ள
உயர்மதிப்புதான் ஒரு தொழிலாளியை உழைக்கத் தூண்டுகிறது; அவரின்
முன்னேற்றத்திற்காகப் பாடுபடக் காரணமாக அமைகிறது. அவர்மீதான உயர்மதிப்பு
அகன்றுவிட்டால், அவருக்குத்
தொழிலாளி மரியாதை செலுத்த மாட்டான். அவருடைய முன்னேற்றத்திற்காக அவன் உழைக்க
மாட்டான். அவர் எப்படிப்போனால் நமக்கென்ன என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும்.
முதலாளி-தொழிலாளி இடையே உள்ள அன்பும் மரியாதையும் குறைந்துவிடும்; அல்லது அறவே இல்லாது போய்விடும்.
கணவர் மீதான
உயர்மதிப்புதான் ஒரு மனைவியைத் தன் கணவருக்கு மரியாதை செலுத்தத் தூண்டுகிறது. அந்த உயர்மதிப்பின் காரணமாகவே அவள் தன்
கணவருக்காக அல்லும் பகலும் பணிவிடை செய்கிறாள்;
அவருடைய துணிகளைத் துவைத்து, மடித்து
வைக்கிறாள். சுவையான உணவு சமைத்துக் கொடுக்கிறாள். இன்னும் ஏராளமான பணிகளைச்
செய்கிறாள். அவர்மீதான அந்த உயர்மதிப்பும் அன்பும் மனைவியின் உள்ளத்திலிருந்து
அகன்றுவிட்டால் இவ்வாறெல்லாம் செய்வாளா?
இல்வாழ்வின் இன்பத்தையும்
குடும்ப உறவையும் உடைப்பதற்காகவே செயல்பட்டு வருகிற ஊடகங்கள், ‘குடும்ப வாழ்க்கையே சலிப்பைத் தரக்கூடியது’ என்ற மாயத்
தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதன் காட்சிகளால் ஈர்க்கப்பட்டுள்ள பெண்கள், திருமணமாகி ஆறு மாதங்களில் மணவிலக்கு கேட்டு நிற்கின்றார்கள்.
“ஆண்களை(ப் பெண்களைவிட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன்
(ஆண்கள்) தங்கள் பொருள்களை(ப் பெண்களுக்கு)ச் செலவு செய்வதாலும் ஆண்கள்தாம்
பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்” (4: 34) என்று
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். மேலும் “ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி
உயர்வு இருக்கிறது” (2:
228) என்றும் அவன் கூறுகின்றான். இந்த இறைவசனங்களை உணர்ந்த பெண்கள் தம்
கணவருக்குக் கட்டுப்பட்டு, அவருக்கு மரியாதை செலுத்தி, தம்
குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்கள். இந்த இறைவசனங்களைப்
படிக்காதோர் அல்லது படித்தும் செயல்படுத்தாதோர் தம் கணவரோடு சண்டை
போட்டுக்கொண்டு, குடும்ப
வாழ்க்கையை முறித்துக்கொண்டு தன்னந்தனியாக வாழ்கின்றார்கள். ஆக கணவர்மீது
உயர்மதிப்பு இருக்கின்ற வரைதான் குடும்ப வாழ்க்கை சீராக நகரும். இல்லையேல் அது
குலைந்துவிடும் என்பதை இன்றைய பெண்கள் நேரடியாக உணரலாம்.
ஒரு பெண்ணைச் சந்தித்த நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உனக்குக் கணவர் இருக்கின்றாரா” என்று வினவ, “ஆம்”
என்று அப்பெண் கூறுகிறாள். அப்படியெனில், “நீ அவரிடம் எப்படி நடந்துகொள்கிறாய்” என்று கேட்க, “என்னால்
இயலாததைத் தவிர வேறெதையும் நான் அவருக்கு மிச்சம் வைப்பதில்லை” என்று கூறுகிறாள்.
“நீ அவரிடம் எந்த இடத்தில் இருக்கிறாய் என்பதைக் கவனித்துக்கொள். ஏனென்றால்
அவர்தாம் உன்னுடைய சொர்க்கமும் நரகமும் ஆவார்” என்று கூறுகிறார்கள். (முஸ்னது
அஹ்மத்: 19003) தன்னுடைய
கணவர்தாம் தன்னுடைய சொர்க்கம் என்று எண்ணுகின்ற பெண் தன் கணவரிடம் நல்ல முறையில்
நடந்துகொள்கிறாள். மற்ற பெண்கள்தாம் தம் கணவரிடம்
சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே தம் கணவர் பற்றிய உயர்மதிப்பை
உணராதவர்கள்.
ஒவ்வொன்றின்மீதும் உள்ள
உயர்மதிப்புதான் நாம் அவற்றை மதிக்கக் காரணமாக அமைகிறது. அந்த வகையில் நாம்
திருக்குர்ஆனை மதிக்கிறோம். அதை அல்லாஹ்வின் உயர்வேத நூலாக மக்கள் கருதுகிறார்கள்; எனவே
அதை அவர்கள் மதித்துப்போற்றுகின்றார்கள்; நாள்தோறும்
அதை ஓதிவருகின்றார்கள்; அதைக் கண்ணியத்துடன் பார்க்கின்றார்கள். அதைத் தொடவேண்டுமென்றால்
அங்கத்தூய்மை (உளூ) செய்துவிட்டுத் தொடுகின்றார்கள்.
அந்த மதிப்பையும்
மரியாதையையும் குலைக்கும்வண்ணம், “அது பிற நூல்களைப் போன்ற ஒரு நூல்தான்” என்று
குறுமதியாளர்கள் சிலர் கூறுவதால், அந்தக் கருத்தை உள்வாங்கிக்கொண்ட இளைஞர்கள் சிலர் அதைத்
தூய்மையின்றித் தொடுவதும் மரியாதையின்றித் தொடுவதும் நிகழ்கிறது. “அதைத்
தூய்மையானவர்கள் அன்றித் தொடமாட்டார்கள்” (56: 79) என்ற
இறைவசனம் அதை உயர்த்தி நிற்கச் செய்துள்ளது. அந்த உயர்மதிப்பைக் குறைக்கும்
நோக்கில், அந்த
இறைவசனம் ‘வானிலுள்ள லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும் மூலப் புத்தகத்தைக் குறிக்கிறது; இந்தக்
குர்ஆனை அது குறிக்கவில்லை’ என்கின்றார்கள்.
அல்லாஹ்வின் அடையாளச்
சின்னங்களை மதிப்பது இறையச்சத்தின் ஒரு பகுதி என்று திருக்குர்ஆன் (22: 32) கூறுகிறது.
திருக்குர்ஆன், கஅபா, ஹஜ்ருல்
அஸ்வத், ஸஃபா-மர்வா, குர்பானி
ஒட்டகம் உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாகும். எனவே அவற்றை
மதிப்பது நம் கடமையாகும்.
மூத்தோரை மதிப்பதும்
இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிற பாடமாகும். பெற்றோருக்கு வயதானதும் அவர்களை
ஒருபுறமாக ஒதுக்கிவைத்துவிடுகின்றார்கள். சாலையில், வீதியில், மஹல்லாவில்
பார்க்கின்ற எத்தனையோ முதியோரை நம்முள் பலர் மதிப்பதில்லை. அவர்கள் பேசினால்
அவர்களுடைய பேச்சை, ஆலோசனையை, கருத்துகளைக்
கேட்பதில்லை; அல்லது
ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே முதியோர் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறியுள்ள செய்தியை நம் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்: “ஓர்
இளைஞர் ஒரு முதியவரை அவரது வயதுக்காகக் கண்ணியப்படுத்தினால், அந்த
இளைஞரின் முதுமையில் அவரைக் கண்ணியப்படுத்துகின்ற ஒருவரை அல்லாஹ் ஏற்படுத்தாமல்
இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
(திர்மிதீ: 1945/
2022) இதில் அந்த இளைஞருக்கு மரியாதை கிடைப்பது ஒருபுறம் இருப்பதோடு
அவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதும் இதனுள் மறைந்துள்ளது.
ஆகவே அல்லாஹ்வின் அடையாளச்
சின்னங்களை மதிப்பதோடு ஒவ்வொரு மனிதரையும் மதித்துப் போற்றுகின்ற பண்பை அல்லாஹ்
நம் அனைவருக்கும் தருவானாக.
====================================