திங்கள், 22 ஏப்ரல், 2013

தமிழுக்காக...



                                               
என்னப்பா ஸமத், எப்டி இருக்கே? உன்னோட வேலையெல்லாம் எப்டி போய்க்கொண்டிருக்கு?

அல்லாஹ்வின் அருளால் நலமாக இருக்கேன் ஹைதர். வேலையெல்லாம் வேகமா போய்க்கொண்டிருக்கு. நான் இப்போ சுதந்திரமா வேலை செய்றேன். எந்தச் சிக்கலும் இல்லை. 

அப்படியா? சரி, நீ ஏற்கெனவே எங்கே வேலை செய்தாய்? அங்கிருந்து ஏன் வெளியேறினாய்?-ஹைதர் வினவினார்.

நான் ஏற்கெனவே ஒரு புத்தக நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பு, பிழை திருத்தம், தட்டச்சு ஆகிய பணிகளை நான் கவனித்து வந்தேன். அந்தப் புத்தகாலயத்தின் மேற்பார்வையாளரும் ஆலோசகருமான புகழேந்தி மற்றொரு நிறுவனத்தில் தமிழாக்கப் பணியாற்றுகின்றார். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எங்கள் புத்தகாலயத்தில் எந்த நூல் வெளிவந்தாலும் அவரின் ஆலோசனையின்றி வெளியிடப்படாது. ஒரு நூல் வெளியாவதற்கான ஆலோசனை, பிழை திருத்தம், மொழிபெயர்ப்பைச் சீரமைத்தல் போன்றவற்றை அவரே செய்துகொடுப்பார். அது மட்டுமின்றி, அந்த நூலை எங்கே, எப்படி வெளியிடலாம்; அதற்கு யார் யாரைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம்; அந்நூலுக்கு யார் யாரிடம் அணிந்துரை, வாழ்த்துரை வாங்கலாம் என்ற தீர்மானமும் அவரைச் சார்ந்ததே.

ஒரு நாள் புகழேந்தி ஐயாவின் மொழிபெயர்ப்பு நூல் எங்கள் நிறுவனத்திற்கு வந்தது. அந்நூல் ஏற்கெனவே அவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழாக்கம் செய்து  வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அவரின் நூலை மறுபதிப்புச் செய்வதென்றும் அதை எங்கள் ஆஷா பதிப்பகம்  வெளியிடுவதாகவும் முடிவு செய்யப்பட்டது. எனவே அதைத் தட்டச்சு செய்யும் பணி என்னிடம் வழங்கப்பட்டது. அதை நானே முழுமையாகத் தட்டச்சு செய்து கொடுத்தேன். நான் தட்டச்சு செய்யும்போதே பிழைகளைக் களைந்துவிடுவது வழக்கம். பிழைதிருத்தம் செய்வதற்கென தனியாக ஒரு நேரம் ஒதுக்குவதில்லை.

அதன்பின் அந்நூலின் தட்டச்சுப் பிரதி அவருக்கு வழங்கப்பட்டது. அதில் அவர் நீக்க வேண்டிய, மாற்ற வேண்டிய வார்த்தைகளை நீக்கியும் மாற்றியும் சீரமைத்துக் கொடுத்தார். அவற்றுள் ஓரிடத்தில் கைமாறுஎன்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. நான் அதைக் கைம்மாறு என்று மாற்றிச் சரியாகத்  தட்டச்சு செய்திருந்தேன். ஆனால் அவர் ம்எனும் மெய்யெழுத்தை நீக்கியிருந்தார். நான் அவ்விரண்டு வார்த்தைகளுக்கு உரிய பொருளையும் விளக்கத்தையும் தனியொரு தாளில் எழுதி அவருக்கு அனுப்பியிருந்தேன். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் அவ்வார்த்தையின் பொருளை உணர்ந்த நான், ‘பிரதி உபகாரம்எனும் பொருள் கொண்ட கைம்மாறுஎன்பதையே இறுதி செய்தேன். அது அவருக்குத் தெரியாது.

சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்- அலைபேசி ஒலித்தது. ஒரு நிமிடம் பொறுங்க ஹைதர் என்று சொல்லிவிட்டு, ஸமத் போனை எடுத்தார். சொல்லுங்க, யார் பேசுறீங்க?

நான் தஞ்சாவூரிலிருந்து யூசுஃப் பேசுறேங்க. ஐயா, பிரச்னை, பிரச்சனை, பிரச்சினை-என்று மூன்றுவிதமா எழுதுறாங்க. எது ஐயா சரி? என்று கேட்டார்.

சிக்கல்என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள். உங்க பிரச்னை தீர்ந்துடும் என்று கூறி அலைபேசியை கீழே வைத்துவிட்டுக் கதையைத் தொடர்ந்தார் ஸமத்.

ஒரு தடவை, நான் தமிழாக்கம் செய்திருந்த நூலுக்கு அவர் அணிந்துரை எழுதிக் கொடுத்திருந்தார். பொதுவாக எங்கள் பதிப்பகத்தில் வெளியிடப்படுகின்ற நூல்களுக்கு அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரை கொடுப்போர் முதுபெரும் தமிழறிஞர்களாக இருந்தபோதிலும் அவர்கள் அவற்றைக் கொடுக்கும்போது, ஐயா, தாங்கள் ஒரு தடவை பார்வையிட்டுத் திருத்திக்கொள்ளுங்கள். எனக்கு நேரம் இல்லை. சரியாகப் பார்க்கவில்லை- என்று கூறிவிடுவார்கள். இது அவர்களின் அக்கறையின்மையையும் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதையுமே காட்டுகிறது.

அதனால் நான் தட்டச்சு செய்யும்போது சந்திப்பிழை, ஒற்றுப் பிழை, இலக்கணப்பிழை போன்றவற்றைச் சீர்செய்துகொள்வேன். அதேபோன்று புகழேந்தி ஐயா வழங்கிய அணிந்துரையையும் சீர்செய்து தட்டச்சு செய்திருந்தேன். அதில் ஆதாரப்பூர்வமாகஎன்ற வார்த்தையும் ஒன்று.

நான் தட்டச்சு செய்ததை அவரிடம் படிக்கக் கொடுத்தபோது, ‘ஆதாரப்பூர்வமாகஎன்ற வார்த்தையைக் கண்ணுற்ற மறுகணம் அவருக்குச் சினம் தலைக்கேறியது. நான் எப்படிக் கொடுத்திருக்கிறேனோ அதை அப்படியே நீ தட்டச்சு செய்ய வேண்டியதுதானே? நீ ஏன் அதைத் திருத்தினாய்? நாங்க அறிஞர்களிடம் கேட்டுத்தான் செய்யிறோம் என்று கோபக்கணைகளை எறிந்தார்.

ஆதாரப்பூர்வமாகஎனும் சொல்லில் ப்வரவே கூடாது என்பது அவருடைய வாதம். அவ்வாறுதான் அவர் விளங்கிக்கொண்டுள்ளார். ஏன் என்பதற்கான காரணம் அவருக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கூடாதுஎனக் கூறும் அறிஞர்கள் உரைக்கும் காரணம், ‘ஆதாரம்என்பது வடசொல்லாம். எனவே அது மற்றொன்றோடு புணரும்போது ப்வராதாம். இருப்பினும் நான் கேட்ட தமிழறிஞர், அங்கு ப்தேவையில்லை. எனினும் இலக்கண விதிகளின்படி ப்இட்டாலும் தவறில்லை என்றே கூறினார். ஆனால் அவரோ அறவே கூடாது என்று விளங்கிக்கொண்டு என்மீது சினம் கொள்கிறார்.
தேவையில்லைஎன்று கூறிய அதே அறிஞரிடம், ஆதாரம்+பூர்வமாக எனும் சொற்கள் புணரும் போது தமிழ் இலக்கண விதிப்படி ஆதாரம்எனும் சொல்லின் ஈற்றிலுள்ள ம்மறையத்தானே செய்கிறது? அங்கு மட்டும் ஏன் விதி மாறவில்லை? ‘ஆதாரம்பூர்வமாகஎன்று சொல்ல வேண்டியதுதானே? என்று கேட்டேன். அதற்கு அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

ஆக, அந்த நிகழ்வு என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கிருந்தால் மற்றவர்களுக்காக நான் அறிந்த தமிழை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். எனவே இங்கிருந்து விலகிவிடுவதுதான் நல்லது என்று யோசித்தபோதுதான், என்னுடைய நண்பர் ஒருவர், இன்ன நிறுவனத்தில் நீ தமிழாக்கப்பணி செய்யலாம் என்று கூறினார். அதன்பிறகுதான் இப்போது இங்கே வந்து, என் விருப்பப்படி சுதந்திரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி முடித்தபோது, சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்-அலைபேசி ஒலித்தது.

ம்... சொல்லுங்க. யார் பேசுறீங்க?

நான் காரைக்குடியிலிருந்து அதீக் பேசுறேங்க. ஐயா, இந்த நூலில், உப்பு கரிக்கிறது என்று எழுதப்பட்டிருக்கு. அது நரகத்துல உள்ள உப்பா? என்று வினவினார்.

இல்லையில்லை. உப்பு கைக்கிறது என்றுதான் வர வேண்டும். கரித்தல் என்றால் எரித்தல் என்ற பொருளை உணராத சிலர் அப்படி எழுதிவிடுகின்றார்கள். அதை நீங்கள் திருத்திக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அலைபேசியை கீழே வைத்தார் ஸமத்.

தமிழுக்காகத் தம் பணியையே துறந்துவிட்டுச் சுதந்திரமாகப் பணியாற்றும் அவருக்கு வழிவிட்டு, ஹைதர் அவரிடமிருந்து விடைபெற்றார்.




இனிய திசைகள் ஏப்ரல் மாத இதழ்

வியாழன், 18 ஏப்ரல், 2013

வியாழன், 4 ஏப்ரல், 2013

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்


இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்

நான் ரஹ்மத் பதிப்பகத்தில் இருந்து, சுனன் இப்னுமாஜா-ஹதீஸ் நூலை முற்றிலுமாகத் தமிழாக்கம் செய்துவிட்டு என்னுடைய பணியை முடித்துக்கொண்டு விட்டேன். இனி நான் ரஹ்மத் பதிப்பக ஊழியன் இல்லை. நான் இனி சொந்தமாக, தமிழாக்கம், பிழை திருத்தம், தட்டச்சு போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன் என்பதைச் சுதந்திரமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி நான் ரஹ்மத் பதிப்பகம், ரஹ்மத் பப்ளிஷர்ஸ், ஆயிஷா பதிப்பகம், சாஜிதா பதிப்பகம், பஷாரத் பதிப்பகம் இனிய திசைகள் (மாத இதழ்) போன்ற எந்த நிறுவனத்திற்கும் சுதந்திரமாகப் பணிசெய்ய உயர்ந்தோன் அல்லாஹ் உயரிய வாய்ப்பை நல்கியுள்ளான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.