சனி, 18 ஆகஸ்ட், 2012

வலியை உணர்ந்தேன்! (சிறுகதை)




நான் ஒரு நிறுவனத்திலிருந்து இப்போதுதான் மற்றொரு நிறுவனத்திற்குச் சென்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். முந்தைய நிறுவனத்தைவிடப் பன்மடங்கு சிறந்தது. அளவான பணி. நிறைவான ஊதியம். மனதுக்குத் திருப்தி. தொடர்ந்து பணி செய்து கொண்டிருந்தபோது அன்றொரு நாள் என் ஆசிரியரைச் செல்பேசியில் அழைத்தேன். அவர், ஹலோ...ஹலோ... என்பதுபோல் பேசிவிட்டு, நன்றாகக் கேட்கவில்லை என்று கூறி, பேச மறுத்துவிட்டார். இது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.

அவருடன் பணியாற்றுகின்ற ஒருவரிடம் விவரம் கேட்டேன். அதற்கவர், உங்களைப் பணியில் சேர்த்துவிட்ட அவருடைய பேச்சைக் கேட்காமல் வேறு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்ததுதான் அவரின் வருத்தம். நீங்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்று கூறினார்.

அப்படியானால், குறைவான ஊதியம் கொடுத்தாலும் ஒரே நிறுவனத்தில்தான் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமா? நம் திறமைக்குரிய பணியையும் ஊதியத்தையும் வழங்குகின்ற நிறுவனம் நாடிச் செல்லவே கூடாதா?

அப்படியல்ல. எல்லா ஏற்பாடுகளும், ஊதிய உயர்வும் செய்து கொடுக்கும்படிதானே அந்நிறுவனத்தாரிடம் சொல்லியிருந்தார். அதற்குள் நீங்கள் தம் விருப்பப்படி சுயமுடிவு எடுத்ததுதான் அவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்.

அந்த நிறுவனத்தில் ஏற்கெனவே நான் கேட்ட ஊதியத்தை அவர்கள் கொடுக்கவில்லை. ஆசிரியரை வைத்துக்கொண்டுதான் ஊதியம் பற்றிப் பேசினேன். அதில் சிறிதளவுதானே உயர்த்தினார்கள்? நான் கேட்டதை முழுமையாகத் தரவில்லையே? பிறகு எப்படி அவர்கள் இன்னும் உயர்த்தித் தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

அப்பணிக்குத் தங்களை நியமித்ததே அவர்தாமே? பிறகேன் அவரிடம் சொல்லாமல் சென்றீர்? என்று அவர் கேட்டார்.

அது உண்மைதான். என் ஆசிரியர்தாம் என்னை அப்பணிக்கு நியமித்தார். நான் மறுக்கவில்லை. ஆனால் சொல்லாமல் சென்றுவிட்டேன் என்பது முற்றிலும் தவறு. அந்நிறுவனத்தார் பேச்சு வார்த்தைக்கு அமரும் முன்னரே, நான் என்னுடைய நிலைப்பாட்டை ஆசிரியரிடம் கூறிவிட்டேன்.  பின்னரும் என் நிலையை விளங்கிக்கொள்ளவில்லையானால் நான் என்ன செய்வேன்?

அப்படிப் பார்த்தால் அவரும்தான் அவ்வாறு செய்துள்ளார். இருபத்தைந்து ஆண்டுக் காலம் ஒரு தலைசிறந்த கல்லூரியில் பணியாற்றினார். தம் திறமைக்கும் பணிக்கும் உரிய ஊதியத்தையும் உயர்வையும் வழங்காததால் அதைவிட்டு வெளியேறினார். அதைவிடச் சிறந்த ஊதியத்தில் இப்போது எழுத்துப் பணியாற்றுகிறார். இதில் தவறேதும் இல்லையே. இதுதானே இயல்பு. ஒவ்வொருவரும் தம்முடைய உயர்வைத்தான் பார்க்க வேண்டுமே தவிர ஒரே இடத்தைப் பிடித்துக்கொண்டு சிரமப்பட்டேனும் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே என்று உறுதிபடக் கூறினேன்.

அது மட்டுமில்லை. ஊதியம் குறைவு என்பதற்காக மட்டும் நான் அந்த நிறுவனத்தைவிட்டு வெளிவரவில்லை. அங்குள்ளவருக்கு என்மீது நம்பிக்கையே இல்லை. அங்கிருந்த முதலாளி அவருடைய கணிப்பொறியில் ஒரு சிறப்பு மென்பொருளைப் பதிவுசெய்துகொண்டு என் கணிப்பொறியோடு இணைத்துவிட்டு, நான் பணி செய்கிறேனா, இல்லையா என்று உளவு பார்க்கும் வேலையைத்தானே செய்துகொண்டிருந்தார். என்மீது நம்பிக்கை இல்லாத ஒரு நிறுவனத்தில் என்னால் எப்படிப் பணியாற்ற முடியும்? நான் அங்கு செய்தது மூன்று பேருடைய வேலை. இன்றைக்கு அந்த மூன்று பேருக்கும்  தனித்தனியே கொடுக்கும் சம்பளம் நான் கேட்டதைவிட அதிகம். நான் வெளியே வந்து ஓராண்டாகியும் ஒரு புதிய நூலையும் அவர்கள் வெளியிடவில்லை. நான் முடித்துக் கொடுத்ததைக்கூட அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. அப்படியிருக்கும்போது, புதிதாக ஒரு நூல் வெளியிட இரண்டு, மூன்று ஆண்டுகள்கூட ஆகலாம். என்னுடைய பணிச்சுமையையும் அதை நான் எவ்வாறு செயலாற்றினேன் என்பதையும் இப்போது அவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.

சரி, உங்களுடைய ஆதங்கத்தையும் வலியையும் நான் அவரிடம் எடுத்துச் சொல்கிறேன் என்று அவர் புறப்பட்டுவிட்டார்.

என்னுடைய ஆசிரியர் என்மீது கோபப்பட்டு என்னிடம் பேசாமலிருந்தபோது நான் உணர்ந்த வலிதான் எனக்கு அதை ஞாபகப்படுத்தியது. அதாவது என்னுடைய மாணவி ஒருவர், அவர் என்னைவிட வயதில் மூத்தவர். அவர் ஒரு தடவை என்னிடம் சற்றுக் கடுமையாகப் பேசிவிட்டார் என்பதற்காக நான் அவரிடம் ஓராண்டுக்காலம் பேசாமல் இருந்துவிட்டேன். இப்போதுதான் அவருடைய அந்த வலியை உணர்ந்தேன். உடனே அவரைச் செல்பேசியில் தொடர்புகொண்டு பேசலானேன். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவருக்கு மட்டுமில்லை. எனக்கும்தான் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வாழ்த்துக் கூறுவோம்!




ஒருவருக்கொருவர் முரண்பட்ட குணங்களையும் எண்ணங்களையும் கொண்ட மனிதர்கள் மத்தியில்தான் மனிதர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவரின் குணத்தையும் எண்ணத்தையும் புரிந்து அதற்கேற்றவாறு நடந்துகொள்வது அறிவுடைமையாகும். மாறாக, நமக்குத் தோதுவாக அவர் நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுவது அறிவுடைமையாகாது. ஒவ்வொருவரும் தத்தம் கருத்துகளையே முன்னிறுத்த விரும்புகின்றார். அவற்றையே மக்கள் மனதில் பதிய வைக்க முனைகின்றார். அதில் தவறில்லை. அதே நேரத்தில் பிறரின் கருத்து தம்முடைய கருத்துக்குத் தோதுவாகவோ தம்முடைய கருத்தைப் பாதிக்காத வகையிலோ இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

ஒருவரைப் பற்றிய ஏதோ ஒருவிதப் பகைமைப் பண்பு நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுவதால், அவர் என்னதான் நல்ல கருத்துகளையே கூறினாலும் அவற்றை ஏற்க நம் மனம் மறுக்கிறது. இதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் எந்த நல்ல கருத்தும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஒரு சிக்கலான பொழுதில்கூட நாம் எந்தத் தீர்வுக்கும் வரமுடியாமல் தவிக்க நேரிடும்.  எனவே இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முயல்வோம். ஒருவர் கூறுகின்றவற்றுள் நன்மையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடுவதே ஓர் இறைநம்பிக்கையாளரின் பண்பாகும்.

இவ்வளவையும் கூறிவிட்டு ஒரு முக்கியமான கருத்தை உங்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கவே முனைகிறேன். இறைநம்பிக்கை கொண்ட யாவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர் என்பதை  நாம் அறிவோம். நாம் அனைவரும் மனதால் ஏற்று, நாவால் மொழிந்துள்ள, இருபத்து நான்கு எழுத்துகளைக் கொண்ட லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்-எனும் திருவாசகமே நம்மை ஒரு குடையின்கீழ் இணைக்கிறது. அதன் காரணமாகவே நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொள்கிறோம். அன்பைப் பகிர்ந்துகொள்கிறோம். ஒரே பள்ளிவாசலில் ஒன்றாக இணைந்து ஒரே குழுவாகத் தொழுகின்றோம்.

ஆனால் நமக்கு மத்தியில் பல்வேறு இயக்கங்கள் உருவாகிவிட்டதால், ஓர் இயக்கத்தில் உள்ளவன் மற்றோர் இயக்கத்தில் உள்ளவனை எதிரியாகப் பார்க்கும் அவலநிலை தற்காலத்தில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ளது. அந்த இயக்கத்திலுள்ளவனும் இந்த இயக்கத்திலுள்ளவனும் ஒரே திருவாசகத்தைக் கூறியவர்கள். ஒரே நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள். அப்படியிருக்கும்போது இந்தத் தற்காலிகப் பகைமை ஏன்? இது ஓர் ஆரோக்கியமான நடைமுறை இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பொதுச் சேவை இயக்கங்கள், இன்னபிற இயக்கங்களில் உள்ள அனைவரும் ஒரே திருவாசகத்தைக் கூறியவர்கள்தாம். அனைவரும் ஒரே நபியைப் பின்பற்றுபவர்கள்தாம். அனைவரும் ஒரே வேதத்தை உடையவர்கள்தாம். அப்படியிருக்கும்போது பல்வேறு பிரிவுகளும், அதனால் பிணக்குகளும் ஏன்? ஒருவர் மற்றவரை வசைமாறி பொழிவதும் திட்டிக்கொள்வதும் ஏன்? உயிரையே துறக்கும் அளவுக்கு மோதல்கள் ஏன்? இவையெல்லாம் களையப்பட வேண்டியவை. எனவே நாம் அனைவரும் ஒரே குடையின்கீழ் உள்ள ஒரே குடும்பத்துச் சகோதரர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இயக்கங்கள் நம்மைப் பிளவுபடுத்திவிட வேண்டாம்.

நாம், இந்த ஈகைப் பெருநாளில் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த சகோதரர்களுக்கும் முகமன் கூறுவதோடு, பெருநாள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வோம். ஒருவருக்கொருவர் சகோதரர் என்ற உண்மையை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டு இச்சமுதாய மக்களுக்காகப் போராடுவோம். அவர்கள் அனைவரும் முன்னேறப் பாடுபடுவோம். அல்லாஹ் நம் முயற்சிக்குரிய நற்கூலியைத் தருவான் என்ற நம்பிக்கை கொள்வோம்!



இனிய திசைகள் ஆகஸ்ட் இதழ் (2012)

இனிய திசைகள் ஆகஸ்ட் இதழைப் படிக்க: