செவ்வாய், 20 டிசம்பர், 2011

சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா




சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா 
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் நான் கலந்துகொண்டு இஸ்லாமியக் கருத்துகளைக் கூறக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

இது ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமூகநலக் கூடத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி, காலை 11 மணிக்கு நடைபெற்றது. 
மாலை மலர் வெளியிட்ட  புகைப்படம்.   


பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருக்கு அருகில் நான். (மாலைமலர்)

அழைப்பிதழில் என் பெயர் இடம்பெற்றுள்ளது. 

வெள்ளி, 16 டிசம்பர், 2011

இனிய திசைகள் (டிசம்பர் மாத இதழ் )

இனிய திசைகள் (டிசம்பர் இதழ் 15-14.01.12)

படிக்க இங்கே சொடுக்குக:

திரைப்படங்களும் முஸ்லிம்களும்

‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓர் ஒவ்வாமை நிலையை உருவாக்கப் பல்வேறு கோணங்களில் தீய சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. “அவன் கெட்டவன்”, “நாட்டுக்கு விரோதி”, “தேசத் துரோகி” என்ற மனப்பான்மையை மக்கள் மனங்களில் பதிய வைக்க அவை போட்டிபோடுகின்றன.

 மக்களை வெகுவாகச் சென்றடையக்கூடியதும் அவர்களை எளிதில் கவரக்கூடியதும் திரைப்படம். அதைக் கேளிக்கையாகப் பார்த்து, விளையாட்டாக விட்டுவிடக்கூடிய நிலையில் உருவாகி வந்த திரைப்படங்கள் இன்று முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவதற்காகவும் அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என்ற பொய்யான கருத்தாக்கத்தை ஏற்படுத்தவுமே தயாரிக்கப்படுகின்றன.

 தமிழக மக்களைப் பொறுத்தவரை, எதன்மூலமும் சாதிக்க முடியாததைத் திரைப்படத்தின் வாயிலாகச் சாதித்துவிடலாம். இந்தத் தமிழகத்தை இதுவரை ஆண்டவர்கள், மக்கள் சேவை செய்வதைப் போன்ற திரைப்படக் காட்சிகளால் மக்களைக் கவர்ந்ததாலேயே ஆட்சிக்கு வந்தார்கள். அத்தகைய மாபெரும் மாற்றத்தைத் திரைப்படங்கள் செய்துவருகின்றன.

 ஆகவேதான் முஸ்லிம்களுக்கு எதிரான தீயசக்திகள் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகக் காட்டத் திரைப்படத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவருகின்றார்கள். முஸ்லிம்கள் திரைப்படத்துறையைக் கையிலெடுக்கமாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் அவர்கள் மிகத் துணிவோடு இவ்வழியைக் கையாள்கிறார்கள்.

 ரோஜா எனும் திரைப்படம் முதல் பம்பாய் எனும் திரைப்படம் வரை எடுத்தவர்கள், தொடர்ந்து அவ்வப்போது முஸ்லிம் பெயர்கள் தாங்கிய கதாபாத்திரங்களைத் தேசத்துரோகிகளாகக் காட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். குண்டு வைப்பவர்களும், தேசத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும் முஸ்லிம் கதாபாத்திரங்கள். அவர்களைக் காப்பாற்றப் போராடுபவர்களும், அதற்காக முயற்சிசெய்பவர்களும் இந்துக் கதாபாத்திரங்கள். இப்படிப்பட்ட திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. அதற்கான வழியையும் இதுவரை நம்முள் யாரும் யோசிக்கவும் இல்லை.

 அண்மையில் வெளிவந்துள்ள இரண்டு திரைப்படங்கள் அத்தகைய திரைப்படங்களே. வானம் எனும் திரைப்படம் ஐந்து கதைக்கருவைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று இளவயதில் வீட்டைவிட்டுச் சென்றவன் தீவிரவாதக் கும்பலுடன் சேர்ந்து சமூக விரோதியாக மாறுவதாகச் கதை அமைந்துள்ளது.

 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது முஸ்லிமை (அண்ணன்) வீண் வம்புக்கிழுத்து இந்துக்கள் அடிக்கின்றபோது, அதைத் தடுக்கத் தம்பி ஓடி வருகிறான். இருவரையும் அவர்கள் கண்டபடி தாக்குகின்றபோது, ஒரு காவலர் வந்து அதைத் தடுத்து அனுப்பி வைப்பதாகக் காட்சி அமைந்துள்ளது. அதில் மனமுடைந்த தம்பி வீட்டைவிட்டே சென்றுவிடுகிறான். அவனைத் தேடித்தான் அண்ணன் சென்னைக்குச் செல்கிறான்.

 அங்கு அவன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகிறான். அங்கு ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் கதாபாத்திரங்கள் தீவிரவாதிகளாகக் காட்டப்படுகின்றனர். அவர்களுள் ஒருவன், “அழுதுகொண்டே இருக்கக்கூடாது. அழ வைக்கணும். மற்ற இடங்களில் குண்டு வைத்தால் மருத்துவமனைகளில் வந்து பிழைத்துக்கொள்வார்கள். மருத்துவமனையிலேயே குண்டு வைத்தால் யாரும் பிழைக்க முடியாது” என்று கூறுகிறான். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் சொல்வதாக அமைந்துள்ள இந்தக் காட்சி முற்றிலும் அப்பட்டமானது. எந்த முஸ்லிமுடைய சிந்தனையிலும் தோன்றாதது. இப்படிக் குரூரமாகச் சிந்தித்து, அதை முஸ்லிம் கதாபாத்திரம் பேசுவதாகக் கதை அமைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

 இறுதியில், காணாமல் போன தம்பியைத் தேடிச் சென்ற முஸ்லிம் கதாபாத்திரம் குர்ஆனைக் கையில் பிடித்துக்கொண்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளைப் பார்த்து, “அல்முஸ்லிமு மன் சலிமல் முஸ்லிமூன மின் லிசானிஹி வயதிஹி” (தம் நாவாலும் கையாலும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப்பெற்றவர்களாக இருக்கக் காரணமானவரே உண்மையான முஸ்லிம்) என்ற நபிமொழியையும், “லைசஷ் ஷதீதுல்லதீ யக்த்துலு...” (போர்க்களத்தில் எதிரிகளை வெட்டுபவன் வீரன் அல்லன். மாறாக, தம் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்) என்ற நபிமொழியையும் உரத்து உச்சரிக்கிறது.

 முஸ்லிம் சமுதாயம் படித்துவருகின்ற நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை அவர்களுக்கே எடுத்துக்காட்டுகின்றார்களா? அல்லது அதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு ஞாபகப்படுத்த முனைகின்றார்களா?ஆக, இதில் “முஸ்லிம்கள் தீவிரவாதிகள்” என்று அப்பட்டமாகக் காட்டத் தவறவில்லை.

 இரண்டாவது திரைப்படம் வேலாயுதம். பேரைக் கேட்டாலே அதில் எந்த அளவு இந்துத்துவம் உள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில்தான். அங்கே ஒரு முஸ்லிம் பெரியவர், உர்தூ மொழியில் பேச, அதை மற்றொருவர் தமிழாக்கம் செய்கிறார். “இந்தியாவின் அமைதியைக் கெடுக்க வேண்டும். அதற்குச் சென்னையில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்க வேண்டும்.”

 அந்தத் தீவிரவாதக் குழுவுக்குத் தமிழக உள்துறை அமைச்சர் விலைபோகிறார். இப்படித் தொடங்குகின்ற இந்தத் திரைப்படத்தில், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கின்றன. வேலாயுதம் எனும் பெயரில் கதாநாயகன் அதைத் தடுக்கிறார். அவர் எதார்த்தமாகச் செய்வது மக்களுக்கு நன்மையாக ஆகிவிடுகிறது. எனவே மக்கள் மத்தியில் “வேலாயுதம் காப்பாற்றுவார்” எனும் நம்பிக்கை வளர்ந்துவருகிறது. இறுதியில் அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிய பாகிஸ்தான்காரன் ஜிஹாத் என்று சொல்லிக்கொண்டு வருகிறான்.

 வேலாயுதத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்போவதாக உள்துறை அமைச்சர் கூற, அதைக் கேட்டு ஆவலோடு மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் நிறைந்துள்ள அத்திடலைச் சுற்றி குண்டுகளை வைத்துத் தகர்க்க எதிரி திட்டமிடுகிறான். “நான்தான் வேலாயுதம்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தும்போது அவனது பொய்முகம் கிழிகிறது. அப்போது அவன், “இந்தத் திடலைச் சுற்றிக் குண்டு வைத்துள்ளோம். யாரும் இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது” என்று அறைகூவல் விடுக்கும்போது, உண்மையான வேலாயுதம் அதை முறியடித்து, மக்களைக் காப்பாற்றி, சில வசனங்களைப் பேசுகிறார். ஒவ்வொருவரும் வேலாயுதமாக மாறவேண்டும் என்று துணிவை வரவழைக்கிறார்.

 இத்திரைப்படம் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரானதாகும். இப்படத்தில் பாகிஸ்தான் முஸ்லிம்களைக் காட்டினாலும், அது முஸ்லிம்கள் என்ற பொதுவான பார்வையைத்தான் குறிக்குமே தவிர பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய இத்திரைப்படத்துக்கு நம் சமுதாயத்தில் யாரும் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே “முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்” என்பதைத் தீயசக்திகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 “இத்திரைப்படத்தில் வருகின்ற கதை, காட்சிகள், வசனங்கள் யாவும் கற்பனையே. இவை யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல” என்று திரைப்படம் தொடங்குமுன்னரே குறிப்பிட வேண்டும். இது திரைப்படத்தின் விதிகளுள் ஒன்றாகும். மேற்கூறப்பட்ட இரண்டு திரைப்படங்களிலும் அந்த வாசகம் இடம்பெறவே இல்லை.

 ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கற்பனை செய்து காட்டுவது நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு கோணங்களில் முஸ்லிம்கள் சிரமத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு காணப்படுகிறது. இதனால் வீடு வாடகைக்குப் பெறுவதுகூட மிகச்சிரமமாக உள்ளது.

 இதைக் களைய நாம் செய்ய வேண்டியதென்ன? நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதோ, அதேபோல் திரைப்படம் எடுப்பதோ இல்லை. மாறாக, கதாசிரியர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்முள் ஒரு குழு சந்திக்க வேண்டும். அதுவே இஸ்லாமிய அழைப்புப் பணிக்குழு. அக்குழு நேரடியாக அவர்களைச் சந்தித்து, இஸ்லாம் என்ன சொல்கிறது; அது எதை நோக்கி அழைக்கிறது; திருக்குர்ஆனில் என்ன உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. திருக்குறளின் கூற்றுகள் பதிந்துள்ள அளவுக்குத் திருக்குர்ஆனின் கூற்றுகள் மனித நெஞ்சங்களில் பதியவில்லையே ஏன்? அதைப் புனிதமாகக் கருதி, அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஒதுக்கி வைத்ததால்தான் நம்முள் பலருக்கு அதன் அர்த்தம்கூடத் தெரியவில்லை. நமக்கே அதைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோது, பிறருக்கு எப்படித் தெரியும்?

 எனவே திருக்குர்ஆனின் கூற்றுகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்போம்! அதன் கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் பரப்புரை செய்வோம்! திண்ணமாக, காலப்போக்கில் ‘முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்; அவர்கள் நம்முடைய நண்பர்கள்’ எனும் உண்மை உலகுக்குப் புரியும். அந்த நிலை இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் வரும். அதற்காகப் பாடுபட நாம் யாவரும் நம்மால் இயன்ற அளவு முனைவோம்!




இஸ்லாமிய இல்லறம் (நூல் விமர்சனம்)

  இஸ்லாமிய இல்லறம் (நூல் விமர்சனம்)