வியாழன், 21 செப்டம்பர், 2017

சாத்தியமா? இது சாத்தியமா?



03 10 2017 அன்று நடைபெறவுள்ள  ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் தேர்தலை முன்னிட்டு, சுயேச்சை வேட்பாளர்களாகப் பலர் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தாராளமாக அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவற்றுள் பல சாத்தியமில்லாதவை. அதற்கான காரணம் உண்டு. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பில் இருக்கின்றார்கள். அவரவர்க்கு அவரவர் பொறுப்பு முக்கியமானது. இமாம், உஸ்தாத் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு அதைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. அதில்தான் அவர்களுடைய வாழ்வாதாரம் அமைந்துள்ளது. அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு பெரிய வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற முடியும்?

வாக்குறுதியை அள்ளி வீசுவது எளிது. அவற்றை நிறைவேற்ற முடியுமா என்பதை  அவர்களே யோசிக்க வேண்டாமா? நிச்சயமாக முடியாது. அவர்கள் தத்தம் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே   ஜமாஅத்துல் உலமா பொறுப்பை ஏற்கும் வரை இது இயலாது.

இதற்கான தீர்வு ஒன்று உண்டு. ஜமாஅத்துல் உலமா மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு  ஜமாஅத்துல் உலமா மாநிலத் தலைமையக அலுவலகமே சம்பளம் கொடுத்து அவர்களை முழுநேரச் சமுதாயத் தொண்டர்களாக ஆக்கினால்தான் அவர்கள் தம் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்ற முடியும்.

எனவே  ஜமாஅத்துல் உலமா தலைமைப் பொறுப்பு உள்ளிட்ட பிற பதவிகளுக்குப் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வெற்றிபெற்ற பின் தத்தம் பொறுப்பை இராஜினாமா செய்துவிடுவோம் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்வோர் மட்டுமே இத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால்தான்  ஜமாஅத்துல் உலமாவின் பொறுப்பாளர்கள் மக்களுக்குப் பயனுள்ள ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள முடியும். இல்லையேல் எவ்வளவு பெரிய தலைவராலும் ஜமாஅத்துல் உலமா வீரியமாகச் செயல்படச் சாத்தியமே இல்லை.

- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை.
 21 09 2017

கருத்துகள் இல்லை: