வியாழன், 28 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 12)

சார்ரா அம்மையாரின் சீற்றம்

ஹாஜிர் (அலை) அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) பிறந்தபோது, சார்ரா அம்மையாரின் சீற்றம் அதிகமானது. எனவே, அவர் தம் கணவர் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ஹாஜிரை என் கண்பார்வையிலிருந்து மறைத்துவிடுவீராக! என்று கேட்டுக்கொண்டார். ஆகவே, இப்ராஹீம் நபியவர்கள் ஹாஜிரையும் அவருடைய மகன் இஸ்மாயீலையும்  அழைத்துச் சென்று, இன்று மக்கா என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் அவ்விருவரையும் விட்டுவிட்டார். அவருடைய குழந்தை இஸ்மாயீல் அந்நேரத்தில் பால்குடிப் பாலகராக இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
அங்கு அவர் அவ்விருவரையும் விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றார். ஹாஜிர் (அலை) எழுந்து அவருடைய ஆடையைப்  பிடித்துக்கொண்டு, “இப்ராஹீமே! எங்களை இங்கே விட்டுவிட்டு நீர் எங்கே செல்கின்றீர்? எங்களுக்குத் தேவையான அளவுக்கு (உணவுப்பொருள்) இங்கு இல்லையே?” என்று வினவினார். ஆனால், அவர் அவருக்கு பதிலளிக்கவில்லை. அவர் தொடர்படியாகக் கேள்விகள் கேட்டும் அவர் பதிலளிக்காதபோது, “இதைச் செய்ய அல்லாஹ்தான் உம்மை ஏவினானா?” என்று வினவினார். ஆம்! என்று பதிலளித்தார். அப்படியானால், அவன் எங்களை வீணாக விட்டுவிடமாட்டான் என்று ஹாஜிர் (அலை) மறுமொழி பகன்றார்.

ஷைக் அபூமுஹம்மத் பின் அபூஸைத் (ரஹ்) தம்முடைய `அந்நவாதிர் எனும் நூலில் கூறியுள்ளார்: திண்ணமாக சார்ரா (அலை) ஹாஜிர் (அலை) மீது கோபம்கொண்டார். எனவே, ஹாஜிருடைய மூன்று உறுப்புகளை வெட்டு (துளையிடு)வதாக சார்ரா அம்மையார் சத்தியம் செய்துகொண்டார். ஆகவே, இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹாஜிரிடம், இரண்டு காதுகளையும் துவாரமிட்டுக்கொள்வதோடு, அவருடைய கீழுறுப்பையும் விருத்தசேதனம் (கத்னா) செய்து (துளையிட்டுக்)கொள்ள வேண்டும் என்று ஏவினார். அதன் மூலம் சார்ரா (அலை), தாம் செய்த சத்தியத்தை நிறைவேற்றியவராக ஆகிவிட்டார்.

ஸ்ஸுஹைலீ (ரஹ்) கூறுகிறார்: பெண்களுள் முதன்முதலில் விருத்த சேதனம் (கத்னா) செய்துகொண்டவர் ஹாஜிர் (அலை) ஆவார். அவர்களுள் முதன்முதலில் தம் இரண்டு காதுகளில் துவாரமிட்டுக்கொண்டவரும் அவரே. முதன்முதலில் அவரே தம்முடைய ஆடையை நீளமாகத் தொங்கவிட்டார்.

மனைவி-மகனைத் துறத்தல்

முதன்முதலில் இடுப்புக் கச்சையை அணிந்தவர் இஸ்மாயீல் நபியின் தாயார் ஹாஜிர் (அலை) ஆவார். சார்ரா தம்மீது கொண்டுள்ள மனக்கசப்பை நீக்கிக்கொள்வதற்காகவே அவர் இடுப்புக் கச்சையை அணிந்துகொண்டார். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்கள், அவரையும் அவருடைய பால்குடி மகனான இஸ்மாயீலையும் அழைத்துச் சென்றார். மஸ்ஜிதின் மேற்புறத்தில் ஸம்ஸம் அருகில் பெருமரத்தின் நிழலில் அவ்விருவரையும் விட்டுவிட்டார். அந்நாளில் மக்காவில் யாருமில்லை. அங்கு எந்தத் தண்ணீரும் இல்லை.  அவர்கள் அருகில் பேரீச்சம்பழம் நிறைந்த ஒரு பையையும் தண்ணீர் நிறைந்த ஒரு குடுவையையும் வைத்து,  அவ்விருவரையும் அங்கேயே விட்டுவிட்டார் என்று இப்னு அப்பாஸ் (ரளி)  கூறியுள்ளார்கள்.   (நூல்: புகாரீ)

இப்ராஹீம் நபி திரும்பிச் செல்லுதல்

அவ்விருவரையும் விட்டுவிட்டு இப்ராஹீம் நபி திரும்பிச் சென்றார். அவரைத் தொடர்ந்து பின்னாலேயே இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரும் சென்றார். எந்த மனிதரும், எந்தப் பொருளும் இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு இப்ராஹீமே! நீர் எங்கே செல்கின்றீர்? என்று அவர் வினவினார். இவ்வாறு அவர் பல தடவை கேட்டார். ஆனால், அவரோ அவரைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அதன் பின்னர், “இவ்வாறு செய்ய அல்லாஹ்வா உம்மை ஏவினான்?” என்று வினவினார். ஆம்! என்று பதிலளித்தார். அப்படியானால், அவன் எங்களை வீணாக விட்டுவிடமாட்டான் என்று கூறிவிட்டுத் திரும்பி (அதே இடத்துக்கு) வந்துவிட்டார்.

இப்ராஹீம் (அலை) நடந்துசென்றார். யாரும் அவரைப் பார்க்க முடியாத மலைப்பாதை அருகே வந்து இறையாலயத்தை முன்னோக்கி, தம் இரண்டு கைகளை உயர்த்திப் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: எங்கள் இறைவா! திண்ணமாக நான் என் வழித்தோன்றல்களுள் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே  குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா!  இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களுள் சிலருடைய இதயங்களை இவர்கள்பால் கவரச் செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன்மூலம்) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்).  (14: 37)

ஸ்மாயீலின் தாய் அவருக்கு அமுதூட்டத் தொடங்கினார். அவர் அருகில் இருந்த தண்ணீரை அருந்தத் தொடங்கினார். அந்தத் தண்ணீர்க் குடுவையில் தண்ணீர் இருந்த வரை அதை அவர் அருந்தினார். அது முடிந்தபின் அவரும் அவருடைய பிள்ளையும் தாகம்கொண்டனர். அவருடைய குழந்தை சிரமப்படுவதைப் பார்த்தார். அக்குழந்தையைப் பார்க்கச் சகிக்காமல் (அங்கிருந்து) நடந்தார். அவருக்கு அருகில் ஸஃபா குன்று இருந்ததைக் கண்டார்.  அக்குன்றின் மேல் ஏறினார். பின்னர் அந்தப் பள்ளத்தாக்கை முன்னோக்கி யாராவது வருகிறாரா என்று பார்த்தார். ஆனால், அவர் யாரையும் காணவில்லை. எனவே ஸஃபாவிலிருந்து இறங்கினார். பின்னர், அந்தப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதியை அவர் அடைந்தபோது, அவர் தம்முடைய உடற்கவசத்தின் ஓரத்தை உயர்த்திக்கொண்டார். பிறகு, அவர்  சிரமப்படக்கூடியவன் ஓடுவதைப்போல் ஓடினார். அவ்வாறே அவர் அந்தப் பள்ளத்தாக்கைக் கடந்துவிட்டார். பின்னர், மர்வா குன்றுக்கு வந்தார். அதன் மீது ஏறினார். யாராவது வருகின்றாரா என்று தேடிப் பார்த்தார். ஆனால், அவர் யாரையும் காணவில்லை. இவ்வாறே அவர் ஏழு தடவை செய்தார்.
அதனால்தான் (இன்றைய) மக்கள் அவ்விரண்டையும் (ஸஃபா-மர்வா) சயீ செய்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஸம்ஸம் தண்ணீர் ஹாஜிர் (அலை)  மர்வாவை அடைந்தபோது ஒரு சப்தத்தைக் கேட்டார். அமைதியாக இரு! என்று தம்மைத்தாமே கூறிக்கொண்டார். பிறகு, அவர் கூர்ந்து கவனித்தபோது மீண்டும் அந்தச் சப்தத்தைக் கேட்டார். உன்னிடம் உதவி இருப்பதால்தான் நீ கேட்கச் செய்திருக்கிறாய் என்று கூறிக்கொண்டே அப்பக்கம் பார்த்தார். அங்கே ஸம்ஸம் தண்ணீர் (இடத்தின்) அருகே ஒரு வானவர் இருப்பதைக் கண்டார். அவர் தம்முடைய குதிங்காலால் (அல்லது சிறகால்) அதைத் தோண்டினார்; தண்ணீர் வெளிவந்தது; அதனைச் சுற்றி ஹாஜிர் பாத்தி கட்டத் தொடங்கினார்; அவர் தம் கையாலே ஸம்ஸம் (நில்நில்) என்று சொல்லலானார்; தம் கைகளால் தண்ணீரை எடுத்துக் குடுவையில் நிரப்பினார்; அவர் (தமக்குத் தேவையான) தண்ணீரை எடுத்துக்கொண்டபோதும் அது நில்லாமல் பொங்கிவழிந்து கொண்டிருந்தது.
ஸ்மாயீலின் தாய்க்கு அல்லாஹ் அருள்புரியட்டும்! அவர் ஸம்ஸமை (பாத்தி கட்டாமல் அப்படியே) விட்டிருந்தால் அது ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஊற்றாக ஆகியிருக்கும். அவர் அதிலிருந்து பருகினார்; தம் பிள்ளைக்குப் பாலூட்டினார். அப்போது ஒரு வானவர் அவரிடம், “நீர் வீணாகப் போய்விடுவீர் என்று அஞ்சாதீர்!; ஏனென்றால், இவ்விடத்தில் அல்லாஹ்வுக்காக ஒரு வீடு இருக்கிறது. அவ்வீட்டை இந்தச் சிறுவரும் அவருடைய தந்தையும் கட்டுவார்கள் என்று கூறினார். நிச்சயமாக அல்லாஹ் அவருடைய குடும்பத்தினரை வீணாக விட்டுவிடமாட்டான் என்று வானவர் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (ரளி)  அறிவித்துள்ளார்கள்.

இறையாலயத்தைக் கட்டத் தொடங்குதல்

அவ்வீடு நிலத்தைவிட்டு உயர்ந்து ஒரு குன்றைப் போல் (உயர்ந்து) நின்றது. (அவ்வப்போது) அதனை நோக்கி பெருவெள்ளம் வரும். அது இடப்புறத்தையும் வலப்புறத்தையும் அரித்துச் செல்லும். ஜுர்ஹும் குலத்தினர் அவ்விடத்திற்கு வருகின்ற வரை அது அவ்வாறே இருந்தது. அவர்கள் கதாஉ என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.  அவர்கள் மக்காவின் தாழ்வான ஒரு பகுதியில் தங்கினர். அப்போது அவர்கள் ஒரு பறவை வட்டமிடுவதைக் கண்டார்கள். திண்ணமாக அந்தப் பறவை தண்ணீரைக் கண்டுதான் சுற்றிக்கொண்டிருக்கிறது. எனவே, நாம் அந்தப் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்று, அங்குள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று (பேசிக்கொண்டனர்).  ஆகவே, அவர்கள் அதனை நோக்கி ஓரிரு சிறுவர்களை அனுப்பி, தகவல் தெரிந்துவரச் செய்தனர். அவர்கள் சென்று பார்த்தபோது (தாம் நாடிய) தண்ணீர் அவர்களுக்கு அருகிலேயே இருந்தது. எனவே அவர்கள் (தம்முடைய உறவினர்களிடம்) திரும்பிச் சென்று அங்குத் தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தனர். இதைக் கேட்டவுடன் அவர்கள் அதை நோக்கிச் சென்றனர்.
ஸ்மாயீலின் தாய் தண்ணீர் அருகே இருந்ததைக் கண்ட அவர்கள், “நாங்கள் இங்குத் தங்குவதற்குத்  தாங்கள் அனுமதி தருகின்றீர்களா?” என்று கேட்டனர். ஆம்! நான் அனுமதிக்கிறேன். ஆனால், எங்களிடம் உள்ள தண்ணீரில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பதிலளித்தார். அதற்கு அவர்கள், அதை ஆமோதித்தனர்.
ஸ்மாயீலின் தாய் மனிதர்களை விரும்புகின்ற நிலையில், அவர்கள் அங்கு வந்து தங்கியது அவருக்கு ஆறுதலைக் கொடுத்தது. எனவே, அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்கள் தம் குடும்பத்தினர் எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார்கள். அவர்களோடு அவர்களின் குடும்பத்தினரும் வந்து தங்கினர். இறுதியில், அவர்கள் மூலம் பல வீடுகள் உண்டாகிவிட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள்.

ஸ்மாயீல் நபியின் திருமணம்

ஸ்மாயீல் (அலை) வாலிபர் ஆனார். அம்மக்களிடம் அரபிமொழியைக் கற்றுக்கொண்டார். அவர் இளைஞராக ஆனபோது அவர்கள் மத்தியில் ஒரு சிறப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்குரியவராகவும் ஆகிவிட்டார். அவர் பருவ வயதை அடைந்தவுடன் அவர்களிலிருந்து ஒரு பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தனர்.

ஸ்மாயீலின் தாய் மரணமடைந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, தாம் விட்டுச்சென்ற தம் குடும்பத்தினரைப் பார்க்க இப்ராஹீம் (அலை) வந்தார். அவர் இஸ்மாயீலைக் காணவில்லை. அவர் தம் மகனின் மனைவியிடம் (மருமகள்) கேட்டார். அவர் எங்களுக்காக உழைத்துப் பொருளீட்டச் சென்றுள்ளார் என்று பதிலளித்தார். பின்னர், அவர்களுடைய வாழ்க்கை நிலையைப் பற்றி அவரிடம் விசாரித்தார். அதற்கு அவர், “நாங்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறோம்; மிகவும் சிரமமான நிலையிலும் சிக்கலிலும் வாழ்ந்து வருகிறோம் என்று கூறி அவரிடம் தம் வாழ்க்கையைப் பற்றி முறையிட்டார். உம்முடைய கணவர் வந்தால் என்னுடைய சலாமை அவருக்குச் சொல்வீர்! அவர், உம்முடைய வீட்டின் வாசற்படியை மாற்றியமைக்கச் சொன்னார் என்று தெரிவிப்பீர்! என்று கேட்டுக்கொண்டார்.

ஸ்மாயீல் (அலை) அவர்கள் தம் பணியிலிருந்து திரும்பி தம் இல்லம் அடைந்தபோது, யாரோ ஒரு மனிதர் வந்து சென்றதைப் போன்று உணர்ந்தார். யாரேனும் உம்மிடம் வந்தாரா?” என்று வினவினார். ஆம்! இந்த மாதிரி ஒரு முதியவர் வந்தார். உம்மைப் பற்றிக் கேட்டார். நான் அவருக்கு உம்மைப் பற்றித் தெரிவித்தேன். நம்முடைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். நாங்கள் மிகுந்த சிரமத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகிறோம் என்று கூறினேன்எனத் தெரிவித்தார். அவர் ஏதேனும் அறிவுரை கூறினாரா?” என்று விசாரித்தார். ஆம்! உமக்கு அவருடைய சலாமைத் தெரிவிக்கச் சொன்னார். உம்முடைய வீட்டின் வாசற்படியை மாற்றியமைக்கச் சொன்னார் என்று அப்பெண் கூறினார்.
.
அப்போது இஸ்மாயீல் (அலை), “வந்தவர் என்னுடைய தந்தை ஆவார். நான் உன்னைப் பிரித்துவிடுமாறு எனக்கு அவர் கட்டளையிட்டுள்ளார். எனவே, நீ உன்னுடைய தாய்வீட்டுக்குச் சென்று அவர்களோடு இருந்துகொள் என்று கூறிவிட்டு, அவரை மணவிலக்குச் செய்துவிட்டார். பின்னர், அந்த வமிசத்திலிருந்து மற்றொரு பெண்ணை அவர் மணந்துகொண்டார். பின்னர், அல்லாஹ் நாடிய காலம் வரை இப்ராஹீம் (அலை) தம் பிள்ளையைப் பார்க்க வரவில்லை. (நீண்ட காலத்திற்குப் பிறகு) ஒரு நாள் அங்கு வந்தார். ஆனால், அவர் இஸ்மாயீலைக் காணவில்லை. அவருடைய மனைவியிடம் சென்று, தம் மகனைப் பற்றி விசாரித்தார். அவர் எங்களுக்காக உழைத்துச் சம்பாதிக்கச் சென்றுள்ளார் என்று பதிலளித்தார். நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்களுடைய வாழ்க்கைநிலை எப்படி இருக்கிறது? என்று அவரிடம் அவர் வினவினார். நாங்கள் நலவுடனும்  செல்வநிலையிலும் இருக்கிறோம் என்று கூறிவிட்டு அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். பின்னர், அவர், உம்முடைய உணவு என்ன? என்று இப்ராஹீம்  (அலை)  வினவினார். `இறைச்சி என்று அவர் பதிலளித்தார். நீங்கள் அருந்துகின்ற பானம் என்ன? என்று வினவினார். `தண்ணீர் என்று விடையளித்தார். அதைக் கேட்ட அவர், “இறைவா! அவர்களுடைய இறைச்சியிலும் தண்ணீரிலும் நீ அருள்புரிவாயாக! என்று பிரார்த்தனை செய்தார். 

அந்நாளில் அவர்கள் தானியங்களைச் சாப்பிடவில்லை. அவர்களிடம் தானியம் இருந்திருந்தால் அவர் அவர்களுக்காக அதில் அருள்புரியும்படி பிரார்த்தனை செய்திருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், மக்கா அல்லாத இடத்தில் அவ்விரண்டும் கிடைக்கப் பெறாமல் யாரும் இருக்கமாட்டார் என்று கூறினார்கள்.

பின்னர், இப்ராஹீம் (அலை) அவர்கள், “உம்முடைய கணவர் வந்தால் என்னுடைய சலாமை அவருக்குச் சொல்வீர்! மேலும், அவருடைய வீட்டின் கதவை நிலைப்படுத்தி வைத்துக்கொள்ளச் சொல்வீர்! என்று கூறினார். இஸ்மாயீல் (அலை) அவர்கள்  பணியிலிருந்து  தம் இல்லம் திரும்பியபோது, “யாரேனும் வந்தாரா?” என்று வினவினார். ஆம்! நல்ல தோற்றமுடைய ஒரு முதியவர் வந்தார் என்று கூறிவிட்டு அவரை அந்தப் பெண்மணி புகழ்ந்தார். அவர் உம்மைப் பற்றிக் கேட்டார். நான் அவருக்கு உம்மைப் பற்றிச் சொன்னேன். நம்முடைய வாழ்க்கை நிலையைப் பற்றி விசாரித்தார். நான் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தேன் என பதிலளித்தார்.  அவர்  உன்னிடம் ஏதேனும் அறிவுரை கூறினாரா?” என்று அவர் கேட்டார். ஆம்! அவர் உமக்கு சலாம் கூறக் கேட்டுக்கொண்டார். மேலும்,  அவர் உம்முடைய வீட்டின் கதவை நிலைப்படுத்தி வைத்துக்கொள்ளும்படி கூறினார் என்று பதிலளித்தார். வந்தவர் என் தந்தைதான். வீட்டின் கதவு என்பது நீதான். நான்  உன்னை நிலையாக வைத்துக்கொள்ள அவர் என்னை ஏவியுள்ளார் என்று கூறினார்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

  




திங்கள், 25 அக்டோபர், 2010

இரத்த தானம் செய்வோம்!

செவ்வாய், 19 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 11)

புனிதபூமிக்கு வருகை தருதல்

பின்னர், இப்ராஹீம் நபி, எகிப்தை விட்டுவிட்டுப் புண்ணிய நாட்டை நோக்கி  நடக்கலானார். அது அங்கிருந்த பைத்துல் முகத்தஸ் ஆகும். அவருடன் கால்நடைகள், அடிமைகள் மற்றும் மிகுதியான பொருள்கள்  இருந்தன. அவர்களுடன் கிப்தி வமிசத்தையும் எகிப்து நாட்டையும் சேர்ந்த ஹாஜர் என்பவர் சேர்ந்து வந்தார்.

திண்ணமாக லூத் (அலை) இப்ராஹீம் நபியின் கட்டளையின்பேரில் அவருடைய அதிகமான பொருட்களிலிருந்து ஹவ்ர் எனும் நகருக்காகச் செலவுசெய்தார். ஹவ்ர் என்று அறியப்படுவது ஸுஹர் எனும் நகரமாகும். அவர் சதூம் எனும் நகரத்தில் தங்கினார். அதுதான் அந்தக் காலத்தில் அந்நகரங்களின் தாயாக இருந்தது. ஆனால், அந்நகர மக்களெல்லாம் தீயவர் களாகவும் இறைமறுப்பாளர்களாகவும் பாவிகளாகவும் இருந்தனர்.
அச்சமயத்தில், அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கு வேத அறிவிப்புச் செய்து, அவர் தம் பார்வையை எல்லாப் பக்கமும் விசாலப்படுத்தக் கட்டளையிட்டான். வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லாத் திசைகளிலும் கவனம் செலுத்துமாறு கட்டளையிட்டான். இந்த நிலமனைத்தையும் கடைசிக்காலம் வரை உமக்காகவும் உம்முடைய சந்ததியினருக்காகவும் நான் ஆக்கவுள்ளேன் என்ற நற்செய்தியையும், உம் சந்ததியை நிலமண்ணின்  எண்ணிக்கை அளவுக்கு நான் அதிகப்படுத்துவேன் என்ற நற்செய்தியையும் அல்லாஹ் கூறினான்.
அந்த நற்செய்தி இந்தச் சமுதாயத்தை வந்தடைந்தது. ஆனால், அது இன்னும் முழுமையடையவில்லை. இந்த முஹம்மத் நபியின் சமுதாயத்தைவிடப் பெரிதாகவும் இல்லை.  



அதை உறுதிப்படுத்துகின்றவிதமாக நபி (ஸல்) அவர்களின் கூற்று அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் பூமிப்பரப்பை எனக்காக ஒன்றாகக் குவித்தான். நான் அதன் மேற்கில் அமைந்திருக்கின்ற பகுதிகளையும் அதன் கிழக்கில் அமைந்திருக்கின்ற பகுதிகளையும் ஒருசேரக் கண்டேன். என் சமுதாயத்தின் ஆட்சிஅதில் எனக்காக அல்லாஹ் எவ்வளவு ஒன்றுகுவித்தானோ அதுவரை அடைய இருக்கிறது.

அடக்கி ஆள்கின்ற ஒடுக்குமுறையாளர்களுள் ஒரு குழுவினர்லூத் (அலை) அவர்களைத் தாக்கிவிட்டு,   அவரைக் கைதுசெய்துஅவருடைய பொருட்களை எடுத்துக்கொண்டு அவருடைய கால்நடைகளைப் பிடித்துச் சென்றுவிட்டனர்.  இப்ராஹீம் நபிக்கு இச்செய்தி கிடைத்தவுடன், 318 ஆண்களை எதிர்நோக்கிச் சென்று லூத் (அலை) அவர்களை மீட்டிக்கொண்டுஅவருடைய பொருட்செல்வங்களையும் மீட்டிக்கொண்டு வந்தார். அவர்அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் எதிரிகளுள் பலரை வெட்டிவீழ்த்தினார். அவர்களை அவர் தோற்கடித்து அவர்களின் பொருட்களை எடுத்து வந்தார். டமாஸ்கசின் வட பகுதியை வந்தடைந்து அதன் வெளிப்புறத்தில் `பரஸா எனும் இடத்தில் முகாமிட்டார். இன்று  மகாமு இப்ராஹீம் எனும் இடத்தோடு `பரஸா எனும் வார்த்தை   இணைக்கப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்படுவதற்குக் காரணம் அந்த இடத்தில்தான் இப்ராஹீம் நபியின் படை முகாமிட்டுத் தங்கியது. அதன் காரணமாகத்தான் அப்பெயர் வந்தது என்று தாம் கருதுவதாக இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார். அல்லாஹ்வே நன்கறிபவன்.

பின்னர்அவர் அல்லாஹ்வின் உதவியைப் பெற்றவராக தம் நாட்டுக்குத் திரும்பினார். அதன் பின்னர்பைத்துல் மக்திஸ் நகரைச் சுற்றியிருந்த அரசர்கள் மிகவும் பணிந்தவர்களாகவும் கண்ணியப்படுத்துபவர்களாகவும் வந்து இப்ராஹீம் நபியைச் சந்தித்தார்கள். அந்த ஊரிலேயே இப்ராஹீம்  நபி தங்கிவிட்டார்.

ஸ்மாயீல் நபியின் பிறப்பு

வேதக்காரர்கள் கூறியுள்ளனர்: நிச்சயமாக இப்ராஹீம் நபி தம்முடைய இறைவனிடம் சிறந்தநல்ல சந்ததியைக் கேட்டார். அல்லாஹ்அவ்வாறே தருவதாக அவருக்கு நற்செய்தி கூறினான். இப்ராஹீம் பைத்துல் மக்திஸ் நகருக்கு வந்து பத்தாண்டுகள் ஆனபோதுஒரு நாள் சார்ரா அம்மையார் இப்ராஹீம் நபியிடம்திண்ணமாக இறைவன்எனக்குக் குழந்தை பாக்கியத்தைத் தடுத்துவிட்டான். எனவேநீர் என்னுடைய அடிமைப்பெண்ணை உறவுகொள்வீர்! அவள் மூலம் அல்லாஹ் நமக்கு ஒரு வாரிசைத் தரலாம் என்று கூறினார்.

அவர் தம் அடிமைப் பெண்ணை தம் கணவருக்கு வழங்கிய போதுஅவர் அப்பெண்ணுடன் உறவுகொண்டார். எனவேஅப்பெண் அவர் மூலம் கருவுற்றார். அவர் கருவுற்றபோது அவருடைய எண்ணம் உயர்வடைந்தது. அவர் தம்முடைய எஜமானியைவிடப் பெரியவராகக் கருதிக் கொண்டார். எனவேசார்ரா அம்மையார் அவரைப் பார்த்துப் பொறாமைகொண்டார்அதைத்  தம் கணவர் இப்ராஹீமிடம் முறையிட்டார்.

நீர் விரும்பியதைச் செய்துகொள்வீர்! என்று இப்ராஹீம் நபி பதிலளித்தார். எனவேஹாஜர் பயந்து ஓடினார். அங்கிருந்த ஓர் ஊற்றின் அருகில் தங்கினார். அங்குஅவரிடம் தோன்றிய ஒரு வானவர், “நீர் பயப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ்நீர் கருவுற்றிருக்கின்ற இந்தக் குழந்தை மூலம் நன்மையைச் செய்யவுள்ளான். அல்லாஹ் உம்மைத் திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டிருப்பதுடன்நீர் ஒரு மகனைப் பெற்றெடுப்பீர். அவருக்கு இஸ்மாயீல் என்று நீர்  பெயர் சூட்டுவீர் என்ற நற்செய்தியையும் கூறியுள்ளான். அந்தக் குழந்தைதான் எல்லோரின் அன்பிற்குரியவராக ஆகுவார்எல்லோரின் மீதும் அவரின் ஆதிக்கம் இருக்கும்எல்லா மக்களின்  பக்கபலமும் ஆதரவும் அவருக்கு இருக்கும்அவர் அனைத்து நாடுகளையும் ஆட்சிசெய்வார் என்று கூறினார். இதைக்கேட்ட ஹாஜிர்அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

நற்செய்தி மெய்யாகுதல்

அந்த நற்செய்தி அவருடைய பிள்ளை முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் மெய்யானது. நிச்சயமாகமுஹம்மத் (ஸல்) மூலம் அரபியர்கள் தலைவர்களாயினர். மேற்கிலிருந்து கிழக்கு வரை அனைத்து நாடுகளையும் ஆட்சிசெய்தனர். முன்சென்ற எந்தச் சமுதாயத்துக்கும் கொடுக்காத பயனுள்ள கல்வியையும் நற்செயல்களையும் இந்த அரபியர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான். இதுவெல்லாம்மற்ற இறைத்தூதர்களைவிட இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சிறப்பின் காரணத்தால்தான் கிடைத்தன. அவர்களுடைய தூதுத்துவத்தின் அருளாலும் அந்த நற்செய்தியின் மோட்சத்தாலும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் முழுமையாலும் அவர்கள் இவ்வுலக மாந்தர் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டதாலுமே இந்த உயர்வும் சிறப்பும் அரபியர்களுக்குக் கிடைத்தன. ஆகஹாஜிர் திரும்பி வந்தபோதுஅவர் இஸ்மாயீலைப் பெற்றெடுத்தார்.

வேதக்காரர்கள் கூறுகின்றனர்: அவர் அக்குழந்தையைப் பெற்றெடுத்தபோது இப்ராஹீம் நபியின் வயது எண்பத்து ஆறு.  அது இஸ்ஹாக் (அலை) பிறப்பதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகும். இஸ்மாயீல் (அலை) பிறந்தபோதேஅல்லாஹ் சார்ரா அம்மையார் மூலம் இஸ்ஹாக்கை வழங்கப்போவதாக இப்ராஹீமுக்கு நற்செய்தி நவின்றான். இதைக் கேட்டவுடன் அவர் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்துஅவனை வணங்கினார். அப்போது அல்லாஹ் அவரிடம்நான் உமக்கு இஸ்மாயீல் விசயத்தில் பதிலளித்தேன். மேலும்நான் அவர்மீது அருள்புரிந்தேன். அவருக்கு அருள்வளத்தை அதிகப்படுத்தி அவரை மேன்மையடையச் செய்தேன்.  அவருக்கு 12 தலைவர்கள் பிறப்பார்கள். அவரை நான் மிகப்பெரும் சமுதாயத்துக்குத் தலைவராக ஆக்குவேன் என்று கூறினான்.

முஹம்மத் நபியின் சமுதாயம்-ஒரு நற்செய்தி

இந்த  நற்செய்தி முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மிகப்பெரிய சமுதாயம் பற்றிய நற்செய்தியாகும். அந்த 12 தலைவர்கள் எனும் கூற்றுநல்வழிபெற்ற ஜனாதிபதிகளான 12 பேர்களைக் குறிக்கிறது. அவர்களைக் கொண்டே நற்செய்தி கூறப்பட்டது. ஜாபிர் பின் சமுரா (ரளி) அறிவிக்கின்ற நபிமொழி அதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. பன்னிரண்டு தலைவர்கள் உருவாகுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பிறகு ஒரு வார்த்தையைச் சொன்னார்கள். ஆனால்என்னால் அதை விளங்க முடிய வில்லை. எனவேஅது பற்றி நான் என் தந்தையிடம் கேட்டேன். அவர்கள் அனைவரும் குரைஷி வமிசத்தைச் சேர்ந்தவர்கள் என்று நபியவர்கள் கூறியதாக அறிவித்தார். (நூற்கள்: புகாரீமுஸ்லிம்)*1

மற்றோர் அறிவிப்பில், 12 கலீஃபாக்கள் வருகின்ற வரைஇவ்விசயம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். அவர்கள் அனைவரும் குரைஷி வமிசத்தைச் சேர்ந்தவர்கள்  என்று வந்துள்ளது. (நூல்: முஸ்லிம்)
அவர்களுள் உள்ளவர்கள்தாம் நான்கு  இமாம்களான அபூபக்ர்உமர்ஸ்மான் மற்றும் அலீ (ரளி-அன்ஹும்) ஆவர். அவர்களுள் உள்ள மற்றொருவர்உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) ஆவார். அப்பாஸ் (ரளி) அவர்களின் சந்ததிகளுள் சிலரும் அந்த 12 பேர்களுள் உள்ளோராவர். அவர்கள் 12 பேரும் வரிசையாக வருவார்கள் என்று பொருள் இல்லை. மாறாகஅவர்கள் வருவார்கள் என்பது மட்டும் உறுதி.

ஷீஆக்கள் நம்பிக்கைகொண்டுள்ள 12 இமாம்கள் இங்கு நோக்கமன்று. அவர்கள் அந்த 12 இமாம்களுள் முதலாவது இமாமாக அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்களைக் கூறுவார்கள். அவர்களுள் கடைசியானவர்சாமர்ரா (சுர்ர மர்ரஆ) நகரைச் சேர்ந்த பிஸ்ரிதாப் என்பவர் ஆவார். இவர் (வருவார் என) எதிர்பார்க்கப்படுகிறார். இவருடைய பெயர்அவர்கள் எண்ணுவதைப்போல்முஹம்மத் பின் அல்ஹசன் அல்அஸ்கரீ ஆகும். திண்ணமாக  இவர்கள் (ஷீஆக்கள்) கூறுகின்ற 12 நபர்களுள் அலீ (ரளி) அவர்கள் மற்றும் அவரின் மகனார் ஹசன்-இவ்விருவரைத் தவிர மற்றவர்களால் எவ்விதப் பெரும் பயனும் ஏற்படவில்லை.

அலீ (ரளி) அவர்கள் ஜனாதிபதி பொறுப்பேற்றுமக்களுக்குப் பெரும் சேவைசெய்தார்கள். ஹசன் (ரளி) அவர்கள் முஆவியா (ரளி) அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துபெரும் சண்டையைத் தவிர்த்துக்கொண்டார்குழப்பம் எனும் தீயை அணைத்தார்முஸ்லிம்களின் மத்தியில் போர் ஏற்படாமல் அமைதியாக்கினார். மற்றவர்கள்  பொதுமக்களுள் ஒருவராகவே கருதப்பட்டனர். சமுதாயத்தில் அவர்களுக்கு எந்த விசயத்திலும் ஆளுமையோ அதிகாரமோ இல்லை.  சாமர்ரா (சுர்ர மர்ரஆ) நகரைச் சேர்ந்த பிஸ்ரிதாப் என்பவர்எதிர்காலத்தில் வருவார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள விசயம் அவர்களின் குறுமதியையே காட்டுகிறது. அது ஓர் உளறலாகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

----------------அடிக்குறிப்பு------------------------

*1.(அ.கு) இந்த நபிமொழிக்குப் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்ற ஆட்சித் தலைவர்களாக 12 பேர் வருவார்கள்அவர்களுக்குப் பின் குழப்பம் தலை தூக்கும் என்று சிலர் விளக்கமளித்துள்ளார்கள். இதன்படி வலீத் பின் யஸீத் காலம்வரை இந்நிலை நீடித்தது என்றும்அவரது காலத்தில் குழப்பம் வெடித்து உமய்யா-அப்பாசிய்யா என்ற குழுப்பூசல் தலை தூக்கியது என்றும் கூறப்படுகிறது. வேறு சிலர்உமய்யா ஆட்சியாளர்களுள் முதலாவது நபரான யஸீத் பின் முஆவியாவுக்கும் இறுதியானவரான மர்வானுக்கும் இடையே 12 ஆட்சித் தலைவர்கள் இடம்பெற்றனர்பனூஉமய்யாக்களிடமிருந்து ஆட்சி மாறியபோது பயங்கரமான அரசியல் மோதல் ஏற்பட்டது என்று விளக்கமளித்துள்ளனர். வேறு பல விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.  (நூல்: ஃபத்ஹுல் பாரீ)

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.