புதன், 23 ஜூலை, 2025

மிகுந்த மரியாதை ஒருவரை வழிகெடுத்துவிடும்

  

---------------------------------------------

ஒருவருக்கு மக்கள் கொடுக்கின்ற மிகுந்த மரியாதை அவரை வழிகெடுக்கவும் வாய்ப்புண்டு. அதனால்தான்  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தாம் வரும்போது மக்கள் தமக்காக எழுந்து நிற்பதை விரும்பவில்லை. “அறியாமைக் கால மக்களைப் போல் எழுந்து நிற்காதீர்கள்” என்று தடை விதித்தார்கள். 


மக்களோடு மக்களாக வாழ வேண்டியவர்கள், தமக்கென ஒரு வேடத்தைப் பூண்டுகொண்டு மற்றவர்களைவிடத் தம்மை மேலானவர்களாக எண்ணிக்கொள்கின்றார்கள். அவரை 'ஷைக்’காக ஏற்றுக்கொள்பவர்களைத் தம் சீடர்களாகப் பாவித்து, தாம் சொல்வதையெல்லாம் கேட்டு, அவற்றை அப்படியே பின்பற்றி நடக்கும் அறிவிலிகளாகக் கருதிக்கொள்கின்றார்கள். 


சீடர்கள் தம்முடைய ‘ஷைக்’ வரும்போது அவருக்காக எழுந்து நிற்பதும் அவரது கைகளை முத்தமிடுவதும் அவருக்கு மிகுந்த பெருமையை ஏற்படுத்திவிடுகின்றது. காலப்போக்கில் அந்தக் கண்ணியத்தைச் சற்று அதிகப்படுத்திக்கொள்ள, தம்மைக் குறிப்பிட்ட அந்தத் தரீக்காவிற்குக் கலீஃபாவாக ஆக்கிக்கொள்கிறார். அது இன்னும் மரியாதையை அதிகப்படுத்துகிறது. 


காலப்போக்கில் மக்கள் தம் ‘ஷைக்’ கின் காலில் விழுந்து வணங்கவும் தொடங்கிவிடுகின்றார்கள்.  அதுதான் உச்சநிலை. அத்தகைய நிலையை அடைவதையே பெரும்பாலோர் விரும்புகின்றார்கள். 

இறுதியில் சிலர் தம்மை மஹ்தி என்றும் மஸீஹ் என்றும் இறுதி நபி என்றும் கூறிக்கொள்ள முனைகின்றார்கள்.  இதுதான் அவர்களின் வழிகேடு ஆகும். மிகுந்த மரியாதையை எதிர்பார்த்தல் அவர்களுடைய ஈமானையே தின்றுவிடக் காரணமாகிறது என்பதே நிதர்சன உண்மையாகும். 


எனவே நாம் ஒவ்வொருவரும் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்வோம். பள்ளிவாசலில் இமாமாக இருப்போரின் ஈமானும் அவரைப் பின்பற்றித் தொழுவோரின் ஈமானும் ஒன்றுதான் என்பதை உணர்ந்து செயல்படுவோம். 


அன்புடன்  

நூ. அப்துல் ஹாதி பாகவி 

23 07 2025

------------------------

கருத்துகள் இல்லை: