சனி, 31 ஜனவரி, 2015

வட்டியில்லா இஸ்லாமிய வங்கி




அணிந்துரை
 
                -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்., (பிஎச்.டி.)
(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)
-----------------------------------------------------------------------------------------
                ஹாஜி நூ. முஹம்மது கனி அவர்கள் வட்டியில்லா இஸ்லாமிய வங்கிஎனும் நூலை என்னிடம் கொடுத்து, இந்நூலைப் பிழைதிருத்தம் செய்து, தமிழ்நடையைச் செம்மைப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று, நான் இந்நூலைப் புரட்டிய போது இந்நூலாசிரியரின் புலமை எனக்குப் புலப்பட்டது. இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகளைப் பற்றித் தெளிவாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும் பல்வேறு நூல்களிலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறார். இந்நூல் இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகள் குறித்துத் தெளிவாக விளக்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 
                ஹாஜி நூ. முஹம்மது கனி அவர்கள் எம். காம். பட்டதாரியாக இருப்பதால் பொருளாதாரப் பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவராகத் திகழ்கிறார். இவர் ஏற்கெனவே பல ஆங்கில நூல்களையும்  டாக்டர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகள், விவாதங்கள் ஆகியவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவ்வப்போது வெள்ளிக்கிழமைகளில் உரையாற்றுவதும் சமுதாயப் பணிகளில் ஈடுபடுவதும் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் இவருக்குப் பிடித்தமானவை. காசு, பணம் என்ற எந்த எதிர்பார்ப்புமின்றி இவற்றை இவர் செய்துவருவதால் அல்லாஹ்வே இவருக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி கொடுக்கப் போதுமானவன். 
 
                இன்று வட்டியின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிப்போர் பலர். தம் அவசர உதவிக்காக என்று கூறி, அறவே சிந்திக்காமல் அவசரமாக வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி, வட்டிக்கு வட்டி கட்டி நொந்து போவோர் பலர் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தெரியாமல் வாங்கிவிட்டு, இப்போது வட்டி கட்ட முடியாமல் சிரமப்படுகிறேன். இதி-ருந்து சீக்கிரம் மீள வேண்டுமே என்று மனதுக்குள் சஞ்சலத்தோடு வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அல்லாஹ் கூறியுள்ள அழகிய கடன் என்பதை அறவே மறந்துவிட்டார்கள் செல்வந்தர்கள். அதனால்தான் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றார்கள்.
 
                மற்றொரு புறத்தில், நாங்களெல்லாம் வட்டியிலிருந்து தப்பித்துக்கொண்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுபவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே வட்டி எனும் தீமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். உண்மையில், அதுவெல்லாம் வட்டிதான் என்று அவர்களுக்குத் தெரியாது. தம்மையும் அறியாமல் வட்டி எனும் தீமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். இன்னும் சிலர், வட்டிக்கு வேறு பெயர்களை இட்டுக்கொண்டு அதை முழு மனதோடு அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய நிலைகளில் வாழ்வோர் மார்க்கச் சட்டப்படி எது வட்டி, எது வட்டியில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
 
                முஸ்லிம்கள் அனைவரையும் வட்டி எனும் தீமைக்குள் கொண்டுவர யூதச் சமுதாயம் சூழ்ச்சி செய்தது; செய்துகொண்டிருக்கிறது. அதன் விளைவாக, நம்முள் பலர் தம்மை அறியாமலே அதனுள் நுழைந்துவிட்டார்கள். அது வட்டி என்று தெரியாமல் அதை வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அல்லது கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் காலத்திற்கேற்ற மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  வட்டி சார்ந்த சில நடைமுறைச் செயல்பாடுகளைச் செல்லத்தக்கனவாக அறிவித்துள்ளனர். அது சமுதாய மக்களுக்குச் சாதகமாகப் போய்விட்டதால் உறுத்தல்இல்லாமல் உளப்பூர்வமாக அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
 
 
                வங்கி என்பதே ஒரு வட்டி நிறுவனம்தான். அங்கு முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுப்பதும் கடன் பெற்றோரிடமிருந்து வட்டி வாங்குவதும்தான் அதன் முக்கியத்தொழில். எனினும் காலத்தின் கட்டாயத்தையும் அரசாங்க நிர்ப்பந்தத்தையும் கருதியே வங்கிக் கணக்கைத் தொடங்குகிறோம். அதாவது ஒருவருக்கு வங்கிக்கணக்கு இருந்தால்தான் வரைவோலை, காசோலை உள்ளிட்டவற்றை மாற்றுவது எளிதாகும். அது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நாம் பிறருக்குக் கொடுத்தால், அதைப் பணமாகக் கொடுக்கக்கூடாது. காசோலையாகவோ, வரைவோலையாகவோதான் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இது போன்ற காரணங்களுக்காக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்வது கூடும். எனினும் அது இஸ்லாமிய வங்கியாக இருந்துவிட்டால் தடைசெய்யப்பட்ட வட்டி எனும் பாவத்திலிருந்து நாம் முற்றிலும் விலகிக்கொள்ள முடியும்.
 
                இஸ்லாமிய வங்கி முறை எப்படி இயங்குகிறது என்றால் பொதுமக்கள் முதலீடு செய்கின்ற பணம் அனைத்தும் கூட்டாண்மை வணிகம் என்ற அடிப்படையில் பெறப்பட்டு, வங்கி ஈடுபடுகின்ற வியாபாரத்தில் கிடைக்கின்ற இலாபத்தொகை பொதுமக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படுகிறது. எனவே இது வட்டியாகாமல் இலாபத்தில் கிடைக்கின்ற பங்காகக் கருதப்படுகிறது. இந்தப் பங்கின் அளவு குறிப்பிட்ட அளவாக இருக்காது. வங்கிக்கு இலாபம் எவ்வளவு கிடைக்கிறதோ அதைப் பொறுத்து முதலீட்டாளர்களுடைய பங்கின் அளவு கூடலாம், குறையலாம் என்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஆக இஸ்லாமிய வங்கி முறை நம்மை வட்டியிலிருந்து காப்பதோடு பயனையும் நல்குகிறது. எனவே இஸ்லாமிய வங்கி முறையை நாம் ஊக்குவிக்கப் பாடுபடுவோம். இதை நாம் பிறருக்கு அறிமுகப்படுத்துவோம்.
 
                இந்நூலாசிரியருக்கும் இதைப் படிப்போருக்கும் இந்நூலைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவோருக்கும் ஏக இறைவன் அல்லாஹ் எல்லா நலன்களையும் இம்மையிலும் மறுமையிலும் குறைவின்றித் தருவானாக. ஆமீன்.
                                                                                                                அன்புடன்
                                                                                                                நூ. அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி)
                                                                                                                சென்னை 81
 
இந்நூலைப் பெறத் தொடர்புகொள்க: சாஜிதா புக் சென்டர் 248 தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1 போன்: 044 2522 4821/ 98409 77758 விலை: ரூ. 40/-