புதன், 23 டிசம்பர், 2020

இம்மைத் தோட்டத்தில் செம்மையாய்ப் பயிரிடு|


---------------------------
மறுமைத் தோட்டத்தில் 
நிம்மதியாய் வாழ
இம்மைத் தோட்டத்தில்-நீ 
செம்மையாய்ப் பயிரிடு!

உன்வீட்டுத் தோட்டத்தைப்
பண்படுத்தாமல் விட்டுவிட்டால்
ஏதேதோ முளைக்கும். 
செப்பனிட்டு விதைபோட்டால்-நீ
எண்ணியது முளைக்கும்-அது
திண்ணமாய்த் தழைக்கும். 

உன் உள்ளத்தைப் பண்படுத்தி
உயர்வான நற்குணங்களை
உடனடியாய் விதைக்காவிடில்
கேடுகெட்ட குணங்களெல்லாம்
கேட்காமலே குடிபுகுந்துவிடும்; உனைக்
கேவலப்படுத்திவிடும்.  

அதிகாலைத் துயிலெழுந்து
நீர்பாய்ச்சச் செல்வான் உழவன். 
மறுமைத் தோட்டத்தில் 
மகிழ்ச்சியாய் வாழ நினைப்பவன்
அதிகாலைத் துயில்முறித்து
அல்லாஹ்வை அஞ்சியே 
அனுதினமும் தொழுவான். 

விதை போட்ட தோட்டத்தில் 
நீரின்றிப் பயிர்கள் அழியும். 
மறுமைத் தோட்டத்தில் 
நல்லறங்கள் இல்லையென்றால் 
நரகத்தில் மனித உடல் அழியும்.

வளர்ந்துவிட்ட பயிர்களிடையே 
வீணாக வளர்ந்தவற்றைக்   
களையெடுப்பான் உழவன்.
தன்னில் புகுந்துவிட்ட
அல்லாத பழக்கங்களைக்
களைந்திடுவான் தொழுவோன். 

பல நாட்கள் பாடுபட்டு 
பயிரிட்டு வளர்த்ததை
மகிழ்வோடு
அறுவடை செய்வான் உழவன்.
அல்லாஹ்வின் அன்பைப் பெற
அல்லும் பகலும் தொழுது 
நல்லறங்கள் பல செய்தோன்
நல்சொர்க்கத்தையே பெறுவான்.

பசித்தோர்க்கு உணவளித்தல்
ஆடையற்றோர்க்கு ஆடையணிவித்தல்
ஈந்து ஈந்து மகிழ்தல்
ஏழைக்கு உதவுதல்
துன்பத்தில் சிக்குண்டோருக்கு 
உதவிக்கரம் நீட்டுதல்
உள்ளிட்ட பயிர்களை
இம்மைத் தோட்டத்தில் விதைத்தால்
மறுமைத் தோட்டத்தில்
மகிழ்ச்சியோடு வாழலாம்.

 
-நூ. அப்துல் ஹாதி பாகவி
சென்னை
23.12.2020 07 05 1442  
==========================================

கருத்துகள் இல்லை: