புதன், 19 நவம்பர், 2014

உரிமையைப் பறிக்காதீர்!


                        -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

"உங்களுள் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டுப்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: புகாரீ: 1905)

வாழும் உயிரினங்கள் யாவும் தமக்கென ஒரு துணையை ஏற்படுத்திக்கொண்டு இணை இணையாக வாழ்வதே இயற்கை அமைப்பாக இறைவன் அமைத்துள்ளான். ஒவ்வொன்றும் தத்தம் துணையை இயல்பாகத் தேடிக்கொள்கின்றன. ஆனால் மனித இனம் முறைப்படி, இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் இணைந்து இல்வாழ்வைத் தொடங்குவதையே இறைவன் விதியாக்கியுள்ளான். ஓர் ஆண் தன் மனவிருப்பப்படி தன் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முழு உரிமை இருப்பதைப்போல் பெண்ணுக்கும் அத்தகைய உரிமையை இஸ்லாம் தாராளமாக வழங்கியுள்ளது. ஓர் ஆணோ பெண்ணோ தன் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது வெளிப்படையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும். துணையைத் தேடிக்கொடுப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. அவர்கள் தம் பிள்ளைக்குத் தகுந்த துணையைத் தேர்ந்தெடுக்கும்போது தம் பிள்ளையின் நிறை-குறைகளை வெளிப்படையாகப் பெண்வீட்டாரிடம் தெரிவித்துவிட வேண்டும். அதுபோலவே பெண்வீட்டார் தம் பிள்ளையின் நிறை-குறைகளை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு, அதை மாப்பிள்ளை வீட்டார் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுவிட்டால் பின்னர் அவ்விருவரையும் இணைத்து வையுங்கள். அவ்வாறு இணைக்கப்படுகின்ற தம்பதிகள், தம் இதயங்கள் இணைந்த வாழ்க்கையைத் தொடர்வார்கள். இல்லையேல் அவ்விருவரும் மனக்கசப்புடனே வாழ நேரிடும்.

நம்முள் பலர், "ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து'' எனும் முட்டாள்தனமான பழமொழியை முதுகில் சுமந்துகொண்டு திருமணத்திற்கு வரன் தேடும் பணியில் குதிக்கின்றார்கள். "ஆயிரம் பேரிடம் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து'' என்பதுதான் உண்மையான பழமொழி. அதைப் பொய்யாகத் திரித்து, தன் இயல்புக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டான் மனிதன். பொய்யுரைத்து ஈரிதயங்கள் இணைக்கப்படுகின்ற திருமண வாழ்க்கை பொய்யுடனே தொடர்கிறது. அவர்களின் வாழ்நாளிலும் பொய் தொடர்ந்து பயணம் செய்கிறது. "ஆயிரம் பேரிடம் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து'' என்னும் உண்மையான பழமொழிக்கேற்பவே, "திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்'' (நூல்: முஸ்னது அஹ்மத்) எனும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாக்கு அமைந்துள்ளது.

பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய அவசியம் எந்த முஸ்லிமுக்கும் இல்லை.  "எவர் நம்மை ஏமாற்றினாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை''  (நூல்: முஸ்லிம்: 164) எனும் அண்ணல் நபியின் அமுத வாக்கு ஏமாற்றுவோரை எதிர்த்து நிற்கிறது. குறைபாடுகளை மறைத்து, "எல்லாம் திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும்'' எனும் ஒற்றை வாக்கியத்தினுள் மூடி மறைத்துச் செய்துவைக்கும் திருமணம் நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை என்பதை நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

பொறுமையைக் கைக்கொண்டு பதுமையாய் வாழ்கின்ற பெண்ணோ, மறுமையை மனதில்கொண்டு மனத்திட்பத்தோடு வாழ்கின்ற ஆணோ தற்காலத்தில் முற்றிலும் குறைவு என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். எனவே குறைகளை மறைத்துத்  திருமணத்தை நடத்தி வைக்க முன்வரும் பெற்றோர் சற்றுநேரம் நிதானமாகச் சிந்தியுங்கள்.

திருமணத்திற்கு ஏழ்மைகூட ஒரு தடையில்லை. ஆனால் தாம்பத்திய உறவுக்கான ஆற்றல் அவசியம் என்பதைப் பின்வரும் நபிமொழி, இறைவசனம் ஆகியவை மூலம் அறிந்துகொள்ளலாம்.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஅதீ (ரளி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த மக்களிடையே இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி (வந்து) நின்று, "என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக (-மஹ்ரின்றி மணமுடித்துக் கொள்வதற்காக-) வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு மீண்டும் எழுந்து நின்று, "என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!'' என்று சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்குப் பதிலேதும் சொல்லவில்லை. மூன்றாவது முறையாக அப்பெண்மணி எழுந்து, "என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்'' என்றுரைத்தார்.

அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(இவருக்கு மஹ்ராகக் கொடுக்க) உம்மிடம் ஏதேனும் பொருள் உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இல்லை'' என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், "நீர் சென்று, (இவருக்கு மஹ்ராகச் செலுத்த) இரும்பாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக'' என்று சொன்னார்கள். அவர் போய்த் தேடிவிட்டு பிறகு (திரும்பி) வந்து, "ஏதும் கிடைக்கவில்லை. இரும்பாலான மோதிரம்கூடக் கிடைக்கவில்லை'' என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அதற்கவர், "ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் (மனப்பாடமாக) உள்ளது'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன், நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள்.  (நூல்: புகாரீ: 5149)

ஏதுமற்ற ஏழைக்கு ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு திருமணம் செய்து வைக்கலாம்? அவர் எப்படி அப்பெண்ணுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை வழங்குவார்? என்றெல்லாம் வினாக்கள் தொடுக்கலாம். அவர் ஏதுமற்ற ஏழையாக இருப்பினும், திருமண உறவுக்கேற்ற ஆரோக்கியமான உடல்வளம் இருந்தது; திருமண ஆசை இருந்தது. எனவே நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அப்பெண்ணை மணமுடித்து வைத்தார்கள்.

ஒருவர் ஏதுமற்ற ஏழையாக இருந்தாலும் அவர் மணமுடிப்பதன் மூலம் அல்லாஹ் தன் அளப்பரிய அருளால் அவரைச் செல்வராக ஆக்குவான். அது குறித்து இறைமறைக் குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனத்தைப் பாருங்கள்.  (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (24: 32)

ஏதுமற்ற ஏழையாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; தவறில்லை. அவர் தம் கடுமையான உழைப்பால் தம் மனைவியையும் அவள் ஈன்றெடுக்கும் பிள்ளைகளையும் கண்ணெனக் காப்பான்; சந்தேகமில்லை. ஆனால் தாம்பத்திய உறவுக்குத் தகுதியற்றவனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்து வைத்து, வாழ்நாள் முழுவதும் அப்பெண்ணை மனப்புழுக்கத்தோடு வாழவைப்பது எவ்வகையில் நியாயம்? ஒரு பெண்ணின் இல்லற உறவின் உரிமையை மற்றொருவன் பறிக்கலாகுமா? இதற்குப் பெற்றோரும் உடந்தையாகலாமா?

ஆண்மையற்ற தன்மை, கடுநோய் உள்ளிட்டவற்றை மூடி மறைத்துச் செய்து வைக்கப்படும் திருமணங்கள் நெடுநாள் நீடிப்பதில்லை. இதுபோன்ற நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் அதைத் தெளிவாகப் பறைசாற்றிவிட வேண்டும். அதுவே இருவீட்டாருக்கும் அவர்கள்தம் உறவினர்களுக்கும் நல்லது. இன்றைக்கு ஆண்களின் உணவுப் பழக்கம், புகைப்பழக்கம், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பழக்கம், குடிப்பழக்கம் உள்ளிட்டவை அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. எனவே இளமையிலேயே இவைபோன்ற பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள் திருமண வாழ்க்கையை மறந்துவிட வேண்டியதுதான். இல்லையேல் இவைபோன்ற தீய பழக்கங்களுக்கு ஆட்படாமல் இருக்க வேண்டும். ஆட்பட்டவர்கள் உடனடியாக அவற்றைக் கைவிட்டுவிட வேண்டும். மறுப்பவர்கள் திருமணம் செய்யாமலேயே இருந்துவிட வேண்டும்.

இன்றைக்குத் திருமணத்திற்கு முன்பே, மருத்துவச் சான்றிதழை ஆணும் பெண்ணும் சமர்ப்பிக்க வேண்டும் எனும் கருத்து அரசாங்க ஆலோசனையில் இருந்து வருகிறது. அதைக் கட்டாயமாக்கலாமா, வேண்டாமா என்பது விவாதத்தில் உள்ளது. ஆனால் இஸ்லாம் அதற்குத் தீர்வாக உள்ளது. "எவர் நம்மை ஏமாற்றினாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை''  (நூல்: முஸ்லிம்: 164) எனும் அண்ணல் நபியின் அமுத வாக்கு ஏமாற்றுவோரை எதிர்த்து நின்று, மருத்துவச் சான்றிதழுக்கும் வகை செய்கிறது. பொய்யுரைத்தும் சான்றிதழ்கள் வாங்கிவிடலாம். ஆனால் அவர் அல்லாஹ்விடம் மாட்டிக்கொள்வார் என்பதை நினைவில் கொள்ளட்டும். ஆகவே தற்கால இளைஞர்கள் தம் பழக்க வழக்கங்களைச் சீராக்கிக்கொண்டு, ஆரோக்கியமான உடல்வளத்தைப் பெறுவதற்கு ஆவன செய்து, திருமணத்திற்குத் தயாராகட்டும்!
====================




சனி, 8 நவம்பர், 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர்-17)


                                                               
                                                (தடுக்கப்பட்ட மூன்று செயல்கள்)

                        மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

ஒரு கூட்டத்தினருக்குத் தலைமை தாங்கி தொழுகை நடத்தும்போது அவர்களை விட்டுவிட்டுத் தமக்காக மட்டும் பிரார்த்தனை செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்களுக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டார். (வீட்டின் உள்ளே நுழைய) அனுமதி பெறுவதற்கு முன்பு வீட்டின் உட்பகுதிகளை அவர் பார்க்கக் கூடாது.  அவ்வாறு அவர் பார்த்துவிட்டால் (அனுமதி பெறாமலேயே வீட்டில்) நுழைந்தவராவார். மலலத்தை அடக்கிக்கொண்டு சிரமத்துடன் தொழக்கூடாது. ஆக இம்மூன்று காரியங்களும் செய்ய உங்களுள் யாருக்கும் அனுமதி இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (நூல்கள்: அபூதாவூத்: 83, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மது)

ஒரு குழுவினருக்குத் தலைமையேற்றுத் தொழுகை நடத்தும்போது அந்த இமாம் பொதுநலன் கருதிப் பிரார்த்தனை செய்தல், ஏதேனும் வீட்டினுள் நுழைவதற்குமுன் அவ்வீட்டாரிடம் அனுமதி கோருதல், சிறுநீர், மலம் ஆகியவற்றை அடக்கிக்கொண்டு தொழுகாதிருத்தல் ஆகிய மூன்று கருத்துகள் இங்கே கூறப்பட்டுள்ளன. இம்மூன்றினுள் கடைசி இரண்டை ஏற்றுக்கொள்ளும் அறிஞர்களுள் சிலர் முதலாம் விசயத்தை ஏற்க மறுக்கின்றனர். அதனால் இந்த நபிமொழியே பலவீனமானது என ஒதுக்கிவிடுகின்றனர் சிலர். காரணம் மேற்கண்ட ஹதீஸில் உள்ள முதலாம் கருத்து நபிகளாரின் செயல்பாடுகளுக்கு முரணாகத் தெரிகிறதே என்பது அவர்களின் எண்ணம். ஆனால் அந்தக் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை மற்றொரு நபிமொழியின் மூலம் நாம் அறியலாம்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவித்துள்ள பின்வரும் நபிமொழி மேற்கண்ட நபிமொழிக்கு ஆதாரமாக உள்ளது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தபோது "அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வஃபுலான்' (அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு சலாம் உண்டாகட்டும்) என்று கூறிக்கொண்டிருந்தோம். (இதனை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சலாம் உண்டாகட்டும்' என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ்தான் "சலாம்' ஆக இருக்கிறான். மாறாக, "அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்'' எனக் கூறுங்கள்.
இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். (பின்னர்) "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு'' என்றும் கூறுங்கள். இதன் பிறகு உங்களுக்குப் பிடித்தமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 835)

இந்த ஹதீஸில் வந்துள்ள, "உங்களுக்குப் பிடித்தமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து வேண்டிக்கொள்ளுங்கள்'' எனும் கடைசி வாக்கியம் மிகுந்த கவனத்திற்குரியது. அதாவது அத்தஹிய்யாத்து ஓதி முடித்தபின், ஒவ்வொருவரும் தத்தம் விருப்பம்போல் பல்வேறு துஆக்களை வேண்டலாம். அதில், என்னை நரகத்தைவிட்டுக் காப்பாற்று, என் பாவங்களை மன்னித்துவிடு, என் கல்வியைப் பெருகச் செய் என்பன போன்ற துஆக்கள் இருக்கலாம். ஆனால் இவ்வாறு ஓர் இமாம் ஓதுகின்றபோது அவர் தமக்காக மட்டும் ஒருமையில் கேட்காமல், தம்மைப் பின்பற்றித் தொழுகின்ற அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும். எனவே, எங்களை நரகத்தைவிட்டுக் காப்பாற்று, எங்கள் பாவங்களை மன்னித்துவிடு என்று பன்மையாகக் கேட்க வேண்டும் என்பதையே முதலாம் ஹதீஸில் உள்ள முதல் கருத்து சுட்டிக்காட்டுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக, நாம் தொழுகையில் அத்தஹிய்யாத்து, தரூதே இப்ராஹீம், துஆ ஆகியவற்றை ஓதுகின்றோம். அத்தஹிய்யாத்து, தரூதே இப்ராஹீம் ஆகிய இரண்டும் ஹதீஸ்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டவை. ஆனால் துஆ என்னும் இடத்தில் குறிப்பிட்ட துஆவை மட்டும் ஓதாமல் குர்ஆன், ஹதீஸில் வருகின்ற பல்வேறு துஆக்களை நாம் ஓதலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பதிவுசெய்யப்பட்ட ஒரு கருவியைப் போன்று நாம் நம் தொழுகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். குழுவாகத் தொழுகின்றபோது இமாம் தாம் விரும்புகின்ற துஆவைத் தம்மைப் பின்பற்றித் தொழுவோருக்கும் சேர்த்துப் பன்மையாகக் கேட்க வேண்டும். அந்நேரத்தில் பின்னால் உள்ளவர்கள், இமாம் சலாம் கொடுத்துத் தொழுகையை முடிக்கின்ற வரை, தமக்குத் தெரிந்த துஆக்களை ஓதிக்கொண்டிருக்க வேண்டும். அது முடிந்தபின், அவரவர் தொழுகின்ற உபரித்தொழுகைகளில் அத்தஹிய்யாத்து இருப்பில் இருந்துகொண்டு அத்தஹிய்யாத்து, தரூதே இப்ராஹீம் ஆகிய இரண்டையும் ஓதி முடித்தபின் தாம் விரும்பிய துஆக்களை, தமக்குத் தெரிந்த துஆக்களை ஓத வேண்டும். ஒரே ஒரு துஆதான் ஓத வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அதை மட்டும் எந்தவித உயிரோட்டமுமின்றி, மனனமாக ஓதி முடித்துவிட்டு, உடனடியாக சலாம் கொடுத்துத் தொழுகையை முடித்துவிட்டு ஓடுவதில் கவனம் செலுத்தக்கூடாது. மாறாக, அந்த அத்தஹிய்யாத்து இருப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது துஆ அங்கீகரிக்கப்படுகின்ற இடமும் நேரமும் ஆகும். 

இரண்டாவது, பிறரின் வீட்டினுள் நுழைய அனுமதி பெறுவதற்கு முன்பு வீட்டின் உட்பகுதிகளைப் பார்க்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கின்றார்கள். அவ்வாறு அவர் பார்த்துவிட்டால் அனுமதி பெறாமலேயே வீட்டினுள் நுழைந்தவராவார் என்று எச்சரிக்கின்றார்கள். பொதுவாக ஒரு வீட்டிற்குச் சென்று, அங்குள்ளோருக்கு சலாம் கூறி, அங்குள்ளோர் பதிலளித்து அனுமதி கொடுத்தால்தான் அவ்வீட்டிற்குள் நுழையலாம். இல்லையேல் திரும்பி வந்துவிட வேண்டும் என்பது இஸ்லாமிய மரபாகும். அந்த அடிப்படையில் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள கருத்து நமக்குத் தெளிவாகவே விளங்குகின்றது.  

மூன்றாவதாக, மலலத்தை அடக்கிக்கொண்டு சிரமத்துடன் தொழக்கூடாது  என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கின்றார்கள். காரணம் தொழுகை என்பது மனஓர்மையோடு செய்யப்படுகின்ற ஒரு வழிபாடு. அத்தகைய வழிபாட்டை மேற்கொள்கின்றபோது உடலும் உள்ளமும் இயல்பாக இருந்தால்தான் ஒருவர் தாம் ஈடுபடுகின்ற அந்த வழிபாட்டைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். மாறாக, படபடப்பும் பதற்றமும் இருக்கும் நிலையில் ஒருவர் எவ்வாறு தம்  தொழுகையில் மனஓர்மையோடு ஈடுபட முடியும்? எவ்வாறு மனமுருகி இறைவனிடம் வேண்ட முடியும்? ஒருவருக்குச் சிறுநீரோ, மலமோ முட்டிக்கொண்டு வெளியேற இருக்கும் நிலையில் அவற்றை அடக்கிக்கொண்டு அவர் எவ்வாறு மன ஓர்மையோடு தொழ முடியும்? எப்போது இமாம் தொழுகையை முடிப்பார், நாம் கழிவறை செல்லலாம் என்ற சிந்தனைதானே தொழுகை முழுக்க நீடிக்கும்? எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடைசெய்தார்கள். ஆக, நபி (ஸல்) அவர்கள் தடை செய்த இம்மூன்று செயல்பாடுகளையும் விட்டு நாம் நீங்கிட இறைவனிடம் இறைஞ்சுவோம்.
                                                                                                      -இன்ஷா அல்லாஹ் தொடரும்