வியாழன், 2 ஜூன், 2011

உழைப்பே உயர்வு


தர்மம் செய்தல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகிறது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டபோது, இறைத்தூதர்  அவர்களே! ஒருவர் (தர்மம் செய்வதற்கு எப்பொருளையும்) காணவில்லையாயின் (அவர் என்ன செய்வார்?) என வினவியதற்கு, அவர் தம் கைகளால் உழைத்து, தாமும் அதில் பலன் அடைந்து, தர்மமும் செய்யட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், அவரால் அதுவும் இயலவில்லை என்றால்? என வினவியதும், அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதரால் அதுவும் இயலவில்லை என்றால்? என நபித்தோழர்கள் வினவவே, அவர் தீமை செய்வதை விட்டுத் தவிர்ந்து  கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூசா அல்அஷ்அரீ (ரளி) அறிவிக்கிறார்கள்.- நூல்கள்:புகாரீ, முஸ்லிம்

இந்த நபிமொழியில் `தர்மம் செய்தல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்பதும் `அது இயலாவிட்டால் தம் கைகளால் உழைத்துப் பொருளீட்டித் தாமும் உண்டு, பிறருக்கும் தர்மம் வழங்க வேண்டும் என்பதும் உழைப்பின் அவசியத்தையும் அதன் உயர்வையுமே குறிக்கின்றன. உழைப்புதான் ஒருவரின் வாழ்க்கைக்கான முன்னேற்றத்தின் அடிப்படை. 

உழைப்பு இல்லையேல் எவ்வளவு பெரிய செல்வந்தனும் வறுமையையே சந்திப்பான். இன்றைக்கு வெளிப்படையாகப் பார்த்தால் அனைவரும் உழைப்பதைப்போன்றே தெரியும். ஆனால் சிலரைத் தவிர பலரும் உழைக்கவில்லை என்பதே உண்மை. உழைப்பு என்றால் அதில் நேர்மையும் நாணயமும் இருக்க வேண்டும். தான் உழைத்துப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் இருக்க வேண்டும். மாறாக, இன்றைக்கு உழைப்பவர்கள் குறுக்கு வழியில் எவ்வாறு பொருளீட்டலாம் என்றே யோசித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் தம் உழைப்பின் மூலம் ஒருபோதும் மனநிறைவு அடைய முடியாது. நம்முள் சிலர் உழைக்காம லேயே உண்ணலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆம், பார்க்கும் இடமெல்லாம் பிச்சைக்காரர்கள். இவர்கள் உழைக்காமல் உடல் வளர்ப்பவர்கள். அன்று பசிக்காகப் பிச்சையெடுத்தவர்கள் இன்று அதையே ஒரு தொழிலாக ஆக்கிக்கொண்டுவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களும் மனநிறைவடைய முடியாது.

வேறு சிலர் நம்முள் இருக்கின்றார்கள். பிறரின் உழைப்பைச் சுரண்டி உண்பவர்கள். ஏழைகளிடம் பகல் முழுக்க வேலை வாங்கிக்கொண்டு அவர்களுக்குரிய ஊதியத்தை முழுமையாகக் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள்; அல்லது அறவே கொடுக்காமல் அடிமைப்படுத்துவார்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவனின் கோபப்பார்வைக்குரியவர்கள் ஆவர். இதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உழைப்பாளியின் வியர்வை உலருமுன்னரே அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறிச்சென்றார்கள். 

உழைப்பாளியின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது, ஓர் உண்மையான, நம்பிக்கையான வியாபாரி நபிமார்களுடனும், வாய்மை யாளர்களுடனும், இறைப்பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களுடனும் இருப்பார் என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ-1209)

இந்த அளவுக்கு ஒரு வியாபாரிக்குச் சிறப்பளிக்கப்படுவதன் காரணம் என்ன? ஒருவர் வியாபாரம் செய்கின்றபோது அவர் கொடுக்கவும் வாங்கவும் செய்கிறார். அதில் அவர் உண்மையாளராக இருக்க வேண்டும்; பொய் சொல்லக்கூடாது; நியாயமான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும். அளக்கின்றபோதும் நிறுக்கின்றபோதும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். இத்தனை சோதனைகளையும் மீறித்தான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும். எனவேதான் வியாபாரிகளுக்கு அந்தச் சிறப்பு.

ஆக, உழைப்புதான் ஒரு மனிதனை சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் வாழ வைக்கிறது. அதுவே அவனை வாழ்வில் உயர்த்துகிறது. ஆனால் அது அல்லாஹ்வுக்குப் பிடித்தமான முறையிலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படியும் இருக்க வேண்டும். நாம் நன்றாக உழைத்து, நாமும் உண்டு, பிறருக்கும் கொடுத்து வாழப் பழகுவோம்! உழைப்பே உயர்வென முழங்குவோம்!


கருத்துகள் இல்லை: