செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 6)

உண்மையை உணர வைத்தல்

அவர்களிடம் பண்டிகை கொண்டாடுகின்ற பழக்கம் இருந்தது. ஒவ்வோராண்டும் அவர்கள் தம்  பண்டிகையைக் கொண்டாட ஊரின் எல்லைக்குச் சென்றுவிடுவார்கள்.  அவ்விழாவில் கலந்துகொள்ள  அவருடைய தந்தை தம் மகன் இப்ராஹீமை அழைத்தார். அப்போது அவர், நான் நோயுற்றிருக்கிறேன் என்று பதிலளித்தார்.  அல்லாஹ் கூறுகின்றான்: பின்னர், அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். திண்ணமாக நான் நோயாளியாக இருக்கிறேன் என்று கூறினார்.  (37: 88-89)
 அதாவது அவர்களுடைய சிலைகளை இழிவுபடுத்துவது, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவி செய்வது  மேலும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகளை- அவை உடைக்கப்படுவதற்கும் இழிவுபடுத்தப்படுவதற்கும் தகுதியானவை- பொய்யெனத் தெரிவிப்பது இவையே அவரின் நோக்கமாக இருந்தன. அவற்றை அவர்தம் பேச்சிலேயே அம்மக்களுக்கு எடுத்துக் காட்டினார்.
அவர்களெல்லாம் தம்முடைய விழாவைக் கொண்டாடச் சென்றுவிட்டபோது, அவர் மட்டும் ஊரிலேயே தங்கிவிட்டார். அவர்களுடைய தெய்வங்களிடம் அவர்  சென்றார். (37: 91)

  அதாவது வேகமாகவும் மறைந்தும் சென்றார். அவர் மிகப்பெரும் முற்றத்தில் அவற்றைக் கண்டார்.  அந்தச் சிலைகளுக்கு முன்பாக வகை வகையான உணவுகளை காணிக்கையாக அவர்கள் படைத்திருந்தார்கள். அவர் அச்சிலைகளைப் பார்த்து, (உங்களுக்குமுன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ண மாட்டீர்களா? என்று கேட்டார். உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை? (என்றும் கேட்டார்). பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து(உடைத்து)விட்டார்.  (37: 91-93)

ஏனென்றால், அவை மிக வலுவானவை; வேகமானவை; அடக்கிஆள்பவை. எனவே அவற்றை அவர் தம்முடைய கையிலிருந்த சுத்தியலால் உடைத்தெறிந்தார். அல்லாஹ் கூறுகின்றான்:  அவர் அவற்றைத் துண்டு துண்டாக்கிவிட்டார். (21: 58) அதாவது அவர் அவை அனைத்தையும் உடைத்துவிட்டார். அவர் அவற்றுள் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார். அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டுவிட்டார்).(21: 58)

அதன் பின்னர், அவர் தம்முடைய சுத்தியலை அங்கிருந்த பெரிய சிலையின் கையில் வைத்துவிட்டார். தன்னோடு சமமாக இச்சிறிய சிலைகளும் வழிபடப்படுவதைப் பொறுக்காத அந்தப் பெரிய சிலை அச்சிறிய சிலைகளை உடைத்துவிட்டது என்று சுட்டிக்காட்டவே என்று கூறப்பட்டுள்ளது.

அவர்கள் தம் விழாவைக் கொண்டாடிவிட்டு ஊருக்குள் திரும்பியபோது, அவர்களுடைய தெய்வங்களுக்கு நேர்ந்ததைக் கண்டு திடுக்கிட்டு, எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? திண்ணமாக அவன் அநியாயக்காரர்களுள் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள். (21: 59)

அவர்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு இதில் தெளிவான ஆதாரம் இருக்கிறது. அதாவது அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த தெய்வங்களுக்கு நிகழ்ந்ததே அதுவே ஆதாரமாகும். ஏனென்றால், அவை உண்மையிலேயே தெய்வங்களாக இருந்திருந்தால் எவன் தமக்குத் தீங்கு செய்ய முற்பட்டானோ அவனைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவை அப்படிச் செய்யவில்லை. இருப்பினும் அம்மக்கள் தம் அறிவின்மையாலும்  வழிகேட்டினாலும் இவ்வாறு கூறுகின்றார்கள்:   எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களுள் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள். அதற்கு (அவர்களுள் சிலர்), இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றிக் (குறை) கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்; அவருக்கு `இப்ராஹீம் என்று சொல்லப்படுகிறது என்று கூறினார்கள். (21: 59-60)


அவர் நம் தெய்வங்களைக் குறைகூறுகிறார்; அவற்றை அவர் கேலி செய்கிறார்; அவரே ஊரில் தங்கியிருந்தார். அவர்தான் நம் தெய்வங்களை உடைத்திருக்க வேண்டும் என்று கூறினர். இப்னு மஸ்ஊத்  (ரளி) அவர்கள், இப்ராஹீம்  நபி சொன்ன- (இன்னும், நீங்கள் புறங்காட்டித் திரும்பிச்சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்) -என்ற  வார்த்தைகளையும் அவர்கள் நினைவூட்டினார்கள் என்று கூறியுள்ளார்கள்.

அதனைக் கேட்ட அவர்கள், அப்படியானால், அவரை மக்கள் கண்முன்னே கொண்டு வாருங்கள். அவர்கள் (அவரை) நேரடியாகக் காணலாம் என்று கூறினார்கள். (21: 61) அதாவது பெரும் திரள் முன்னிலையில் அவரைக் கொண்டு வந்தால், அவரை எல்லோரும் நேரடியாகக் காண்பார்கள்; அவர் பேசுவதை எல்லோரும் கேட்பார்கள் என்ற எண்ணத்தில்தான் அவரை மக்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள். 


இப்ராஹீம் நபியின் உயர் நோக்கம்

மக்கள் யாவரையும் ஒன்றிணைய வைப்பதே இப்ராஹீம் நபியின் உயர் நோக்கமாக இருந்தது. அவர்கள் அவ்வாறு ஒன்றிணைந்தால்தான் அவர்கள் வழிபட்டுவருகின்ற சிலைக ளுக்கு எதிரான ஆதாரத்தை அவர்கள் முன்னிலையிலேயே நிலைநாட்ட முடியும். எனவேதான், அந்த வாய்ப்பை  அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இது, மூசா (அலை) அவர்கள் பிர்அவ்னுக்குக் கூறியதைப் போன்று உள்ளது. பண்டிகை நாளே உங்களுடைய தவணையாகும். மேலும், மனிதர்கள் யாவரும் முற்பகலி லேயே ஒன்று திரட்டப்பட வேண்டும் என்று அவர் கூறினார். (20: 59)

மக்களெல்லாம் ஒன்றுகூடிய பின்னர், அவ்விடத்திற்கு இப்ராஹீம் நபி கொண்டுவரப்பட்டார். அல்லாஹ் கூறுகின்றான்: இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தாமே? என்று (அவர் வந்ததும்) அவர்கள் கேட்டனர். அதற்கு அவர், அப்படியல்ல! இவற்றுள் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இதுதான் செய்திருக்கும் என்று கூறினார். (21: 62-63) அதாவது அந்தப் பெரிய சிலைதான் அவற்றை உடைக்க என்னைத் தூண்டியது. அதனால்தான் பின்வருமாறு அவர் கூறினார்: இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே  நீங்கள் கேளுங்கள்.  (21: 63)


இதை அவர் சொன்ன காரணம், அவற்றால் பேச முடியாது என்று அவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். ஆக அவர் நினைத்தபடியே, மற்ற ஜடங்களைப் போன்று அவையும் உயிரற்ற ஜடங்களே என்பதை அம்மக்கள் ஒத்துக்கொண்டார்கள். அதன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) திண்ணமாக நீங்களே (இவற்றைத் தெய்வங்களாக நம்பிய) அநியாயக்காரர்கள் என்று பேசிக்கொண்டார்கள்.(21: 64) அவர்கள் தமக்குள்ளாகவே ஒருவரையொருவர் குறைகூறிக் கொள்ளத் தொடங்கினார்கள். நீங்களே அநியாயக்காரர்கள் என்று கூறினார்கள். அதாவது அந்தச் சிலைகளுக்கு எந்தப் பாதுகாவலரும் ஏற்பாடு செய்யாமல் தனியாக விட்டுவிட்டுச் சென்றது நம் தவறுதான் என்று கூறினார்கள்.

பிறகு, அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டுக் கொண்டார்கள். (21: 65) சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: பின்னர், அவர்கள் தமக்குத்தாமே கருத்து வேறுபாடு கொண்டார்கள். இதன்படி அவர்கள், நிச்சயமாக நீங்களே அநியாயக்காரர்கள் என்று கூறியதன் பொருள், அதை அவர்கள் வணங்குவதில் அநியாயக்காரர்கள் என்பதாகும்.

கத்தாதா (ரஹ்) கூறியுள்ளார்: அச்சமூக மக்களை ஒரு தீய எண்ணம் ஆட்கொண்டது. அவர்கள் தம் தலைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள். பின்னர் அவர்கள், இவை பேசமாட்டா என்பதைத்தான் நீர் நிச்சயமாக அறிவீரே! என்று கேட்டனர். (21: 65) இப்ராஹீமே! இச்சிலைகளால் பேச முடியாது என்பதைத்தான் நீர் அறிவீரே! பின்னர், எப்படி அவற்றுடன் பேச எங்களை ஏவுகின்றீர்? என்று அவர்கள் கேட்டார்கள். அந்நேரத்தில்தான் இப்ராஹீம் நபியவர்கள், (அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்குத் தீங்கும் அளிக்காதவற்றையா வழிபடுகிறீர்கள்? என்று கேட்டார். சீச்சீ! உங்களுக்கும் நீங்கள் வழிபடுகின்ற அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் (கேடுதான்); நீங்கள் இதனை அறிந்து  கொள்ளமாட்டீர்களா? (என்று இப்ராஹீம் கூறினார்). (21: 66-67)

* (அவற்றை வழிபடுபவர்கள்) அவரிடம் விரைந்துவந்தார்கள்.  நீங்களே    செதுக்கியவற்றையா வழிபடுகிறீர்கள்? என்று கேட்டார். (37: 94-95) அதாவது மரக்கட்டைகளிலிருந்தும் கற்களிலிருந்தும் நீங்களே செதுக்கிய சிலைகளை நீங்கள் எப்படி வழிபடுகின்றீர்கள்? மேலும், நீங்கள் விரும்பியவாறு  உருவம் கொடுக்கின்ற அவற்றையா நீங்கள் வழிபடுகின்றீர்கள்? என்று கேட்டார். மேலும் அவர், உங்களையும் நீங்கள் செய்த(இ)வற்றையும் அல்லாஹ்வே படைத்திருக்கின்றான் என்று கூறினார். (37: 96)

 அதாவது, அச்சிலைகள் யாவும் படைக்கப்பட்டவை; உங்களால் உருவாக்கப்பட்டவையாகும். எனவே படைக்கப்பட்ட ஒருவன் தன்னைப்போல் படைக்கப்பட்ட மற்றொன்றை எப்படி வழிபடலாம்? அவற்றை நீங்கள் வழிபடுவதைவிட உங்களை அவை வழிபடுவது ஒன்றும் பெரிதில்லை. அவை உங்களை வழிபடுவது தவறானது என்றால்,  நீங்கள் அவற்றை வழிபடுவதும் தவறானதே! ஏனென்றால், வழிபடுதல் என்பது படைத்த இறைவனுக்கு மட்டும்தான் தகும்; அவனை வணங்குவதே கடமையாகும்; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை.


மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி


புதன், 25 ஆகஸ்ட், 2010

சனி, 21 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 5)

சிலைவழிபாட்டை எதிர்த்தல்

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்கள் பற்றி பல விசயங்களைத் தெரிவிக்கிறான். இப்ராஹீம் நபி சிலைகளை வழிபடக்கூடிய சமுதாயத்தினரை மறுத்தார்; அவற்றை அவர்களிடம் இழிவுபடுத்தினார்; அவற்றைச் சிறுமைப்படுத்தினார்; அவற்றின் மதிப்பைக் குறைத்தார்.
* நீங்கள் வழிபடுகின்ற இந்த உருவங்கள் என்ன? என்று கேட்டார்.(21: 52)
அதாவது அவர்கள் அவற்றை வழிபடுகின்றார்கள்; அவற்றுக்குப் பணிகின்றார்கள். அப்போது அவர்கள், எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.(21: 53) 

அதாவது அவர்களுடைய ஆதாரமே, அவர்களின் பெற்றோரும் முன்னோரும் அவற்றை வணங்கினார்கள் என்பதும் அந்தச் சிலை வணக்கத்திலேயே அவர்கள் நீடித்திருந்தார்கள் என்பதுமே ஆகும்.
* அதற்கு அவர், திண்ணமாக நீங்களும், உங்களுடைய முன்னோரும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள் என்று கூறினார்.  (21: 54)

 * அவர் தம் தந்தையிடமும்  சமூகத்தாரிடமும், நீங்கள் எதனை வழிபடுகிறீர்கள்? எனக் கேட்டதையும், அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? அவ்வாறாயின், அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம்தான் என்ன? என்று கேட்டதையும் எண்ணிப்பாருங்கள்.  (37: 85-87) 

  கத்தாதா (ரளி) கூறியுள்ளார்கள்:  மறுமையில், அல்லாஹ் அல்லாதவற்றை வழிபட்ட நீங்கள் அல்லாஹ்வைச் சந்திக்கின்றபோது அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றி, உங்கள் எண்ணம்தான் என்னஎன்று கேட்டார்.

* இப்ராஹீம் நபி அம்மக்களிடம்நீங்கள் அவற்றை அழைக்கும்போது, (அவை காது கொடுத்துக்) கேட்கின்றனவா?;   அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா?; அல்லது தீமை செய்கின்றனவா? என்று கேட்டார். (அப்போது அவர்கள்) இல்லை. நாங்கள் எங்கள் முன்னோர் இவ்வாறே (வழிபாடு) செய்யக் கண்டோம் என்று கூறினார்கள்.  (26: 72-74)  அதாவது இப்ராஹீம் (அலை) அவர்களின் கூற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். திண்ணமாக அவற்றால் அழைப்பாளரின் அழைப்பைக் கேட்க முடியாது; அவை எந்தப் பயனும் கொடுக்கா; அவை எந்தத் தீங்கும் செய்யா. பிறகேன் அவர்கள் அவற்றை வணங்கினார்கள் என்றால், மூடர்களான அவர்களின் முன்னோர்களும்  அவர்களைப் போன்றோரும்  அவற்றையே வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அதை அப்படியே அவர்கள் பின்பற்றி வந்தார்கள். அவ்வளவுதான்.

* இதனால்தான் அல்லாஹ் அவர்களிடம் கூறுகின்றான்: அவ்வாறாயின், நீங்கள் எவற்றை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டார். நீங்களும், உங்கள் முன்னோர்களும் (எவற்றை வழிபட்டீர்கள் என்பதைக் கவனியுங்கள்!) நிச்சயமாக இவை எனக்கு விரோதி களே; அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்). (26: 75-77)

அவர்கள் எவற்றைத் தெய்வங்கள் என்று வாதிட்டார்களோ அந்தச் சிலைகளுக்கு எதிராகத் தெளிவான ஆதாரமாக மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன. ஏனென்றால், அவற்றிலிருந்து அவர் ஒதுங்கிக்கொண்டதோடு அவற்றை அவர் மதிப்பிழக்கவும் செய்தார். அச்சிலைகள் ஏதேனும் தீங்கு செய்யும் என்றிருந்தால், அவை அவருக்கு ஏதேனும் தீங்கு செய்திருக்க வேண்டும்; அவை ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றிருந்தால், அவை அவருக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறெல்லாம் எதுவும் ஏற்படவில்லை.

பிடிவாதம்

நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டுவந்திருக்கிறீரா? அல்லது (எங்களுடன்) விளையாடுகின்றீரா? என்று கேட்டார்கள். (21: 55) அதாவது எங்களைப் பற்றி நீர் என்ன கூறுகின்றீரோ, எங்கள் கடவுள்களைப் பற்றி குறைத்து மதிப்பிடுகின்றீரோ, மேலும் அதன் காரணமாக எங்கள் முன்னோரைப் பழிக்கின்றீரோ இவற்றையெல்லாம் நீர் உண்மையாகத்தான் சொல்கின்றீரா? அல்லது எங்களோடு விளையாடுகின்றீரா? என்று கேட்டார்கள்.

*அப்போது அவர்அப்படியல்ல! உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன். இதற்கு சாட்சி கூறுபவர்களுள் நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்று (இப்ராஹீம்) கூறினார்.  (21: 56)

அதாவது நான் அதையெல்லாம் உண்மையாகத்தான் கூறுகின்றேன்.  உங்கள் இறைவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; அவனே உங்கள் இறைவனும் உலகிலுள்ள ஒவ்வொரு பொருளின் இறைவனும் ஆவான்; அவன் வானங்களையும் பூமியையும் படைத்தவன்; முன்னுதாரணமின்றி அவற்றை அவன் படைத்தான்; எனவே, அவனே வணங்கப்படத் தகுதியானவன்; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை; நான் அதற்குச்  சாட்சிசொல்பவன்.

 * அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும், நீங்கள் புறங்காட்டித் திரும்பிச்சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்! (என்று கூறினார்). (21: 57)
 அம்மக்கள் தம்முடைய பண்டிகையைக் கொண்டாட ஊரின் எல்லைப் பகுதிக்குச் சென்றுவிட்ட பிறகுஅவர்கள் வழிபட்டுக் கொண்டிருந்த சிலைகளுக்கு எதிராக ஒரு சூழ்ச்சி செய்வேன் என்று இப்ராஹீம் (அலை) சத்தியம் செய்து கொண்டார். அவர் இதைத்  தம் மனதுக்குள் சொல்லிக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவருடைய கூற்றைச் சிலர் செவியுற்றனர் என்று இப்னு மஸ்ஊத் (ரளி) கூறியுள்ளார்கள்.


மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இறைநம்பிக்கையாளரின் இனிய பண்புகள்


செயல்களைத் தூய்மையான எண்ணத்துடன் செய்தல்


அல்லாஹ்வைத் தூய்மையான எண்ணத்துடன் வணங்க வேண்டுமென அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (98: 5)

அல்லாஹ்வுக்காக மட்டும் செய்த செயலையும், அவனுடைய திருப்தியை நாடிச் செய்த செயலையுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூல்: நசயீ

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே (கூலி கொடுக்கப்படும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடலையோ தோற்றத்தையோ பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங்களையும் செயல்பாடுகளையுமே பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்

துன்ப நேரங்களில் பொறுமையைக் கடைப்பிடித்தல்


இறைநம்பிக்கைகொண்டவர்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களைச்) சகித்துக்கொள்ளுங்கள்! (ஒருவரையொருவர்) பலப்படுத்திக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்! (3: 200)

நிச்சயமாக உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும், பொருள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். (எவர் இச்சோதனையில்) பொறுமையைக் கடைப்பிடிப்பாரோ அவருக்கு (சுவர்க்கம் உண்டு என்ற) நற்செய்தியை (நபியே நீர்) கூறுவீராக! (2: 155)

இறைநம்பிக்கையாளரின் அனைத்துச் செயல்பாடுகளும் நன்மையாக அமைவது வியப்பாக உள்ளது. இந்நிலையை இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறு எவரும் அடைய முடியாது. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் அதற்காக (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறார். இது அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அதைச் சகித்துக்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸுஹைப் இப்னு சினான் (ரலி), நூல்: முஸ்லிம்

அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரைச் சோதிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ

உண்மையும் பொய்யும்


இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (9: 179)

எவன் பொய்யனாகவும் இறைமறுப்பாளனாகவும் இருக்கின்றானோ அவனை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை. (39: 3)

நிச்சயமாக உண்மை நல்ல விசயங்களின்பால் கொண்டுசெல்கிறது. நல்ல விசயங்கள் சொர்க்கத்தின்பால் கொண்டு செல்கிறது. மனிதன் உண்மை பேசிக்கொண்டே இருக்கிறான். இறுதியில் அவன் அல்லாஹ்விடம் ஸித்தீக் (அதிகம் உண்மை பேசுபவன்) என்று எழுதப்பட்டு விடுகிறான். நிச்சயமாகப் பொய் கெட்ட விசயத்தின்பால் கொண்டு செல்கிறது. கெட்ட விசயம் நரகத்தின்பால் கொண்டு செல்கிறது. மனிதன் பொய் பேசிக்கொண்டே இருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடம் அவன் மாபெரும் பொய்யன் என எழுதப்பட்டுவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள். (ஏனெனில்) உண்மை மன நிம்மதி தரக்கூடியது; பொய் சந்தேகமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹசன் (ரலி), நூற்கள்: அஹ்மது, நசயீ, திர்மிதீ, இப்னு ஹிப்பான்

நாவைப் பேணுதல்

அவன் (பேசக்கூடிய) எந்தச் சொல்லையும், அவனிடம் கண்காணித்து எழுதக்கூடிய (வானவர்கள் அதைப் பதியாமல்) மொழிவதில்லை. (50: 18)

தமது இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள (நாவையும்) இரண்டு தொடைகளுக்கு இடையிலுள்ள அந்தரங்க உறுப்பையும் (சரியான முறையில் பயன்படுத்துவேன் என) எவர் பொறுப்பேற்றுக் கொள்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் இப்னு சஅத் (ரலி), நூல்: புகாரீ

எவருடைய நாவிலிருந்தும் கையிலிருந்தும் முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம்களுள் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

ஓர் அடியான் எதையும் சிந்திக்காமல் (சில) வார்த்தைகளைப் பேசுகிறான். (இதனால்) கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள தூரமளவுக்கு நரகத்தின் உள்ளே விழுந்துவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, முஅத்தா

ஓர் அடியான் எதையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுக்குத் திருப்தியளிக்கும் பேச்சைப் பேசுகிறான். அதன் மூலம் அல்லாஹ் அவனைப் பல அந்தஸ்துகளுக்கு உயர்த்துகிறான். மற்றோர் அடியான் எதையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுக்குக் கோபம் ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகிறான். அதனால் அவனை நரகத்தில் அல்லாஹ் வீசுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ

அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைகொண்டோர் நல்லதைச் சொல்லட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்

கெட்ட வார்த்தைகளைப் பேசுபவன்மீது அல்லாஹ் கோபம்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூற்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

உறவுகளைத் துண்டிக்காதீர்!




ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம்1 உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.

நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23)  அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி)நூல்: புகாரீ

 நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி)நூற்கள்: புகாரீமுஸ்லிம்

உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர்  (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி)நூல்: திர்மிதீ

சனி, 14 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 4)

அழைப்புப் பணி

பாபில் நகர மக்கள் சிலைகளை வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம்தான் சிலைகளை வணங்கக் கூடாது என்பது பற்றியும் அவற்றை உடைத்தபோது ஏற்பட்ட பிரச்சினை பற்றியும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வாதம்செய்தார்கள். அவர் அவற்றை இழிவுபடுத்தினார்; அவை வீணானவை என்பதை அம்மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.    

* அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், அவர் (இப்ராஹீம்), அல்லாஹ்வைத் தவிர சிலைகளை (க் கடவுளாக) நீங்கள் ஆக்கிக்கொண்டதெல்லாம், உலக வாழ்க்கையில் (அவர்கள்மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தால்தான்; பின்னர், மறுமைநாளன்று உங்களுள் சிலர் சிலரை நிராகரிப்பர்; உங்களுள் சிலர் சிலரைச் சபித்துக்கொள்வர்; (இறுதியில்) உங்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புதான். (அங்கு) உங்களுக்கு உதவியாளர் யாருமில்லை என்று கூறினார்.   (29: 25)


* நாம் இப்ராஹீமுக்கு முன்னரே (சிறுபிராயத்திலிருந்தே) அவருடைய நல்வழியைத் திண்ணமாகக்  கொடுத்தோம். மேலும், அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும், நீங்கள் வழிபடுகின்ற இந்த உருவங்கள் என்ன? என்று கேட்டபோது அவர்கள், எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.

அதற்கு அவர், திண்ணமாக நீங்களும், உங்களுடைய முன்னோர்களும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள் என்று கூறினார். அதற்கு அவர்கள், நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டுவந்திருக்கிறீரா? அல்லது (எங்களிடம்) விளையாடுகின்றீரா? என்று கேட்டார்கள். அப்படியல்ல! உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன். இதற்கு சாட்சி கூறுபவர்களுள் நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்று (இப்ராஹீம்) கூறினார்.

இன்னும், நீங்கள் புறங்காட்டித் திரும்பிச்சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்! (என்றும் கூறினார்). அவ்வாறே, அவர் அவற்றுள் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார். அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்). எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களுள் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள்.

அதற்கு (அவர்களுள் சிலர்), இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றிக் (குறை) கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்; அவருக்கு `இப்ராஹீம் என்று சொல்லப்படுகிறது என்று கூறினார்கள். அப்படியானால், அவரை மக்கள் முன்னிலையில் கொண்டு வாருங்கள். அவர்கள் (அவரை) நேரடியாகக் காணலாம் என்று கூறினார்கள். இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தாமே? என்று (அவர் வந்ததும்) அவர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இதுதான் செய்திருக்கும். எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள் என்று கூறினார்.  (இதற்கு பதில் கூறத்  தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) நிச்சயமாக நீங்கள்தாம் (இவற்றைத் தெய்வங்களாக நம்பிய) அநியாயக்காரர்கள் என்று பேசிக்கொண்டார்கள். பிறகு, அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக்கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள். இவை பேசமாட்டா என்பதைத்தான் நீர் திண்ணமாக அறிவீரே! (என்று கூறினர்).

(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்குத் தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்? என்று கேட்டார். சீச்சீ! உங்களுக்கும் நீங்கள் வழிபடுகின்ற அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் (கேடுதான்); நீங்கள் இதனை அறிந்து  கொள்ளமாட்டீர்களா? (என்று இப்ராஹீம் வினவினார்).  (இதற்கு) அவர்கள், நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்கள். (இப்ராஹீமைத் தீக்கிடங்கில் எறிந்தபோது) நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு என்று நாம் கூறினோம். மேலும், அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்.  (21: 51- 70)


* இன்னும் நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் வரலாற்றையும் எடுத்துரைப்பீராக! அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி, நீங்கள்  எதை வழிபடுகிறீர்கள்? என்று கேட்டபோது அவர்கள், நாங்கள் சிலைகளை வழிபடுகிறோம். நாம் அவற்றின் வழிபாட்டிலேயே நிலைத்திருக்கிறோம் என்று கூறினார்கள். (அதற்கு இப்ராஹீம்), நீங்கள் அவற்றை அழைக்கும்போது, (அவை காது கொடுத்துக்) கேட்கின்றனவா?;   அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா?; அல்லது தீமை செய்கின்றனவா? என்று வினவினார். (அதற்கு அவர்கள்) இல்லை. நாங்கள், எங்கள் முன்னோர்கள் இவ்வாறே (வழிபாடு) செய்யக் கண்டோம் என்று கூறினார்கள்.


அவ்வாறாயின், நீங்கள் எவற்றை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டார். நீங்களும், உங்கள் முன்னோர்களும் (எவற்றை வழிபட்டீர்கள் என்பதைக் கவனியுங்கள்!) நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே; அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்). அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நல்வழி காண்பிக்கிறான்; அவனே எனக்கு உணவளிக்கின்றான்.
அவனே என்னைப் பருகச் செய்கின்றான்; நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்; மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு, அவனே என்னை உயிர்ப்பிப்பான்; (நியாயத்)தீர்ப்பு  நாளன்று எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் விரும்பு கின்றேன். இறைவா! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக! மேலும், நல்லவர்களுடன் என்னைச்  சேர்த்துவைப்பாயாக! (26: 69-83)

* திண்ணமாக இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களுள் ஒருவரே ஆவார். அவர்  தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது,  அவர் தம் தந்தையையும் தம் சமூகத்தாரையும் நோக்கி, நீங்கள் எதனை வழிபடுகிறீர்கள்? எனக் கேட்டதையும், அல்லாஹ்வைத் தவிர பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? அவ்வாறாயின், அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம்தான் என்ன? என்று கேட்டதையும் (நபியே!) நீர் எண்ணிப்பார்ப்பீராக! பின்னர், அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். நிச்சயமாக நான் நோயாளியாக இருக்கிறேன் என்று கூறினார். எனவே, அவரை விட்டு அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர். அதன்பின், அவர்களுடைய தெய்வங்களின்பால் அவர் சென்று, (உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா? என்று கேட்டார். உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை? (என்றும் கேட்டார்). பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து(உடைத்து)விட்டார்.

(அவற்றை வழிபடுபவர்கள்) அவரை நோக்கி விரைந்து வந்தார்கள். (அவர்களை நோக்கி) அவர்,  நீங்களே செதுக்கியவற்றையா வழிபடுகிறீர்கள்? உங்களையும் நீங்கள் செய்த (இ)வற் றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான் என்று கூறினார். அதற்கு அவர்கள், இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள். (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களை இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம்.  (37: 83-98)



மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி

சனி, 7 ஆகஸ்ட், 2010

நூல் வெளியீட்டு விழா (தினமணி)



சென்னை ஆயிஷா பதிப்பகம் சார்பாக, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா நூலின் ஒரு பகுதியான கஸஸுல் அன்பியாவின் தமிழாக்கம் நபிமார்கள் வரலாறு முதல் பாகம் வெளியீட்டு விழா 06.08.2010 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு, தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.

பேராசிரியர், அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பி. ஜபருல்லாஹ் கான் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஹாஃபிழ் எம்.என். புகாரி திருமறை வசனங்களை ஓதினார். அதைத் தொடர்ந்துஆயிஷா பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர் மௌலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி வரவேற்புரை நிகழ்த்தினார்.  ஆயிஷா பதிப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜே. இக்பால் கான்  துவக்கவுரை நிகழ்த்தினார்.  மௌலவி அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி தம்முடைய தலைமையுரையில், ஆயிஷா பதிப்பகத்தார் தொடங்கியுள்ள இப்பணி வெகுவாகப் பாராட்டத்தக்கது. அரபியில் நூற்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கத் தகுந்த ஆட்கள் இல்லை. எனவே அரபிக் கல்லூரிகள் மொழிபெயர்ப்புக்காகவே ஒரு தனித்துறையைத் தொடங்க வேண்டும். மேலும், இவர்கள் தொடங்கியுள்ள இப்பணியைப்போல் மற்ற செல்வந்தர்களும் பொதுத்தொண்டு செய்ய முன்வர வேண்டும். அதற்கு அறிஞர்களும் செல்வந்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து, கவிக்கோ அப்துர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார். அவர் தம்முடைய உரையில், என் வீட்டில் ஒரு பிரசவம் நடந்ததைப் போன்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது. ஏனென்றால், ஆதாரப்பூர்வமான ஒரு வரலாற்று நூல் தமிழில் வராதா என நான் நீண்ட காலமாக ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய  ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் ஆயிஷா பதிப்பகத்தார் அதைக் கையில் எடுத்துக்கொண்டுச் செயல்படத் தொடங்கியுள்ளனர்; அவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். 
   அவருக்கு அடுத்து, தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், டாக்டர், பேராசிரியர், எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில், இந்நூல் மிகச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. கான் பாகவி கூறியதைப்போல், மொழிபெயர்ப்புக்கென்றே அரபிக் கல்லூரிகளில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். இப்பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். சமுதாய மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒவ்வொருவரும் பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து, டாக்டர் பி.எஸ். செய்யது மஸ்வூத் ஜமாலி நூல் அறிமுக உரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில், இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அல்பிதாயா வந்நிஹாயா எனும் இந்த வரலாற்று நூலை மிக நுட்பத்தோடு ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் நூஹ் நபியின் கப்பலைப் பற்றி ஆய்வுசெய்து கூறியுள்ள தகவல்களையும்  ஜூதி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நூஹ் நபியின் கப்பலை 1959ஆம் ஆண்டு அமெரிக்கத் தொல்லியல் துறை அறிஞர்கள் ஆய்வுசெய்து வெளியிட்ட தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது நான் அதிசயித்துப்போனேன். இரண்டும் ஒன்றாகவே உள்ளது என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து, மௌலவி, ஏ.எம். முஹம்மது இல்யாஸ்  ஃபாஸில் பாகவி வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில், ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் இஸ்லாமிய வரலாற்றைத் திரித்து எழுதி, அதையே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைத்துப் போதித்துவிட்டனர். இதனால் இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான சிந்தனையே மக்கள் மத்தியில் உள்ளது.  மேலும், ஆங்கிலேயர்கள், ஜிஹாத் எனும் அரபி வார்த்தைக்கு, போர் என்ற தவறான அர்த்தத்தைக் கூறி இஸ்லாமிய மார்க்கம் போரையே வலியுறுத்திக் கூறுகின்ற ஒரு வன்மையாக மார்க்கம் என்ற பொய்யான தோற்றத்தை உண்டாக்கியுள்ளனர். ஆனால், ஜிஹாத் எனும் வார்த்தைக்கு, போராட்டம் என்று பொருள் என்று கூறினார்.  எனவே இதுபோன்ற தவறான செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கிற நாம், நபிமார்களைப் பற்றிய சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின், `நபிமார்கள் வரலாறு எனும் இந்த நூலை வாங்கிப் படியுங்கள் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து,   மௌலவி, காஞ்சி அப்துல் ரவூப் பாகவியும், டாக்டர் அப்துல்லாஹ்வும் (பெரியார்தாசன்) வாழ்த்துரை வழங்கினர். டாக்டர், அப்துல்லாஹ் தம்முடைய உரையில், இந்நூல் பாமரனும் விளங்கிக்கொள்ளக்கூடிய, எல்லா மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், எளிய நடையில் இனிய தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய இந்நூலை மலிவுப் பதிப்பில் அச்சிட்டு எல்லோரும் வாங்கும் நிலையை உருவாக்க ஆயிஷா பதிப்பகத்தார் ஆவண செய்ய வேண்டும்; இந்நூல் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சென்னைப் பல்கலைக் கழக அரபித் துறைத் தலைவர், டாக்டர். பி. நிஸார் அஹ்மத்  நூலை வெளியிட்டார்.  எல்.கே.எ. சையித் அஹ்மத் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.  நிகழ்ச்சியில் பங்குகொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் ஆயிஷா பதிப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரான எம். சாதிக் பாட்சா நன்றியுரை கூறினார்.  
                                                                                                 -தருபவர்:   நூ. அப்துல் ஹாதி பாகவி

புதன், 4 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 3)

இப்ராஹீம் (அலை) செய்த வாதம்

* இவ்வாறுதான்,  நாம் இப்ராஹீமுக்கு, அவர் உறுதியான நம்பிக்கையாளர்களுள் ஒருவராக ஆவதற்காக வானங்கள் மற்றும் பூமியின் அரசாட்சியைக் காட்டினோம். (ஒரு நாள்) அவரை இரவு சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டார். (அப்போது)  இது என் இறைவன் (ஆகுமோ?) என்று கூறினார். பின்னர், அது மறைந்துவிடவே, மறையக்கூடியவற்றை நான் (இறைவனாக்க) விரும்பவில்லை என்று சொன்னார்.


பின்னர், முகிழ்க்கும் நிலவைக் கண்டபோது,  இதுதான் என் இறைவன் (ஆகுமோ?) என்று  கூறினார்.  அதுவும் மறைந்து விடவே, என் இறைவன் எனக்கு நல்வழி காட்டவில்லை யானால், நான் வழிதவறிய மக்களுள் ஒருவனாக ஆகிவிடுவேன் என்று கூறினார். பின்னர், உதிக்கும் சூரியனை அவர் கண்டபோது, இது மிகவும் பெரியது. (எனவே,) இது என்  இறைவன் (ஆகுமோ?)  என்று கூறினார்.  அதுவும் மறைந்து விடவே,  என்  சமூகத்தாரே! நீங்கள் (ஏக இறைவனுக்கு) இணைவைப்பதிலிருந்து நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன் என்று கூறினார்.
வானங்களையும் பூமியையும் (முன்மாதிரியின்றிப்) படைத்தவன் எவனோ அவனை நோக்கி, உண்மைவழியில் நின்று, நான் என் முகத்தைத் திருப்புகிறேன். நான் இணைவைப் போருள்  ஒருவன் இல்லை (என்றும் அவர் கூறினார்). அவருடன் அவருடைய சமுதாயத்தார் தர்க்கம்செய்தனர். அப்போது அவர், அல்லாஹ் எனக்கு நல்வழி காட்டியிருக்க, அவனைக் குறித்தா நீங்கள் என்னுடன் தர்க்கம் செய்கின்றீர்கள்?  நீங்கள் இணை கற்பிக்கின்றவற்றுக்கு  நான் பயப்படமாட் டேன். என் இறைவன் எதை நாடுகின்றானோ அதைத் தவிர (வேறு எதுவும் எனக்கு நேராது). என் இறைவனின் அறிவு எல்லாப் பொருட்களிலும் விரவியுள்ளது. (இதை)  நீங்கள் உணரமாட்டீர்களா? என்று கேட்டார்.


அல்லாஹ் எதைப் பற்றி உங்களுக்கு எந்தச் சான்றையும் அருளவில்லையோ அதை அவனுக்கு இணையாகக் கற்பிப்பது குறித்து நீங்கள் அஞ்சாமல் (நிம்மதியாக) இருக்கும்போது நீங்கள் இணை கற்பிப்பவற்றை நான் எவ்வாறு அஞ்சுவேன்? எனவே, நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (நம்)இரு பிரிவினர்களில் நிம்மதியாக இருக்க மிகவும் தகுதி உடையோர் யார்?  (என்றும் அவர் கேட்டார்).
யார் இறைநம்பிக்கை கொண்டு, தமது இறைநம்பிக் கையுடன் அநீதியைக் கலக்காது இருக்கிறார்களோ அவர்க ளுக்கே நிம்மதி உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர். இது நம்முடைய சான்றாகும். இப்ராஹீமுடைய சமுதாயத் தாருக்கெதிராக இதை நாம் அவருக்கு வழங்கினோம். நாம் விரும்புவோருக்குப் பதவிகளை உயர்த்துகிறோம்.  உம்மு டைய இறைவன் ஞானம் நிறைந்தோனும்  நன்கறிந்தோனும் ஆவான். (6: 75-83)


மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாயத்தினரோடு செய்த  தர்க்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், விண்ணில் காணப்படுகின்ற, ஒளிர் கின்ற விண்மீன்களின் வடிவங்கள் பற்றி அவர் அவர்களுக்கு விளக்கியுள்ளார். அவை இறைவனாக இருக்கத் தகுதியில்லை என்பதையும் அல்லாஹ்வுடன் அவை வணங்கப்படுவதற்குத் தகுதியில்லை என்பதையும் அவர் அம்மக்களுக்கு விளக்கினார். ஏனென்றால், அவை யாவும் படைக்கப்பட்டவை; அவை இறைவனால் ஆளப்படுபவை; அவை மாறிமாறி வருபவை; இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளவை. அவை நாள்தோறும் உதித்துப் பின்னர் மறைந்துவிடுகின்றன. ஒரு நாள் அவை இவ்வுலகைவிட்டே மறைந்துவிடும். ஆனால், அல்லாஹ் ஒருபோதும் மறையமாட்டான்; அவனை எப்பொருளும் மறைக்காது. மாறாக, அவன் நீங்காமல் நிலையாக இருப்பவன். அவனைத் தவிர எந்த இறைவனும் இல்லை. அவனைத் தவிர பரிபாலிப்பவன் யாருமில்லை என்பதைத் தெளிவாக்கினார்.

 முதலில் அவர் அவர்களுக்கு, நட்சத்திரங்கள் வணங்கப்படு வதற்குத் தகுதியில்லை என்பதை விளக்கினார். அது ஸுஹ்ர் என்ற நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. பின்னர், அவர் அதிலிருந்து முன்னேறி அதைவிட ஒளியாலும் அழகாலும் மிகைத்த சந்திரனை முன்னோக்கினார். பின்னர், அவர் அதிலிருந்து சற்று முன்னேறி அதைவிட ஒளியாலும் பருமனாலும் மிகைத்த பெரும் வடிவமான  சூரியனை முன்னோக்கினார். அது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளது;   அது  வேகமாகச் சுழலக்கூடியது என்று விளக்கினார்.

 * அல்லாஹ் கூறுகின்றான்: இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய சான்றுகளுள் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியா தீர்கள். அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால், அவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே சிரம் பணி யுங்கள். (41:  37)

இதனால்தான் அவர் கூறினார்:   பின்னர், உதிக்கும் சூரியனை அவர் கண்டபோது, இது மிகவும் பெரியது. (எனவே,) இது என்  இறைவன் (ஆகுமோ?)  என்று கூறினார்.  அதுவும் மறைந்து விடவே,  என்  சமூகத்தாரே! நீங்கள் (ஏக இறைவனுக்கு) இணைவைப்பதிலிருந்து நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன் என்று கூறினார்.


வானங்களையும் பூமியையும் (முன்மாதிரியின்றிப்) படைத்த வன் எவனோ அவனை நோக்கி, உண்மைவழியில் நின்று, நான் என் முகத்தைத் திருப்புகிறேன். நான் இணைவைப்போருள்  ஒருவன் இல்லை (என்றும் அவர் கூறினார்). அவருடன் அவருடைய சமுதாயத்தார் தர்க்கம்செய்தனர். அப்போது அவர், அல்லாஹ் எனக்கு நல்வழி காட்டியிருக்க, அவனைக் குறித்தா நீங்கள் என்னுடன் தர்க்கம் செய்கின்றீர்கள்?  நீங்கள் இணை கற்பிக்கின்றவற்றுக்கு  நான் பயப்படமாட் டேன். என் இறைவன் எதை நாடுகின்றானோ அதைத் தவிர (வேறு எதுவும் எனக்கு நேராது). என் இறைவனின் அறிவு எல்லாப் பொருட்களிலும் விரவியுள்ளது.  (6: 78-80) அதாவது அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்ற இந்தத் தெய்வங்களை நான் பொருட்படுத்தமாட்டேன். ஏனென்றால், அவை எந்தப் பயனும் தருவதில்லை; அவை எதையும் கேட்பதில்லை; அவை எதையும் விளங்குவதில்லை. மாறாக, அவை அல்லாஹ்வால் பரிபாலிக்கப்படுபவை; நட்சத்திரங்கள் உள்ளிட்டவை போன்றே அவையும் அல்லாஹ்வின் கட்டுப்பாட் டில் உள்ளவை. அல்லது அவை மனிதனால் செய்யப்பட்டவை; செதுக்கி எடுக்கப்பட்டவை; வடிவமைக்கப்பட்டவை.


நட்சத்திரங்களை மேற்கோள்காட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த இந்த அறிவுரை ஹர்ரான்வாசிகளுக்குத்தான்.  ஏனென்றால், அவர்கள்தாம் அந்த நட்சத்திரங்களையும் கோள்களையும்  வணங்கிக்கொண்டிருந்தார்கள் என்பது தெளிவான கருத்தாகும்.   இப்ராஹீம் நபி சிறுவராக இருந்தபோது, சரப் என்ற இடத்தில் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெற்றதாகக் கூறுபவர்களுக்குப் பதிலடியாகவே மேற்கூறப்பட்ட கருத்து அமைந்துள்ளது. இப்னு இஹாக் போன்றவர்கள் அவ்வாறு கருதியுள்ளனர். ஆனால், அவை எல்லாம் இரவேலர்களின் கட்டுக்கதைகள் ஆகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குறிப்பாக,  உண்மைக்கு முரணாக அமையும்போது அவை கட்டுக்கதைகளே ஆகும்.



மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010