ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 8)

பல்லியைக் கொல்லுங்கள்!

நபி (ஸல்) அவர்கள், பல்லியைக் கொல்ல ஏவினார்கள்; ஏனென்றால், அது இப்ராஹீம் நபி (நெருப்பினுள் இருந்தபோது நன்றாக எரிவதற்காக நெருப்பின்) மீது ஊதியது என்று கூறியதாக உம்மு ஷரீக் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)1

பல்லியைக் கொல்லுங்கள். ஏனென்றால், அது இப்ராஹீம் நபி (நெருப்பினுள் இருந்தபோது நன்றாக எரிவதற்காக நெருப்பின்) மீது ஊதியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்) எனவே, ஆயிஷா (ரளி) அவர்கள் அதைக் கொன்றுவந்தார்கள் என்று இப்னு உமர் (ரளி) மூலம் விடுதலை பெற்ற நாஃபிஹ் (ரளி) கூறியுள்ளார்கள்.

ஒரு பெண் ஆயிஷா (ரளி) அவர்களின் வீட்டினுள் நுழைந்தார். அவர்களின் வீட்டில் ஓர் ஈட்டி மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட அப்பெண், இந்த ஈட்டி எதற்காக? என்று வினவினார். நாங்கள் பல்லியைக் கொல்வோம் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் கூறிய விசயத்தைக் கூறினார்கள்: திண்ணமாக இப்ராஹீம் நபி நெருப்பினுள் போடப்பட்டிருந்தபோது, உயிரினங்கள் யாவும் அதை அணைக்க முற்பட்டன. ஆனால், பல்லி மட்டும் அவர் மீது (நெருப்பு நன்றாகப் பற்றி எரிவதற்காக) அதை ஊதத் தொடங்கியது என ஆயிஷா (ரளி) கூறியதாக நாஃபிஹ் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)2

ஃபாகிஹ் பின் அல்முஹீரா (ரளி) அவர்களின் மூலம் விடுதலை பெற்ற சாயிபா எனும் பெண்மணி (ரளி) அறிவித்துள்ளார்கள்: நான் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தேன். அவரின் வீட்டில் ஓர் ஈட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். முஃமின்களின் அன்னையே! இந்த ஈட்டியை வைத்து என்ன செய்வீர்கள்? என்று வினவினேன். இது இந்தப் பல்லிகளுக்காக (நாங்கள் வைத்திருக்கிறோம்). இதன் மூலம் அவற்றை நாங்கள் கொல்வோம் என்று பதிலளித்தார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் கூறிய விசயத்தைக் கூறினார்கள். திண்ணமாக இப்ராஹீம் நபி நெருப்புக்குள் போடப்பட்டபோது நிலத்திலிருந்த எந்த உயிரினமும் அந்த நெருப்பை அணைக்காமல் இல்லை. ஆனால், பல்லி மட்டும் அவருக்கு (நன்றாக நெருப்பு எரிவதற்காக) ஊதத்தொடங்கியது. எனவேதான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கொல்ல ஏவினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)*3

இப்ராஹீம் நபியின் விவாதம்

* அல்லாஹ் தனக்கு ஆட்சியைக் கொடுத்துவிட்டான் என்பதற்காக (ஆணவங்கொண்டு) இப்ராஹீமிடம், அவருடைய இறைவன் குறித்து எதிர்வாதம் செய்தவனை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? என்னுடைய இறைவன் உயிர் கொடுப்பான்; இறக்கச் செய்வான் என்று கூறியபோது, நானும் உயிர்கொடுப்பேன்; இறக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். (அதற்கு) இப்ராஹீம், அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; (முடிந்தால்) நீ அதை மேற்கில் உதிக்கச் செய் (பார்க்கலாம்) என்று கூறினார். அப்போது (அல்லாஹ்வை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நல்வழி காட்டமாட்டான். (2: 258)

பிடிவாதமான, வரம்புமீறிய, அநியாயக்கார அரசனுடன் இப்ராஹீம் நபி செய்த விவாதத்தை அல்லாஹ் கூறுகின்றான். அவன், தன்னைத் தானே கடவுள் என்று வாதிட்டான். ஆனால், அவன் கூறிய கூற்றை இப்ராஹீம் நபியவர்கள் ஒரு பலமான ஆதாரத்தின் மூலம் உடைத்தெறிந்தார். மேலும், அவனுடைய அதீத அறியாமையையும் குறைவான அறிவையும் அவர் அவனுக்கு விளக்கினார். அவனுடைய ஆதாரத்தை உடைத்தெறிந்தார். ஆதாரம் காண்பிக்கின்ற வழிமுறையை அவனுக்கு விளக்கினார்.

திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் வரலாறு மற்றும் வமிசம் பற்றிய ஆய்வாளர்களும் கூறியுள்ளதாவது: அவன் பாபிலோன் நகரத்தின் அரசனாவான். அவனுடைய பெயர், நும்ரூத் பின் கன்ஆன் பின் கூஷ் பின் சாம் பின் நூஹ் ஆகும். இதை முஜாஹித் (ரஹ்) கூறியுள்ளார். நும்ரூத் பின் ஃபாலஹ் பின் ஆபிர் பின் ஸாலிஹ் பின் அர்ஃபக்ஷத் பின் சாம் பின் நூஹ் என்பதாகும் என்று மற்றோர் கூறியுள்ளனர். முஜாஹித் (ரஹ்) அவர்களும் மற்றோரும் கூறியுள்ளதாவது: அவன் உலகம் முழுமைக்கும் அரசனாக இருந்தவர்களுள் ஒருவனாவான். அவன் உலகம் முழுவதையும் ஆட்சி செய்தான். அவ்வாறு ஆட்சி செய்தவர்கள் நால்வர் ஆவர். அவர்களுள் இருவர் இறைநம்பிக்கையாளர்கள்; வேறு இருவர் இறைமறுப்பாளர்கள் ஆவர். இறைநம்பிக்கையாளர்களான இருவர், துல்கர்னைன் மற்றும் சுலைமான் (அலை) ஆவர். இறைமறுப்பாளர்களான இருவர், நும்ரூத் மற்றும் புஃக்த்துநஸ்ஸர் ஆவர்.

நும்ரூத் என்பவன் நானூறு ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வந்தான். அவன் மிகவும் வரம்பு மீறினான்; அடக்கி ஆண்டான்; அநியாயம் செய்தான்; இவ்வுலக வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக்கொண்டான்.

நும்ரூதின் கர்வம்

இப்ராஹீம் நபி, இணையில்லாத, தனித்தவனான அல்லாஹ் ஒருவனையே வழிபட வேண்டும் என்று அவனை அழைத்தார். ஆனால், அவனுடைய அறியாமையும், வழிகேடும், நீண்ட ஆசையும் அவனைத் தன் படைப்பாளனையே மறுக்கச் செய்தன. அது குறித்து இப்ராஹீம் நபி அவனுடன் தர்க்கம் செய்தார். அவனோ, தானே இறைவன் என்று வாதிட்டான். அப்போது இப்ராஹீம், என்னுடைய இறைவன் உயிர் கொடுப்பான்; இறக்கச் செய்வான் என்று கூறியபோது, நானும் உயிர்கொடுப்பேன்; இறக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். (2: 258)

கத்தாதா, சுத்தீ மற்றும் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்-அலைஹிம்) ஆகியோர் கூறியுள்ளனர்: இரண்டு நபர்கள் அவன் முன்னிலையில் கொண்டுவரப்பட்டார்கள். அவ்விருவருக்கும் மரண தண்டனை உறுதியாகிவிட்டது. அப்போது, அவன் அவ்விருவருள் ஒருவனைக் கொலைசெய்யுமாறும் மற்றொருவனை மன்னித்து விட்டுவிடுமாறும் ஏவினான். (அதாவது ) அவ்விருவருள் ஒருவனுக்கு அவன் உயிர்கொடுத்ததைப் போன்றும் மற்றொருவனை மரணிக்கச் செய்ததைப் போன்றும் அவன் கருதினான். ஆனால், இது விவாதம் செய்வதற்கேற்ற முறை இல்லை. மாறாக, இது விவாதம் செய்கின்ற முறைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது; இதில் எதிராளியின் விவாதத்தை எதிர்கொள்கின்ற எந்த வழிமுறையும் பின்பற்றப்படவில்லை; அவனது இத்தகைய செயல்பாடு எந்த விவாத முறையிலும் இல்லை; ஆகவே, இது விதண்டாவாதமே ஆகும்.

உண்மையில் இது விவாதத்தை முறிப்பதாகும்; உயிரினங்களை உயிர்ப்பித்தல் மற்றும் அவற்றை மரணிக்கச் செய்தல் இவை நேரடியாக நிகழ்வதின் மூலம் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்ற ஆதாரத்தை இப்ராஹீம் நபி எடுத்துக் கொண்டார். மேலும், அதைச் செய்பவன் ஒருவன் கண்டிப்பாக இருக்கிறான் என்பதையும், அவன் இல்லாமல் அது தானாகவே இயங்க முடியாது என்பதையும், படைத்தல் மற்றும் அதைக் கட்டுப்படுத்துதல் போன்ற நேரடியாக நிகழக்கூடிய செயல்களுக்கு திண்ணமாக ஒரு படைப்பாளன் வேண்டும் என்ற அவசியத்தையும், விண்மீன்கள், காற்று, மேகம் மற்றும் மழை போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல், கண்கூடாகக் காணப்படுகின்ற உயிரினங்களைப் படைத்தல் பின்னர் அவற்றை மரணிக்கச் செய்தல் இவை அனைத்தையும் செய்யக்கூடிய படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் இப்ராஹீம் நபி உணர்ந்து, இவற்றையே அவர், இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக எடுத்துவைத்தார்.

இதனால்தான் இப்ராஹீம் நபி கூறினார்: என்னுடைய இறைவன் உயிர் கொடுப்பான்; இறக்கச் செய்வான். (2: 258) அதன்பின் அந்த அறிவற்ற அரசன் கூறினான்: நானும் உயிர் கொடுப்பேன்; இறக்கச் செய்வேன். (2: 258) அவன் கூற்றுப்படி, நேரடியாகக் கண்ட இந்த நிகழ்வுகளைச் செய்யக்கூடியவன் நான்தான் என்று அவன் நாடியிருந்தால், அவன் கர்வமும் பிடிவாதமும் கொண்டுவிட்டான். அல்லது கத்தாதா, சுத்தீ மற்றும் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்-அலைஹிம்) ஆகியோர் கூறியபடி, (அவன் அவ்விருவருள் ஒருவனைக் கொலைசெய்யுமாறும் மற்றொருவனை மன்னித்து விட்டுவிடுமாறும் ஏவினான். (அதாவது) அவ்விருவருள் ஒருவனுக்கு அவன் உயிர்கொடுத்ததைப் போன்றும் மற்றொருவனை மரணிக்கச் செய்ததைப் போன்றும் அவன் கருதிக் கொண்டான்.) அவன் இக்கருத்தை நாடியிருந்தால், அவன் இப்ராஹீம் நபியின் கூற்றுக்குத் தொடர்பான எதையும் கூறவில்லை. ஏனென்றால், அவன் அவரின் வாதத்தை மறுக்கவுமில்லை. அவர் காட்டிய ஆதாரத்திற்கு எதிராக எந்த ஆதாரத்தையும் காட்டவுமில்லை.

நும்ரூதை வாயடைக்கச்செய்தல்

அந்த அரசனின் விவாதம் முடிவுற்றபோது, அங்கிருந்தவர்களின் உள்ளத்தில் அந்த விவாதம் மிகச் சிறிதாகத் தோன்றியிருக்கலாம். எனவே, படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதை நிரூபிப்பதற்காகவும் நும்ரூதின் வாதத்தை முறியடிப் பதற்காகவும் மற்றோர் ஆதாரத்தை இப்ராஹீம் நபி எடுத்து வைத்தார். அவர் கூறினார்: திண்ணமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; (முடிந்தால்) நீ அதை மேற்கில் உதிக்கச் செய் (பார்க்கலாம்). (2: 258) 

 அதாவது இந்தச் சூரியன் ஒவ்வொரு நாளும் இறைவனுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்கிவருகிறது. அதனைப் படைத்தவன், அதனை ஆள்பவன், அதனைச் சுழலச் செய்பவனின் சுழற்சிக்கேற்ப அது கிழக்கில் தோன்றுகிறது. அந்த இறைவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவனே அனைத்துப் பொருட்களையும் படைத்தவன். நீயே உயிர்கொடுப்பவனாகவும் மரணிக்கச்செய்பவனாகவும் இருந்தால், இந்தச் சூரியனை மேற்கிலிருந்து உதிக்கச்செய். மேலும், எவன் உயிர்கொடுக்கவும் மரணிக்கச்செய்யவும் செய்கின்றானோ அவன்தான், தான் விரும்பியதையெல்லாம் செய்வான்; அவனை எதுவும் தடுக்காது; அவனை யாரும் வெல்ல முடியாது. மாறாக, அவனே எல்லாப் பொருளையும் அடக்கி ஆள்கிறான்; அவனுக்கே எல்லாப் பொருட்களும் பணிகின்றன. நீ நினைப்பதைப் போன்று நீ இருந்தால், இதைச் செய்துகாட்டு. நீ இதைச் செய்யவில்லையென்றால், நீ நினைப்பதைப் போன்றவனாக நீ இல்லை என்பதை விளங்கிக்கொள். இது போன்ற எச்செயலையும் உன்னால் செய்ய முடியாது என்பதை நீயும் ஒவ்வொருவரும் அறிவர். மேலும், ஒரு கொசுவையோ அதைவிடச் சிறிய உயிரினத்தையோ உன்னால் படைக்க முடியாது; நீ மிகவும் இயலாதவன் என்று இப்ராஹீம் (அலை) கூறினார்.

இப்ராஹீம் (அலை) அந்த அரசனுடைய வழிகேட்டையும், அறியாமையையும், அவனுடைய வாதத்தில் அவன் பொய்யன் என்பதையும் எடுத்துரைத்தார். அவன் செல்கின்ற பாதை தவறானது என்பதையும் மக்களின் அறியாமையை வைத்தே அவர்களை அவன் ஆட்சி செய்கின்றான் என்பதையும் அவனுக்கு விளக்கினார். அச்சமயத்தில், இப்ராஹீம் நபிக்குப் பதில் கொடுக்க அவனிடம் ஒன்றுமில்லை. எனவே, விவாதம் முடிந்துவிட்டது; அவன் அமைதியாகிவிட்டான். ஆகவேதான் அவர் கூறினார்: (அல்லாஹ்வை) மறுத்த அவன், வாயடைத்துப் போனான். அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நல்வழி காட்டமாட்டான். (2: 258)

சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: அந்த விவாதம், இப்ராஹீம் நபியவர்கள் நெருப்புக் குண்டத்திலிருந்து வெளியேறிய அன்று, அவருக்கும், நும்ரூத் அரசனுக்கும் இடையே நடைபெற்றது. அந்நாளில் மக்களெல்லாம் ஒன்றுகூடவில்லை. அப்போது இந்த விவாதம் அவ்விருவருக்கிடையே நடைபெற்றது.

--------------------------அடிக்குறிப்புகள் -------------------------

1.இதே நபிமொழியை முஸ்லிம், நசயீ மற்றும் இப்னுமாஜா போன்ற நூற்களிலும் காணலாம். 2.மேற்கண்ட இரண்டு நபிமொழியையும் இமாம் அஹ்மத் (ரஹ்) மட்டுமே அறிவித்துள்ளார். *3. இதே நபிமொழியை இப்னுமாஜா நூலிலும் காணலாம்.




அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
  

வியாழன், 23 செப்டம்பர், 2010

மாநபியும் மருத்துவமும்

நான் இதற்கு முன் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தாலும், என்னுடைய சொந்த நூல் எனும் அடிப்படையில் இதுவே முதல் நூல் ஆகும்.  நான் முஸ்லிம் இதயக்குரல் மாத இதழில் தொடர் கட்டுரையாக எழுதிவந்த மாநபியும் மருத்துவமும் எனும் அதே தலைப்பிலேயே இந்நூலை வெளியிட்டுள்ளேன். இதில் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுக்கேற்ப தற்கால மருத்துவக் கருத்துகளையும் ஆய்வு செய்து எழுதியுள்ளேன். இது ஒரு பயனுள்ள நூல் என்பதில் சந்தேகமில்லை. இதன் விலை ரூபாய் 20 மட்டுமே. இதைச்  சென்னை மண்ணடியிலுள்ள பஷாரத் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். நூலைப்பெற: 044 25225028

புதன், 22 செப்டம்பர், 2010

நபிமார்கள் வரலாறு (முதல் பாகம்)


தமிழாக்கம்:  காரீ நூ அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
                         ஆலங்குடி 

வியாழன், 16 செப்டம்பர், 2010

புதன், 15 செப்டம்பர், 2010

விரைவில் வெளிவருகிறது!



முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்துள்ளார். இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் விரைவில் வெளிவருகிறது. சென்னையில் உள்ள சாஜிதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.  இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறப்பட்டுள்ளன.
தம்பதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல்.  பக்கங்கள்:  448  விலை:  ரூ. 175/-    அலைபேசி : 9840977758

சனி, 11 செப்டம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 7)

சான்றைச் சமர்ப்பித்தல்

* அவர்கள் கூறினார்கள்: இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்துவிடுங்கள். (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களை இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம்.  (37: 97-98)  போதிய ஆதாரங்கள்  இல்லாமல் தோல்வி கண்டபோது அம்மக்கள் வாதம் செய்ய முன்வரவில்லை.  எனவே, அவர்கள் தம் ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவதைத் தவிர அவர்களுக்குச் சாதகமாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்கள் தம் அறியாமையாலும் வரம்புமீறுதலாலும், தம் தெய்வங்களுக்கு உதவி செய்ய நாடினார்கள். அந்நேரத்தில் அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை நிலைநாட்டவும் அதை உயர்த்தவும் நாடினான்.

 * (இதற்கு) அவர்கள், நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்கள். (இப்ராஹீமை தீக்கிடங்கில் எறிந்தபோது) நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு என்று நாம் கூறினோம். மேலும், அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்.  (21: 68- 70)

அவர்களால் இயன்ற இடமெல்லாம் விறகுகளைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவ்வாறு விறகைச் சேகரிப்பதிலேயே நீண்ட காலம் கழிந்தது. அவர்களுள் ஒரு பெண் நோய்வாய்ப்பட்டு விடுகின்றபோது, நான் சுகம்பெற்றுவிட்டால், இப்ராஹீமை எரிக்க விறகுகளைச் சுமந்துவருவேன் என்று நேர்ச்சை செய்துகொள்வாள். பின்னர், ஒரு நாள் அவர்கள் ஒரு பெரிய பாதாளக் குழியைத் தோண்டினார்கள். அதனுள் அவர்கள் விறகுகளைப் போட்டு எரியவைத்தார்கள்.

அந்நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. அதன் மேல் தீப்பொறிகள் பறந்தன. அதைப் போன்ற நெருப்பை யாரும் பார்த்ததில்லை. பின்னர், பீரங்கி போன்ற ஒரு கருவியில் இப்ராஹீம் நபியை வைத்தார்கள். ஹைஸன் என்பவன்தான் அந்தக் கருவியைச் செய்தான். அவன்தான் முதன் முதலில் அந்தப் பீரங்கியைச்  செய்தான். எனவே, அல்லாஹ் அவனைப் பூமிக்குள் செருகி விட்டான். அவன் அதனுள் மறுமைநாள் வரை சப்தமிட்டுக் கொண்டே இருப்பான்.  (நூல்: தஃப்சீர் தப்ரீ) பிறகு, அவர்கள் அவரைக் கட்டினார்கள்; அவருடைய கைகளைப் பின்புறமாக்கி, தோளோடு சேர்த்துக்  கட்டி விட்டார்கள். அந்நேரத்தில், இப்ராஹீம் (அலை) அவர்கள், உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீ தூயவன்; அகிலத்தாரின் இறைவன்; உனக்கே புகழ் யாவும்; உனக்கே அரசாட்சி; உனக்கு இணையாக எதுவும் இல்லை என்று ஓதினார்.  (நூல்: தஃப்சீர் தப்ரீ)

இப்ராஹீம் நபி ஓதிய துஆ

இப்ராஹீம் (அலை) அவர்களை பீரங்கி போன்ற ஒரு கருவியில் வைத்து, கைகளைப் பின்புறமாக்கி, தோளோடு சேர்த்துக் கட்டி அதிலிருந்து தூக்கி எறிந்தார்கள். அப்போது அவர், நமக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று ஓதினார்கள். இப்னு அப்பாஸ்  (ரளி) அறிவித்துள்ள நபிமொழியை புகாரீ (ரஹ்) அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

இப்ராஹீம் நபி நெருப்பில் போடப்பட்டபோது, நமக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று ஓதினார். பின்வருகின்ற வசனம் முஹம்மது நபிக்குக் கூறப்பட்டபோது, அவர்களும் இந்த துஆவை ஓதினார்கள். அந்த வசனம்: அவர்களிடம் மக்கள் (சிலர்), உங்களுக்கு எதிராக (யுத்தம் புரிய) மனிதர்கள் ஒன்று திரண்டுவிட்டார்கள். எனவே, அவர்களை அஞ்சுங்கள் என்று கூறினர். ஆனால், அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. (அதனால்) அவர்கள், எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று  கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும் வளத்துடனும் திரும்பினார்கள்.  அவர்களுக்கு எத்தகைய தீங்கும் நேரவில்லை.  (3: 173-174, நூல்: புகாரீ)

இப்ராஹீம் நபி நெருப்பில் போடப்பட்ட போது, இறைவா! நீ வானத்தில் ஒருவன்;  பூமியில்  உன்னை வணங்குபவன் நான் ஒருவனே என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். இதை அபூயஅலா (ரஹ்) பதிவு செய்துள்ளார்.

அல்லாஹ் காப்பாற்றுதல்

முந்தைய அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்: ஜிப்ரீல் (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களின்முன் தோன்றி, இப்ராஹீமே! உமக்கு எதுவும் தேவை இருக்கிறதா? என்று கேட்டார். உம்மிடம் இல்லை  என்று இப்ராஹீம் நபி பதிலளித்தார்.

இப்னு அப்பாஸ்  (ரளி) மற்றும் சயீத் பின் ஜுபைர் (ரளி)- இருவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் வானவர், நான் எப்போது ஏவப்படுவேன். (என்னை ஏவினால்) நான் மழையைப் பொழிய வைத்துவிடுவேன் என்று கூறலானார். ஆனால், அதற்குள் அல்லாஹ்வின் கட்டளை விரைந்து விட்டது. நெருப்பே! நீ இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும் இதமாகவும் ஆகிவிடு! என்று நாம் கூறினோம் (21: 69) என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அலீ (ரளி) அவர்கள் கூறியுள்ளார்கள்: அதாவது அவருக்கு  நீ துன்பமிழைக்காதே! என்பதுதான் அவ்வசனத்தின் பொருள். இப்னு அப்பாஸ்  (ரளி) மற்றும் அபுல்ஆலியா (ரளி) இருவரும் கூறியுள்ளார்கள்: அல்லாஹ் `சலாமன் (இதமாக) என்று சொல்லியிருக்காவிட்டால், அதன் குளிர்ச்சி இப்ராஹீமுக்கு நோவினை கொடுத்திருக்கும். கஅபுல் அஹ்பார் (ரளி) கூறியுள்ளார்கள்: அன்றைய நாளில் இப்புவியில் யாரும் நெருப்பின் மூலம் பயன்பெற முடிய வில்லை. அவரைக் கட்டப்பட்டிருந்த கயிறுகளைத் தவிர எதுவும் கரியவில்லை.  ளஹ்ஹாக் (ரஹ்) கூறியுள்ளார்: ஜிப்ரீல் (அலை) இப்ராஹீம் நபியுடன் இருந்தார். அப்போது அவர், இப்ராஹீம் நபியின் முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்தார். அதைத் தவிர அந்நெருப்பிலிருந்து அவரை எதுவும் தீண்டவில்லை.

சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபியுடன் நிழலின் வானவரும் இருந்தார். அவர் கரிக்குள் இருப்பதைப் போன்று இருந்தார். அவரைச் சுற்றி  நெருப்பு இருந்தது. அவர் பசுமையான தோட்டத்திற்குள் இருந்தார். அம்மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் அவரை அடைய முடியவில்லை. அவரும் அவர்களிடம்  வர முடியவில்லை.
அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள்: இப்ராஹீம் நபியின் தந்தை மிக அழகிய வார்த்தையைக் கூறினார். அந்த நிலையில்  அவர் தம் மகனைப் பார்த்தபோது, இப்ராஹீமே! உம்முடைய இறைவன் சிறந்த இறைவன் என்று கூறினார்.

இக்ரிமா (ரளி) அவர்களிடமிருந்து இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார்: திண்ணமாக இப்ராஹீம் நபியின் தாய்  தம்முடைய மகனைப் பார்த்தார். என்னருமை மகனே! நான் உன்னிடம் வர விரும்புகிறேன். எனவே, உன்னைச் சுற்றியுள்ள தீக்கனலிலிருந்து என்னைப் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்! என்று கூறினார். அவரும் பிரார்த்தனை செய்தார். அவர் தம் மகனை முன்னோக்கிச் சென்றார். நெருப்பின் சூடு அவரின் அன்னையைத் தீண்டவில்லை. அவர் அவரிடம் சென்றடைந்தபோது, தம் மகனைக் கட்டியணைத்து அவரை முத்தமிட்டார்; பின்னர், திரும்பி வந்தார். (நூல்: தாரீக் திமஷ்க்)

மின்ஹால் பின் அம்ர் (ரஹ்) கூறியுள்ளார்: திண்ணமாக இப்ராஹீம் நபி அங்கு நாற்பது அல்லது ஐம்பது நாட்கள் தங்கினார். நான் அதனுள் இருந்தபோது வாழ்ந்த இரவுகளையும் பகல்களையும் போன்ற இனிய வாழ்க்கையை (வேறெங்கும்) அனுபவிக்கவில்லை. மேலும், நான் அதனுள் இருந்தபோது, என் வாழ்க்கை முழுவதும் இதே போன்று இருக்க வேண்டும் என்று விரும்பினேன் என இப்ராஹீம் நபி கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.       (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்) அவர்கள் பழிவாங்க  நாடினார்கள்; ஆனால், அவர்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள்; அவர்கள் உயர்வடைய நாடினார்கள்; ஆனால், இழிவடைந்தார்கள்; அவர்கள் மேலோங்க நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் தாழ்த்தப்பட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான்:  அவர்கள் அவருக்கு எதிராகச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்! (21: 70) மற்றொரு வசனத்தில், இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம் (37: 98) என்று கூறியுள்ளான். 

எனவே, அவர்கள் நட்டத்தையும் இழிவையுமே பெற்றார்கள். இது இவ்வுலகில்தான். மறுமையில், நிச்சயமாக அவர்களுடைய நெருப்பில் குளிர்ச்சியோ இதமோ இருக்காது. அவர்கள் அங்கே எந்த வாழ்த்துரையையும் பெறமாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்குமிடம் பின்வருகின்ற வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போல் இருக்கும்: திண்ணமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக்கெட்ட இடமாகும். (25: 66)

மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி
  

புதன், 8 செப்டம்பர், 2010

நூல் மதிப்புரை (தினமணி)