திங்கள், 11 பிப்ரவரி, 2019

பாக்கியாத் வகுப்பறையில் ஒரு நாள்!

 
அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் இறுதியாண்டு புகாரீ வகுப்பறையில் ஒரு நாள் நடந்த நிகழ்விது. 

ஆசிரியர் மர்ஹூம்  மௌலானா ஹெச். கமாலுத்தீன் பாகவி அவர்கள், ஹதீஸ் பாடம் நடத்துகின்றபோது மாணவர்களின் புரிதலுக்காக, உலக நடைமுறை விஷயங்களையும் உதாரணமாகக் கூறுவது வழக்கம். அதுபோன்று ஒரு நாள், “ஒருவர் மரணித்தபின் மூன்று அவனைப் பின்தொடர்கின்றன. இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டும் அவனோடு இருந்துவிடுகிறது. அவனது சொத்து, குடும்பம், நல்லறங்கள்.....:: எனும் நபிமொழியை நடத்தினார்கள். 


அப்போது திடீரென அவர்களது சிந்தனையில் ஒரு கவிஞனின் கவிதை அரைகுறையாக நினைவில் வர, மாணவர்கள் நான்கைந்து பேர் ஒரேநேரத்தில் அக்கவிதையைப் பாடினார்கள். 

ஏய், ஏய், நிறுத்து, நிறுத்து. ஒருத்தன் பாடு என்று கூற, நான்தான் அக்கவிதை வரிகளைப் பாடினேன்.  


வீடு வரை உறவு

வீதி வரை மனைவி 

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?


இக்கவிதை வரிகளைக் கேட்டபின், அக்கவிஞனுக்கு மட்டும் இந்த ஹதீஸ் தெரிந்திருந்தால் இப்படிப் பாடியிருக்க மாட்டான். கடைசி வரை வரப்போவது அவனுடைய நல் அமல்கள்தானே? என்றார்கள். 


நான் மூன்றாம் ஆண்டு பாக்கியாத்தில் ஓதிக்கொண்டிருந்தபோது அந்நஃபாயிஸுல் இர்தளிய்யா எனும் நூலை மர்ஹூம் மௌலானா முஹம்மது இல்யாஸ் பாகவி அவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். இலக்கண, இலக்கிய விதிகளைத் தம்மால் இயன்ற வரை மாணவர்களுக்குப் புரிய வைப்பதில் மிகுந்த அக்கறை  எடுத்துக்கொள்வார்கள். 

 தஷ்பீஹ் (உவமானம், உவமேயம்) குறித்த பாடத்தில் இஸ்த்திஆரா தஃக்யீலிய்யா (கற்பனையை இரவல் வாங்குதல்) என்று ஒரு வகை உண்டு. 

அதாவது இதில் தனித்தனிப் பொருள்களைக் காண முடியும். அவை ஒன்றிணைந்த ஓர் உருவத்தைக் காணமுடியாது. 

"எத்தனையோ தாயத்துகள் போட்டும் எதுவும் பயனளிக்கவில்லை. (எல்லாவற்றையும் தாண்டி) மரணம் தன் கோரநகத்தைப் பதித்துவிட்டது" எனும் கவிஞரின் கற்பனை வரிகளைச் சான்றாகக் காட்டியிருப்பார் நூலாசிரியர். 

1. மரணித்தவரைக் காணலாம். 2. வனவிலங்கின் கோர நகத்தையும் காணலாம். ஆனால் மரணத்தையே ஒரு வனவிலங்காகக் கற்பனை செய்துள்ளார் கவிஞர். அதைக் காணமுடியாது. 

இதை முதல் நாள் நடத்திவிட்டு, மறுநாள் வகுப்பறைக்கு வந்து, நேற்று நடத்திய பாடம் புரிந்ததா? என்று கேட்டுவிட்டு, மறுபடியும் அதை விளக்கிக்கூறத் தொடங்கினார்கள். 

அப்போது அவர்கள் செல்லும் வழியில் எங்கிருந்தோ காதில் விழுந்த கவிதை வரி ஒன்றை மேற்கோள் காட்டி அப்பாடத்தை விளக்கிக் கூறினார்கள். அக்கவிதை வரி இதுதான். 

ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்... இதில் ரெக்கையைப் பார்க்கலாம். சைக்கிளையும் பார்க்கலாம். ஆனால் ரெக்கை முளைத்த சைக்கிளைப் பார்க்க முடியாது. இதுதான் இஸ்த்திஆரா தஃக்யீலிய்யா என்று கூறி விளக்கினார்கள். 

ஆக, பாக்கியாத்தின் ஆசிரியப் பெருந்தகைகள் மாணவர்களுக்குப் பாடத்தைப் புரிய வைக்க மேற்கொண்ட முயற்சிகளும் அக்கறைகளும் இன்றும் என் மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளதை நான் தங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 

நம்மைவிட்டுப் பிரிந்துவிட்ட ஆசான்களுக்காக நாம் யாவரும் துஆ செய்வோம். 

-அன்புடன் 

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

மணலி, சென்னை-68

கருத்துகள் இல்லை: