சனி, 24 ஆகஸ்ட், 2013

93 wazzhuhaa

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இறைவழி மருத்துவம்



வழங்குபவர்

டாக்டர் ஆர். கனக சபாபதி

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் அதைக் கொடுப்பதும் அதை எடுப்பதும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. அதை விட்டுவிட்டு, ஒரு நோய் வந்துவிட்டால் மனிதன் சூட்டியுள்ள பெயரைக் கேட்டே பயந்துபோய் அந்நோய் தீராது என்று தன் மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்கிறான். அதனால்தான் அவனுடைய நோய் தீருவதே இல்லை. சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட எத்தனையோ நோய்கள் தீராத நோய்களாக இருக்கக் காரணம் மனிதனின் எண்ணமே. எனவே எந்நோய் வந்தாலும், இது குணமளிக்கப்படக்கூடியதுதான் என்றே எண்ண வேண்டும். மாறாக, இது தீராத நோய் என்று எண்ணினால் அவனுடைய எண்ணப்படியே அது நடைபெறும்.

எண்ணம்போல் வாழ்வு என்று தமிழ்மொழி கூறுகிறது. செயல்கள் யாவும் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டவையே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே நம் எண்ணத்தை உயர்ந்த எண்ணமாக ஆக்கிக்கொள்வோம்.  அல்லாஹ்வின் அருளால் ஆரோக்கியமாக வாழ்வோம்.

இறைவழி மருத்துவம்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

இனிய திசைகள் மாத இதழ் ஆகஸ்ட் 2013

இனிய திசைகள் மாத இதழ் ஆகஸ்ட் 2013

என்னுடைய ஆதார் அட்டை


இறைவனின் படைப்புத் திட்டம்


உர்தூ: மௌலானா வஹீதுத்தீன் கான்
தமிழாக்கம்: மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி (பிஎச்.டி)

மேற்கத்தியத் தத்துவஞானி ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “இந்த விசாலமான படைப்பினத்தில் மனிதன் ஒரு தனிப்படைப்பு என்று தோன்றுகிறது. மனிதன் இந்த உலகத்திற்காகப் படைக்கப்படவில்லை. இந்த உலகமும் இந்த மனிதனுக்காகப் படைக்கப்படவில்லை என்று உணர முடிகிறது. மனிதனும் இவ்வுலகிலுள்ள படைப்பினங்களும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாகவே தெரிகிறது. மனிதன் வரையறையற்ற திறமைகளோடு படைக்கப்பட்டுள்ளான். ஆனால் அவனோ இவ்வுலகில் தன்னுடைய குறிப்பிட்ட திறமைகளை மட்டுமே பயன்படுத்துகின்றான். மனிதன் தன் இயல்புக்கேற்ப நிரந்தரமாக இவ்வுலகில் வாழ நினைக்கிறான். ஆனால் மரணமோ அவனைக் கேட்காமலேயே மிகத் துரிதமாக வந்து, ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்புசெய்து அவனுக்கு முடிவுரை எழுதிவிடுகிறது. மனிதன் கடலளவு விருப்பங்களைத் தன் மனதினுள் சுமந்திருக்கின்றான். ஆனால் அவனுடைய இந்த விருப்பங்களெல்லாம் எப்போதும் நிறைவேறுவதே இல்லை. ஒவ்வொரு மனிதனின் மூளைக்குள்ளும் கனவுகளின் உலகம் படர்ந்திருக்கிறது. ஆனால் அந்தக் கனவுகளுக்கான விளக்கம் பெறப்படுவதே இல்லை. இதில் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லை. ”

மேற்கண்ட தத்துவஞானியின் கூற்றிலிருந்து, மனிதன் தனக்கெனப் படைக்கப்படாத உலகத்திற்கு வந்திருக்கிறான் என்பதை உணரமுடிகிறது. மனிதனுக்கும் இவ்வுலகத்திற்கும் இத்தகைய முரண்பாடு ஏன்? இதற்கான விடையைத் தேட, நாம் இறைவனின் படைப்புத் திட்டத்தைச் சற்று உற்றுநோக்க வேண்டும். இவ்வினா தோன்றியதற்கான அடிப்படையே இறைவனின் படைப்புத் திட்டத்தை அறியாமல் போனதால்தான். மேலும் இறைவனின் படைப்புத் திட்டத்தை நன்றாக விளங்கினால்தான் இதற்கான விடையை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

இறைவன் மனிதனை ஒரு முக்கிய நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். அந்த முக்கிய நோக்கத்தை அறிவது மனிதனுக்கு அவசியமாகும். அதாவது, ஓர் இயந்திரத்தின் முழுமையான இயக்கம் அதை உண்டாக்கிய பொறியாளரின் நோக்கத்தை முழுமையாக அறியும்போதுதான் தெரியவரும். அதை உருவாக்கிய அந்தப் பொறியாளரைத் தவிர வேறு எவரும் அந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை முழுமையாக விளக்கிக் கூறமுடியாது. அதைப்போலவே மனிதனைப் படைத்த இறைவனின் நோக்கத்தை முழுமையாக அறியாமல் மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. இதுதான் அடிப்படையாகும்.

மனிதனைப் படைத்த இறைவன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அவனைப் படைத்துள்ளான். அந்த நோக்கம் இதுதான்: அதாவது தற்போது இருக்கின்ற நிலையற்ற உலகில்  மனிதன் ஒரு குறிப்பிட்ட காலஅளவுதான் வாழ்வான். அதற்குப்பிறகு அவன் தன்னுடைய செயல்பாடுகளுக்கேற்ப நிலையான உலகில் வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறுகிறான். அதற்குப் பெயர்தான் சொர்க்கம்.

தற்போது காணப்படுகின்ற உலகம் ஒரு சோதனைக்கூடம் ஆகும். இங்கு எந்தப் பெண்ணும் அல்லது எந்த ஆணும் சொர்க்கத்திற்குத் தகுதிபெற இரண்டு முக்கிய விசயங்கள் உள்ளன. அவை: 1. உண்மையை ஏற்றுக்கொள்ளுதல், 2. ஒழுக்கமாக வாழ்தல். எந்த ஆண் அல்லது பெண் இந்தச் சோதனையில் முழுமையாக இறங்கி வெற்றிபெற்றாரோ அவருக்கு நிலையான உலகிலுள்ள சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். எவர் இந்தச் சோதனையில் தோற்றுப்போகின்றாரோ அவர் என்றென்றும் நரகத்தில் கிடப்பார்.

நிகழ் உலகில் மனிதன் தனக்குத்தானே முழுமையான விடுதலையைப் பெற்று வாழ்கிறான். ஆனால் இது உண்மையான விடுதலை இல்லை. மாறாக, இது ஒவ்வொருவருக்கும் சோதனைக்கான ஒரு தேர்வுக்கூடம் ஆகும். அதில் அவன் எவ்விதத் தூண்டுதலும் இன்றி உண்மையை (உண்மையான இறைவனை) ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த நிர்ப்பந்தமுமின்றி  உண்மைக்குமுன் அவன் தலைகுனிய வேண்டும். அவன் தன் விடுதலை மூலம் தன் சுய விருப்பத்தால் அந்த உண்மையைப் பின்பற்றச் செய்ய வேண்டும். உண்மைக்குமுன் தலைகுனிவது திண்ணமாக எந்த மனிதனுக்கும் மிகப்பெரும் தியாகம்தான். உண்மையை ஏற்றுக்கொள்வதன் இன்னொரு கோணம் என்னவெனில், அவன் தன்னை மற்றவருக்குமுன் சிறியவனாக ஆக்கிக்கொள்வதாகும். எனினும் அதுதான் அந்த மனிதனை மிகப்பெரும் உயர்வுக்கு இட்டுச் செல்லக்கூடியதாகும். அதுதான் அவனைச் சொர்க்கத்தின் வாசல்வரை அடையச் செய்யக்கூடியதாகும்.

இந்த அடிப்படையின் மற்றோர் அங்கம்தான் ஒழுக்கமான வாழ்க்கை ஆகும். மனிதனுடைய பண்பு இதன் அடிப்படையில்தான் உருவாகிறது. கோபம், பழிவாங்குதல், பொறாமை, வெறுப்பு, சுயநலம் ஆகியவை அவனுள் உள்ளவை. இவை அவனுடைய எதிர்மறையான பண்புகள் ஆகும். இவை ஒரு மனிதனுக்குள் இருந்துகொண்டு அவனுடைய தோற்றத்தை வெளிக்காட்டுகின்றன. எனினும்  மனிதன் இவற்றில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அவன் தன்னுடைய வெளிப்படையான அசைவுகளின்மூலம் தன்னுடைய பண்பை உண்டாக்கிக்கொள்ளாமல், சுய ஒழுக்கத்தின் மூலம் தன் பண்புகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அவன் தனக்குத்தானே முடிவுசெய்து தன் தோற்றத்தை ஓர் உயர்ந்த ஒழுங்கமைப்பில் வடிவமைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் சொர்க்கத்திற்கான பண்பு என்று கூறப்படுகிறது.

படைப்பின் முக்கிய நோக்கம் எதற்காக மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதில்தான் உள்ளது. மனிதன் இவ்வுலகிலுள்ள எல்லாப் படைப்பினங்களையும்விட மிக உயர்ந்த படைப்பு ஆவான். மனிதனுடைய தோற்றமே ஓர் அற்புதமான தோற்றமாகும். அவனுக்கு இணையான படைப்பு இப்பரந்த வையகத்தில் எங்கும் காணப்படாது. பொதுவாக மனிதனை மிக உயர்ந்த படைப்பு என்று கூறுவது வழக்கம். அதாவது அவன் உலகிலுள்ள எல்லாப் படைப்பிலும் மிகச் சிறந்த, ஓர் அர்த்தமுள்ள படைப்பினம் ஆவான்.

சொர்க்கம் என்பது மனிதன் எங்கு தனக்குரிய முழுமையான வாழ்விடத்தைப் பெறமுடியுமோ அத்தகைய இடமாகும். மனிதன் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று கருதினானோ அவ்வாறு சிந்திக்கின்ற இடமாகும். எந்தெந்தப் பொருள்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைகொண்டானோ அந்தப் பொருள்களையெல்லாம் காணுமிடமாகும். எந்தெந்த ஓசைகளெல்லாம் அவனுக்கு இனிமை தருமோ அத்தகைய ஓசைகளையெல்லாம் கேட்டு இன்புறும் இடமாகும். எதையெல்லாம் தொட்டு இன்புற நினைத்தானோ அவற்றையெல்லாம் தொட்டு இன்புறும் இடமாகும். எத்தகைய மனிதர்களோடு தோழமை கொண்டு வாழ்வின் எல்லைவரை அர்த்தமுள்ளதாக ஆக்க விரும்பினானோ அத்தகைய மனிதர்களின் தோழமையைப் பெறும் இடமாகும். எத்தகைய காற்று அவனைத் தாலாட்டி, இனிமையான தூக்கத்தைக் கொடுக்குமோ அத்தகைய தென்றல் காற்று வீசுகின்ற இடமாகும். எப்பொருள்களை அவன் சாப்பிட்டால் என்றென்றும் சாப்பிடத் தூண்டுமோ அத்தகைய சுவைமிகு உணவுகள் கிடைக்குமிடம். எத்தகைய பானங்களை அவன் அருந்த விரும்பி, தன் கற்பனையில் மட்டும் உருவகப்படுத்தி வைத்திருந்தானோ அத்தகைய அருஞ்சுவை மிக்க பானங்கள் கிடைக்குமிடம்.

இந்த நிலையான உலகத்திற்குப் பெயர்தான் சொர்க்கமாகும். எந்தச் சொர்க்கத்தை அடைய வேண்டுமென்ற ஆசை ஒவ்வோர் ஆண்- பெண் உள்ளத்திலும் பரவியிருக்கிறதோ அத்தகைய சொர்க்கம் இதுதான். எங்கு மனிதனின் ஆளுமை முழுமையான விதத்தில் நிறைவேற்றப்படுமோ அத்தகைய சொர்க்கம் இதுதான். மனிதன் தன்னுடைய முழுமையான உருவத்தோடும் வடிவத்தோடும் அந்தச் சொர்க்கத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கிறான். சொர்க்கமும் தன்னுடைய முழுமையான தோற்றத்தோடு இத்தகைய மனிதனைத்தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. மனிதனும் சொர்க்கமும் ஒருவரையொருவர் சந்திக்கக்கூடிய நாள் அதிவிரைவில் வரப்போகிறது. அப்போது மனிதனும் சொர்க்கமும் தமக்காவே படைக்கப்பட்ட உரிய இணையை-ஜோடியைப் பெற்றுக்கொண்டதை உணர்வர்.

Nandri: Iniya Thisaigal Monthly-August 2013
==================